Tuesday, September 13, 2011

ப.சிதம்பரம் ஒரு பொய்யர்: போட்டு தாக்குகிறார் ஹசாரே


புதுடில்லி: ஊழலுக்கு எதிராக போராட முன்வரும் காங்கிரஸ், பா.ஜ. அல்லாத எந்த ஒரு கட்சி அல்லது இயக்கத்திற்கும் ஆதரவு கொடுக்கத் தயார் என்றும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு பொய்யர் என்றும் காந்தியவாதி அன்னா ஹசாரே கூறினார். ஊழலுக்கு எதிராக 12 நாட்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற பின் முதன்முறையாக தனியார் டி.வி.‌சானல்ஒன்றிற்கு காந்தியவாதி அன்னா ஹசாரே அளித்த பேட்டி,

நாட்டை ஊழல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற ஒரே வழி ஊழலுக்கு எதிராக வலுவான ஜன்லோக்பால் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது தான். ஜன்‌லோக்பால் சட்டத்திற்கு எதிராக இருக்கும் எம்.பி.க்கள் யாராக இருந்தாலும் அவர்களின் வீட்டிற்கு முன்பு பஜனை பாடி போராட்டம் நடத்த எனது ஆதரவாளர்களுக்கு ஏற்க‌னவே நான் உத்தரவிட்டுள்ளேன். அது மட்டுமின்றி அந்த ஜன்லோக்பால் சட்டத்தை எதிர்க்கும் எம்.பி.க்கள் போட்டியிடும் தொகுதி முழுவதும் சென்று அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என வாக்காளர்களை வலியுறத்த சொல்லியுள்ளேன்.

பிரதமராக உள்ள மன்மோகன்சிங்கிற்கு அமைச்சர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது. எனினும் அவ‌ரது பேச்சை எந்த அமைச்சர்களும் கேட்பதில்லை. மாறாக ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களை பிரதமராக நினைத்து கொண்டு தனி ஆவர்த்தனம் செய்கின்றனர். பிரதமர் தற்போது அமைச்சர்களின் ரிமோட் கண்ட்ரோல் போல செயல்படுகிறார். மத்திய அமைச்சர் சிதம்பரம் ஒரு பொய்யர். ஊழல் புரிந்த அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை சாகும்வரை சிறையில் வைக்க வேண்டும்.

ஊழலுக்கு எதிராக போராட முன்வரும் காங்கிரஸ், பா.ஜ. அல்லாத எந்த கட்சிக்கும், இயக்கத்திற்கும் ஆதரவு தருவேன். ஆனால் அந்த இயக்கத்திற்கு நான் தலைவராக வர விரும்பமாட்டேன். ஏழைகள் நலனில் மிகவும் அக்கறை கொண்ட பிரதமர்களில் முன்னாள் பிரதமர் இந்திரா தான் சிறந்தவர். எங்களது போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்புடன் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லலை. இதை காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரம் செய்துவருகின்றனர். வரப்போகும் எந்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். ஊழலை நாட்டை விட்டு விரட்டுவது தான் என நோக்கமே தவிர வேறு ஒன்றுமி்ல்லை.பாராளுமன்றத்தின் நிலைக்குழுவில் பரிசீலனையில் உள்ள ஜன்லோக்பால் மசோதா நிறைவேறும் வரை ஓயமாட்டேன். மீண்டும் எனது போராட்டத்தை துவக்குவேன். இவ்வாறு ஹசாரே கூறினார்.

ரோஜப்பூ ‌கொடுத்து பிரசாரம்: ஊழலுக்கு துணைபோக வேண்டாம் என கூறி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்திற்கு சென்ற அன்னா ஹசாரே ஆதரவாளர்கள், வெள்ளை குல்லாய் அணிந்து , தங்களை அன்னா ஹசாரேயின் ஆதரவாளர் கூறி அறிமுகப்படுத்தி கொண்டு அங்கு பணியாற்றிவரும் அரசு அதிகாரிகளிடம் ஊழலுக்கு துணை போக வேண்டாம், ஊழலை ஒழிக்க ஒத்துழைப்பு கொடுங்கள் என வலியுறுத்தி அவர்கள் கையில் ஒரு ரோஜாப்பூவை கொடுத்து ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்தனர்.