Thursday, April 28, 2011

கனிமொழியும், கல்மாடியும் - எஸ்.ஆர்.சேகர் -


காமன்வெல்த் விளையாட்டு ஊழலுக்காக சுரேஷ் கல்மாடி நேற்று முன்தினம் கைது. நாளையோ அல்லது மே மாதம் 6ம் தேதியோ கனிமொழி கைதாகலாம். கனிமொழி கைதானால், அது, தி.மு.க.,விற்கு தேய்பிறை தான்.சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டது குறித்து, கருத்து தெரிவித்த பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, "ஒரு கூட்டமே கைது செய்யப்பட வேண்டிய இடத்தில், ஒருவர் தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்' என்று கூறியிருக்கிறார்.


காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியே குற்றங்களுக்குள் ஒளிந்திருப்பதால், கனிமொழி கைதானால், காங்கிரசும் காட்டிக் கொடுக்கப்படலாம். இருவருமே அனைத்து ஊழல்களிலும், பின்னிப் பிணைந்திருப்பதால், அரசியலிலும் கைதேர்ந்தவர்கள் என்பதால், ஒருவர் ஏற்படுத்தும் உராய்வு, இருவரையுமே சேர்த்து, "சந்திக்கிழுக்கும்' என்பதை இருவருமே அறியாதவர்கள் அல்லர்.


காமன்வெல்த் விளையாட்டு ஊழலும், "2ஜி' அலைக்கற்றை ஊழலும் பல ஒற்றுமைகளைக் கொண்டவை. இரண்டிலேயும், வெளியே தெரியும் முகங்கள் ஒன்று; வெளியே தெரியாத உண்மையான முகங்கள் அதிகம். இரண்டு ஊழல்களிலும் நாட்டின் மிகப்பெரிய, "தலைகள்' பங்கு பெற்றிருக்கின்றன.பெரிய இடத்து சம்பந்தம் - பெருந்தலைகளின் பங்கு இருப்பதாலேயே, கனிமொழியும், கல்மாடியும் சிறிதும் அச்சப்பட்டதாகத் தெரியவில்லை. கல்மாடி, தான் அனைவரையும் கலந்தாலோசித்தே முடிவெடுத்ததாக தைரியமாக சொல்கிறார். இதை உறுதிப்படுத்தும் வண்ணம், சி.பி.ஐ., விசாரணைக்குப் பின், அவர், மன்மோகன், சோனியா கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். மேலிடமும் தன்னோடு சேர்ந்து, "சிக்கி' இருப்பதாலேயே, தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் அவருக்கு உள்ளது.


இந்த விவகாரத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, நிதின் கட்காரி பெற்ற தகவலும், பண பரிவர்த்தனைகள், நிதி முடிவுகள் அனைத்தும், அமைச்சர்கள் குழு, அமைச்சரவை உப கமிட்டி, பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமருக்கு தெரிந்தே நடைபெற்று இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது."2ஜி' அலைக்கற்றை ஊழலிலும், கலைஞர், "டிவி'க்கு கொடுக்கப்பட்ட, 210 கோடி ரூபாயை பார்க்கும் போது, "தி.மு.க.,வின் விஞ்ஞானப்பூர்வ ஊழல்' பட்டம் தகுதி இழந்தது தெரிகிறது. ஆண்டு வருமானம் வெறும், 47 கோடி உள்ள கலைஞர், "டிவி' வெறும் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே முதலீடு கொண்ட, தன்னை விட மிகச்சிறிய இரண்டு நிறுவனங்களிலிருந்து, 210 கோடி ரூபாய் கடன் பெறுவது என்பது, தி.மு.க.,வின் விஞ்ஞானப்பூர்வ ஊழல் பெருமைக்கு ஒரு களங்கம். எங்கோ தப்பு நடந்திருக்கிறது; யாரோ தவறாக ஆலோசனை கூறியிருக்கின்றனர்.


சர்க்காரியா காலத்திலிருந்த விவேகம், இப்போது கருணாநிதியின் வாரிசுகளிடம் இல்லை. லாபம் வரும் என்று தெரிந்தே தான் ராஜா தொலைத் தொடர்பு அமைச்சராக, கனிமொழியால் ஆக்கப்பட்டிருப்பதாக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை சொல்கிறது. விவசாயத்திலிருந்து வருமானமில்லை, வாழ்வு நடத்த வழியில்லை என்பதால், தினசரி 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதே நாட்டில் ஊழல்கள் மூலம் ஆயிரம், லட்சம் கோடிகளை குவிப்பவர்களும் இருக்கின்றனர். இதற்கு எப்போது வரும் தீர்வு?

Wednesday, April 20, 2011

மதுரையின் "பதட்டம்' தணித்த 30 வயது இளைஞர்


தமிழக சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும், போலீஸ் அதிகாரிகள் உட்பட அனைவருக்கும், "டென்ஷன்' ஏறியது. "மதுரையில் டூட்டி போட்டு விடுவார்களோ...?' என, அச்சம் நிலவியது.


இப்படி பலரும் விலகியிருக்க விரும்ப, மதுரையில் சுமுகமாக தேர்தல் நடத்தி முடிக்க, எஸ்.பி.,யாக தேர்தல் கமிஷன் தேர்வு செய்தது 30 வயதே ஆன "ஆஸ்ரா கர்க்' இளைஞரைத்தான்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆஸ்ரா கர்க், பி.இ., எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்தவர். படித்து முடித்த கையோடு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று, 24 வயதில் ஐ.பி.எஸ்., அதிகாரியானார். வேலூரில் பயிற்சி எஸ்.பி., திருவாரூரில் கூடுதல் எஸ்.பி.,யாக பதவி வகித்து, தனது 28வது வயதில் திருநெல்வேலி எஸ்.பி.,யாக 2008ல் நியமிக்கப்பட்டார்.அங்கு பணியில் இருந்தபோது, கூலிப்படை கும்பல், மாமூல் வசூலிக்கும் ரவுடிகள், தாதாக்களின் பட்டியலை தயாரித்து ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்துக்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்தார். போதை மருந்து கடத்தல் கும்பல், ரவுடிகள், "குண்டர்' தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


மதுரை ஆறாவது சிறப்புக்காவல் படையின் கமாண்டராக கடந்தாண்டு ஆஸ்ரா கர்க் இடமாற்றம் செய்யப்பட்டார். பின், தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, மதுரை எஸ்.பி.,யாக கடந்த மார்ச் 22ல் பொறுப்பேற்றார்.கமிஷனராக பொறுப்பேற்றதுடன், தனது மொபைல் எண்ணை வெளியிட்டு, "புகார் தொடர்பாக யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் என்னிடம் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்' என, அறிவித்தார். இதன் விளைவு தினமும் 150 போன் அழைப்புகள். அத்தனைக்கும் பதிலளித்து, புகார் மீது தேவையான நடவடிக்கை எடுத்ததோடு, சட்டம் ஒழுங்கிலும் கவனம் செலுத்தினார். வாகன சோதனையில் கணக்கில் வராத மூன்று கோடி ரூபாயை அரசு கஜானாவில் சேர்த்தார். பணியில் நேர்மையாக இருந்தவர்களை பாராட்டியும், மெத்தனமாக நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்தார். தேர்தல் தொடர்பான வன்முறை, விதிமீறல் என 106 வழக்குகளை பதிவு செய்தார்.


தேர்தல் பணி குறித்து அவர் கூறும்போது, ""தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்டவர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததற்கு நான் மட்டுமே காரணமல்ல. போலீசார் உட்பட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் மட்டுமே இது சாத்தியமானது,'' என்றார் அடக்கமாக.ஆஸ்ரா கர்கிற்கு சபாஷ்!


"பல்டி' அதிகாரிகளுக்கு பறிபோன பதவிகள் : சட்டசபை தேர்தலில், தமிழகத்திலேயே வேறெங்கும் இல்லாத அளவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மதுரைதான். மேலூர் தொகுதியில் தி.மு.க.,வினர் தாக்கியதாக (உதவி தேர்தல் அதிகாரியான) தாசில்தார் காளிமுத்து தேர்தல் கமிஷனில் புகார் கூறினார். ஓரிரு நாளில் தாசில்தார் காளிமுத்து, தி.மு.க.,வினர் தன்னை தாக்கவில்லை என, "பல்டி' அடித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினார்.சில நாள் இடைவெளியில், காளிமுத்து தனது புகாரில் இருந்து, "ஜகா' வாங்கியதால், அவரது இடத்தில், சமூகநலத்திட்ட தாசில்தார் கங்காதரன் நியமிக்கப்பட்டார். இதனால் காளிமுத்துவும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். மதுரை கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியுமான ஆர்.டி.ஓ., சுகுமாறன், தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு பதிவு செய்யும்படி, தன்னை கலெக்டர் சகாயம் நிர்ப்பந்திப்பதாகக் கூறிவிட்டு, உடனடியாக மருத்துவமனையில் "அட்மிட்' ஆனார்.


இதன் தொடர்ச்சியாக தேர்தல் கமிஷனும் நடவடிக்கை மேற்கொண்டது. கலெக்டர் சகாயம் நேர்மையானவர் என கூறி, அவரை குற்றம்சாட்டிய ஆர்.டி.ஓ., சுகுமாறனை, கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக இடமாற்றம் செய்து, பின் சஸ்பெண்டும் செய்தது. அதன் பின் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் வீடு திரும்பினார். இப்போது பதவியில்லாமல் உள்ளார். தமிழக வாக்காளர்களை விட, "சும்மா' இருக்கும் இந்த அதிகாரிகள், தேர்தல் முடிவுகளை அதிகம் எதிர்நோக்கி உள்ளனர். அரசியல்வாதிகளைப் போல, இவர்களின் எதிர்காலத்தையும் தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர்

Tuesday, April 19, 2011

தமிழக சட்டசபை தேர்தல் நாள் ஜாதகம் : எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா


தேர்தல் என்று வந்துவிட்டால் கணிப்பு, வாக்காளர் மனநிலை, சர்வே என அடுத்தடுத்த விஷயங்களும் சகஜம். சமீபகாலமாக இந்த பட்டியலில் ஜோதிடமும் சேர்ந்துள்ளது. சில கட்சிகளில் வேட்பாளரின் தகுதி பெற இணைக்க வேண்டிய பட்டியலில் ஜாதகமும் கூட இடம்பிடித்துள்ளது.


ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஜாதகம் பார்ப்பதற்கு பதிலாக, தேர்தல் நடந்த நாள், நேரத்தை வைத்து, தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்று கணிக்கப்பட்ட செய்தித்துணுக்கு தற்போது, "இன்டர்நெட்'டில் படு பிரபலமாகியுள்ளது. அந்த சுவையான கணிப்பு இது:தமிழக சட்டசபை தேர்தல் புதன்கிழமை 13.4.2011 காலை 8 மணிக்கு சந்திரன் ஓரை, எமகண்டத்தில் ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. புதன்கிழமை புதன் நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திரத்தில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. புதன் நேரடியாக வலுவடையாமல் மறைமுகமாக நீச்சபங்க ராஜயோகம் அடைந்திருப்பதால், தேர்தலில் கடுமையான போட்டியிருக்கும். வெற்றி தோல்விக்குரிய ஓட்டு வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும்.அதற்கு அடுத்த நாள் 14.4.2011 அன்று பிறக்கும் கர வருடம், மிதுன லக்னத்தில் பிறப்பதாலும், கர வருடத்தின் ராஜாவாக சந்திரன் வருவதாலும், ஓட்டுப்பதிவு தொடங்கும் லக்னம், சுக்கிரனின் லக்னமான ரிஷப லக்னமாக வருவதாலும், லக்னாதிபதி சுக்கிரன் 10ம் இடத்தில் அமர்ந்து, கேந்திராதிபத்ய தோஷம் அடைவதாலும், தமிழக சட்டசபை கடைசி கூட்டம், கடந்த 10.2.2011 அன்று பரணி நட்சத்திரத்தில் நடைபெற்றதாலும், தேர்தல் நாளன்று சந்திரன் ஆட்சிப் பெற்று அமர்வதாலும், அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.


ஆனால், தி.மு.க., கட்சியின் ஜாதகமும், தி.மு.க., தலைவரின் ராசிக்கு தற்கால கோச்சார கிரகமும், தேர்தல் நாளன்று வலுவாக உள்ளது. எனவே, ஆளுங்கட்சியான தி.மு.க., கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றும். ஓட்டுப்பதிவு அன்று, லக்னம் சுக்கிரனாக வருவதாலும், சுக்கிரனே 6ம் வீட்டிற்கு அதிபதியாக வருவதாலும், கூட்டணி தர்மத்தையும் தாண்டி, உள்பகையால் தோற்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி மாறும். தனிப்பெரும் கட்சி அறுதிப்பெரும்பான்மை பெறுவது கடினம்.சனி பகவான், குரு, சூரியன், செவ்வாய், புதன், கேது ஆகிய ஐந்து கிரகங்களும் ஐந்து கிரகங்களையும் பார்ப்பதாலும், 7ம் வீட்டையும் சனி பார்ப்பதாலும், கூட்டணி ஆட்சி அமையும். தேசிய கட்சிகள் (காங்கிரஸ் - பா.ஜ.,) மற்றும் ஜாதிக் கட்சிகள் வலுவிழக்கும். தேர்தல் நாளும், ஓட்டு எண்ணிக்கை நாளும் புதனின் ஆதிக்கத்தில் வருவதால், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும். தபால் ஓட்டுகள் அ.தி.மு.க.,விற்கு சாதகமாகும்.


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, தற்சமயம் புதன் திசை நடைபெறுவதாலும், புதனின் ஆதிக்கத்தில் தேர்தல் நாளும், எண்ணப்படும் நாளும் வருவதாலும், அவரின் கட்சிக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அவர் மூலமாக அ.தி.மு.க., கூட்டணி வலுவடையும். புதிய வாக்காளர்களுக்கு உரிய கிரகமாக புதன் வருவதாலும், புதன் அ.தி.மு.க., தலைமைக்கு சாதகமாக இருப்பதால், புதிய ஓட்டுகள் அ.தி.மு.க., கூட்டணிக்கு 80 சதவீதம் வரை கிடைக்கும்.


கன்னி ராசிக்காரரான வைகோ, புதனின் ராசியில் பிறந்தவர். அவர் அ.தி.மு.க., கூட்டணியில் இல்லாததால், அ.தி.மு.க., கூட்டணிக்கு, புதனின், பாசிடிவ், கதிர்வீச்சு குறைகிறது. இதனால், அ.தி.மு.க., அதிக இடங்களை பெற முடியாது. ஆனால், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.மிருகசீரிடம் நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்த தி.மு.க., தலைவருக்கு, பூர்வபுண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் தற்சமயம் சனி அமர்ந்திருப்பதால், அவர் தனது பூர்வீக தொகுதியான திருவாரூரில் போட்டியிடுவதால், அவருக்கும், அவரது மைந்தனுக்கும் வெற்றி திணறி வரும். இது அவரது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...!

Monday, April 18, 2011

இருண்ட காலம் : இருளில் தடுமாறும் மக்கள் : இந்நிலை மாறுவது எப்போ?


அன்று, 2 மணி நேரம்; நேற்று, 3 மணி நேரம்; இன்று, 4 மணி நேரம்... என, மின்வெட்டு ஏற்படும் நேரத்தை நீட்டித்துக்கொண்டே போகிறது, மின்(தடை) வாரியம். இப்படியே போனால், "மின் சப்ளை இருக்கும் நேரம், மதியம் 2.00 - 4.00 மணி' என்ற அறிவிப்பு வந்தாலும் வரக்கூடும். தாறுமாறாக ஏற்படும் மின்வெட்டால் மக்கள், தொழில்துறையினர், விவசா யிகள் என பல தரப்பினரும் கொந்தளித்து போயுள்ளனர்.


தமிழகத்தில் வழக்கமாக கோடை காலத்தில் மட்டும் தினசரி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்படும். சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மின் உற்பத்திக்கும், தேவைக்குமான இடைவெளி அதிகரித்தது. அரசு மின் வினியோகம் குறித்து சரியாக திட்டமிடாததால் மின்வெட்டு அதிகரித்தது. குறிப்பாக 2008ம் ஆண்டு முதல் மின்வெட்டு தலைவிரித்து ஆடுகிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மாவட்டத்தில் ஸ்பின்னிங் மில், ஜின்னிங் பேக்டரி, விசைத்தறி, பவுண்டரி, இன்ஜினியரிங் தொழிற்சாலை, கிரைண்டர், மிக்சி உற்பத்தி நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் மற்றும் இதர உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும்.


இந்நிறுவனங்களில் மின்வெட்டால் உற்பத்தி இழப்பு, ஜெனரேட்டர் பயன்படுத்துவதால் கூடுதல் செலவு, மின்வெட்டுக்கு ஏற்ப தொழிலாளர்களின் வேலை நேரங்களை மாற்றுவதால் ஏற்படும் பாதிப்பு, ஜெனரேட் டருக்கான புதிய முதலீடு என பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தினமும் மூன்று மணி நேரம் மின்வெட்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் உயர்அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மாலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை மின்சாரம் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர இரவில் இரண்டு முறை தலா அரை மணி நேரமும், பகலிலும் அரை மணி நேரமும் மின்வெட்டு ஏற்படுகிறது. தினமும் 9 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தொழிற்சாலைகள் திணறி வருகின்றன.இதேபோல் பருவ மழை குறைவு, நிலத்தடி நீர் உபயோகம் அதிகரிப்பு ஆகியவற்றால் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது.


எனவே தினமும் ஆறு மணி நேரம் கிணறு மற்றும் போர்வெல் மோட்டார்களை இயக்கினால் மட்டுமே பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். ஆனால், எந்த நேரத்தில் விவசாய மோட்டார்களுக்கு மின்சாரம் சப்ளையாகும் என்றே தெரியாத நிலை நீடிக்கிறது. இதனால் பல ஊர்களில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்கின்றன. வீடுகளில் தினமும் மூன்று மணி நேரம் மின் வெட்டு என அறிவிக்கப்பட்டு, தினமும் பல முறை ஆறு மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இரவில் தூக்கமிழக்கும் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்; மின்வாரியத்துக்கு சாபம் விடாதது தான் குறை.


விளம்பரத்துக்கு விரயம்: வீடுகளுக்கான மின் சப்ளையில் அடிக்கடி வெட்டு ஏற்பட்டு மக்கள் அவதியுறும் நிலையில், கோவை நகர், புறநகர் பகுதிகளின் முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் நள்ளிரவு நேரத்திலும் ஒளிருகின்றன; விளம்பர பலகைகளின் எண்ணிக்கை கோவை நகரில் மிக அதிகம். மக்கள் நடமாட்டம் அறவே இல்லாத இரவு நேரத்திலும் விளம்பர பலகைகள் அதிகளவு மின்சாரத்தை குடித்தவாறு ஓளிருகின்றன. அதே வேளையில், பல பகுதிகள் மின் சப்ளையின்றி இருளில் மூழ்கி கிடக்கின்றன. மின் சப்ளை சீராகும் நாள் வரை (!) இரவில் விளம்பர பலகைகளுக்கான மின் சப்ளையை நிறுத்தினால், விரயமாவதை தடுக்கலாம்.


நெருக்கடியில் மில்கள் : சரமாரி மின்வெட்டு குறித்து அன்னூர் ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கூறியதாவது:பஞ்சு விலை ஒரு பேல் 62 ஆயிரத்தை எட்டி விட்டது. ஆனால் நூல் விலை அதற்கு ஏற்ப உயரவில்லை. வங்கி கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் சம்பளம் 180லிருந்து 200 ரூபாயாக உயர்ந்து விட்டது. பஞ்சு, நூல் ஆகியவற்றுக்கான போக்குவரத்து செலவும் கூடி விட்டது. ஸ்பின்னிங் மில்கள் லாபமில்லாமல் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மில்கள் மொத்த உற்பத்தி திறனையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் வழங்கும் மின்சாரத்துக்கு விற்பனை வரி சேர்த்து ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 ஆகிறது.


ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொழிற்சாலைக்கு இதை விட குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இங்கு கூடுதல் கட்டணம் வசூலித்தாலும், பகலில் மூன்று மணி நேரம், மாலையில் நான்கு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் என அறிவிக்கப்பட்ட எட்டு மணி நேர மின்வெட்டுடன், அறிவிக்கப்படாமல் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதால், நூல் அறுந்து விடுகிறது. மீண்டும் மின் சப்ளை வந்தவுடன் இயந்திரங்கள் முழுஅளவில் இயங்க மேலும் அரை மணி நேரம் தேவைப்படுகிறது. மில்லில் முக்கிய பிரிவை மட்டும் ஜெனரேட்டரில் இயக்க 22 லட்சம் ரூபாய்க்கு ஜெனரேட்டர் வாங்க வேண்டி உள்ளது. முழு அளவில் இயக்க 10 ஆயிரம் ஸ்பிண்டில் உள்ள மில்லுக்கு 50 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. ஜெனரேட்டர் பயன்படுத்தி இயக்கினால் ஒரு யூனிட்டுக்கு 13 முதல் 14 ரூபாய் செலவாகிறது. இந்த அளவுக்கு கூடுதலாக செலவு செய்து நூல் உற்பத்தி செய்தால் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நம் பகுதியில் பருத்தி மிக குறைவாக உற்பத்தியாகிறது.


எனவே லாரி வாடகை கொடுத்து ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபிலிருந்து வாங்க வேண்டி உள்ளது. உற்பத்தியாகும் நூலையும், லாரி வாடகை செலவழித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிகமுள்ள குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டி உள்ளது. இவ்வளவு கூடுதல் செலவையும் சமாளித்து மில்களை இயக்கி வருகிறோம். இந்நிலையில் தற்போதுள்ள மின்வெட்டால் மில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


"மின் தடை வாரியம்': மக்கள் ஆவேசம் :


துளசியம்மாள், (குடும்பத்தலைவி): எனது வாழ் நாளில் இப்படியொரு மின்வெட்டை கண்டதே கிடையாது. காலை, இரவு நேர மின் தடையால் சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகள் பாதிக்கப்படுகின்றன. கோடைகாலத்தில் இரவு நேரத்தில் ஏற்படும் திடீர் மின்தடையால் தூக்கம் கெடுகிறது.


சங்கர் (தொழிலாளி): கடுமையான மின்வெட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட் டுள்ளனர். கோடை காலம் என்பதால், மின்சாரத்தின் தேவை அதிகரித்திருக்கிறது. பேன், ரெப்ரிஜிரேட்டர், "ஏசி', "ஏர் கூலர்' உள்ளிட்ட சாதனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவர். இதனால், மின்தேவை அதிகரிக்கும். மின் தேவை அதிகரிக்கும் போது உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லாவிடில் மின்தடை நேரத்தை நீட்டிப்பதை தவிர அரசுக்கு வேறு வழி கிடையாது. முடிந்த வரை மின்சார விரயத்தை மக்கள் தவிர்க்க வேண்டும். தற்போது ஏற்பட்டு வரும் பல மணி நேர மின்வெட்டால் மக்கள் சிரமப்படுகின்றனர்.


பால்பாண்டி: இரவு நேர மின் தடையால் குழந்தைகள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இந்த நிலை எப்போது மாறுமோ என்ற எதிர்பார்ப்பும், கவலையும் அதிகரித்துகொண்டே போகிறது. குளிர் காலத்தில் மின்தடை இருந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம். கோடையில் மின் தடை ஏற்பட்டால் என்ன செய்ய முடியும்? மின் தடைக்கு யார் காரணமென ஆட்சியாளர்களும், எதிர்கட்சியினரும் பட்டிமன்றம் நடத் துவதை கைவிட்டு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். தற்போதுள்ள மின் தடை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும், இப்பிரச்னைக்கு மின்வாரியம் எவ்வாறு தீர்வு காணப்போகிறது, அதற்கு எவ் வளவு ஆண்டுகள் பிடிக்கும் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.


பிரபு (விவசாயி): மின் தடையால் பயிர்களுக்கு முறையாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. விளைச்சல் பாதிக்கப்படுகிறது; பயிர் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம் இருந்தால் மோட் டாரை இயக்கி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். மும்முனை மின்சாரம் இல்லாதததால் மோட்டாரை இயக்க முடிவதில்லை. விளைச்சல் குறையும் போது பொருட்களின் விலை உயருகின்றன. இதனால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.


டாக்டர் சிவசாமி (விவசாயிகள் சங்க தலைவர்): பகலில் 6 மணி நேரமும், இரவில் 8 மணி நேரமும் மின் வினியோகம் இருக்க வேண்டும். ஆனால், இரவில் விவசாயத்துக்கு 2 மணி நேரம் கூட மின்சாரம் இல்லை. பயிர்கள் காய்ந்து விட்டன. இதே நிலை நீடித்தால் 70 சதவீத பயிர்கள் அழிந்து விடும். அரசு நிர்வாகம், தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டில் உள்ளதால் எங்களின் குமுறுலை, பிரச்னைகளை யாரிடம் போய் சொல்வது என தெரியவில்லை. வீடுகளில் இரவில் மின்வெட்டு ஏற்படுவது மிக கொடுமையானது. தூக்கமில்லாமல் கொசுக்கடியில் அல்லாட வேண்டியுள்ளது. இப்பிரச்சனைக்கு மாநில அரசை மட்டும் குறைகூறி பலனில்லை. மத்திய அரசின் கீழ் இயங்கும் மின்சார ஓழுங்குமுறை ஆணையமும் பொறுப் பேற்க வேண்டும். சென்னைக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் அனைத்து இடங்களுக்கும் மின்சாரத்தை சமமாக பகிர்ந்து வழங்க வேண்டும்.


தியாகு ("புதிய வெளிச்சம்' நிர்வாகி): மின்வெட்டு, அரசின் இயலாமையை காட்டுகிறது. மின்வெட்டின் போது பின்பற்றப்பட வேண்டிய புதிய மின் கொள்கை உருவாக்கப்பட்டு அமுல்படுத்த வேண்டும். மின்சாரம் எப்போது வரும், போகும் என தெரியவில்லை. இக்கொடுமையை யாரிடம் போய் சொல்வது எனவும் தெரியவில்லை.


ராமசாமி (ஒர்க்ஷாப் உரிமையாளர்): அறிவிக்கபட்ட மின்தடை சரியான நேரத்தில் "கட்' செய்யப்படுகிறது. மறுபடியும் திரும்பி வருவது எப்போது என தெரிவதில்லை. திடீரென "கரன்ட்' கட்டாவதால் லேத்தில் "செட்டிங்' மீண்டும் போடவேண்டும். இதனால், உற்பத்தியும் பாதிக் கப்படுகிறது; காலமும் விரையமாகிறது. அரசும், மின் வாரியமும் தொழில்களை நசிவடைய காரணமாகிவிட்டன.


சம்பத்குமார் (தொழிலதிபர்): ஏற்கனவே தொழிலாளர் பற்றாக்குறை, சம்பள உயர்வு ஆகிய பிரச்னைகளால் தொழில் பாதிப்படைந்துள்ளது. தற்போது நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் தொழிற்சாலையை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்தடையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு "ஆர்டர்களை' குறித்த நேரத்தில் கொடுக்க முடிவதில்லை. "ஜெனரேட்டர்' வைத்து இயக்கினாலும் நஷ்டம்தான் ஏற்படுகிறது. மின்தடையால் சிறு மற்றும் குறுந்தொழில் செய்வோர் கடும் பாதிப்படைந்துள்ளனர்.


குமரேசன் : தேர்வு காலங்களில் மின்வெட்டு இருக்காது என அறிவித்தனர். ஆனால், தேர்வின் போதும் மின்வெட்டு ஏற்பட்டது. வீடுகளில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பிரிட்ஜ் உள்ளிட்டவை பழுதடைந்து விட்டன. காலை 6.00 மணிக்கே மின்வெட்டு ஏற்படுவதால் வேலைக்கு செல்பவர்கள் சமைக்க கூட முடிவதில்லை.


வில்சன் (தனியார் நிறுவன ஊழியர்): காலையில் எழுந்தது முதல் இரவில் தூங்கச் செல் லும் வரை எப் போது கரன்ட் போகுமோ என்ற கவலை எங்களுக்கு. குறிப்பிட்ட வேலையை குறித்த நேரத்தில் முடிக்காவிட்டால் மாலை முழுவதும் பரபரப்புக்கு ஆளாகி, சிரமப்பட வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம், அறிவிக்கப்பட்ட நேரத்தில் மட் டுமே மின்தடை ஏற் பட்டது. தற்போது பகல், இரவு என சரமாரியாக மின்தடை ஏற்படுகிறது. தமிழகத்தை பொருத்தவரை இந்த காலம், இருண்ட காலம் தான். மின் வாரியத்தை "மின் தடை வாரி யம்' என்றே அழைக்கலாம்.


சாவித்திரி (தனியார் நிறுவன ஊழியர்): மின் தடையால் வீட்டு சமையல் வேலைகளை குறித்த நேரத்தில் முடித்து வேலைக்கு செல்ல முடிவதில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் சமையல் மற்றும் துணி துவைப்பது என்று எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை. "கரன்ட்' இருக்கும்போது வேலைகளை முடிக்க வேண்டியுள்ளது. கரன்ட் பிரச்னை தினமும் ஓயாத தொல்லை.

Sunday, April 17, 2011

வெல்லட்டும் புனித யுத்தம்: உரத்த சிந்தனை, எம்.ஆர். இராமலிங்கம்


காந்தியவாதி அன்னா ஹசாரே, இந்திய நாட்டையே கலக்கி விட்டார். அவரது உண்ணாவிரதப் போராட்டம், சமுதாயத்தில் பல்வேறு தரப்பினரை சிந்திக்க வைத்திருக்கிறது. இவர் வலியுறுத்தும் லோக்பால் மசோதாவை அரசியல்வாதிகள் உயிரோட்டமாக கொண்டு வருவரா என்பது இனி தெரியும். அதற்கான சட்டவரைவு மசோதாவை, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு முடிவு செய்யும்.


மொரார்ஜி தேசாய் அரசில் இருந்த, சட்ட அமைச்சர் சாந்தி பூஷண் மற்றும் அவர் மகனும், சிறந்த சட்ட அறிஞருமான பிரசாந்தி பூஷண் ஆகிய இருவரும், இதற்கு உருத் தரலாம். பிரசாந்தி பூஷண் சுபாவமே, நியாயத்திற்கு புறம்பான சட்ட நெறிமுறைகளை, பணத்திற்கு ஆசைப்பட்டு செய்யாதவர். சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள, "ஆம்புட்ஸ்மென்' பாணியில் இந்த லோக்பால் மசோதா உருவாகும்போது, அது சமுதாயத்தில் புரையோடிப் போய் இருக்கும் லஞ்சத்தை அடியோடு தீர்க்குமா என்ற கேள்வி எழுகிறது. சுதந்திர இந்தியாவில் பெரும் வளர்ச்சி பெற்ற பெரிய கம்பெனிகள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் இழுத்தடிக்கும், தாமதித்த நீதி நடைமுறைகள் எல்லாமே, லஞ்சம் வளரக் காரணமாக, ஏதாவது ஒரு விதத்தில் அமைந்திருக்கின்றன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சீர்திருத்தம் செய்து, அரசை இயக்கும் பொறுப்பில் உள்ளவர்கள், கிரிமினல் தொடர்பு இல்லாத நடைமுறையில் தேர்வு செய்யப்படும் வழி காண, இன்னமும் தேர்தல் கமிஷன் காத்திருக்கிறது. இதில் சீர்திருத்தம் கொண்டுவரச் சட்டம் இயற்றாத போது, இந்த மசோதா மட்டும், ஒரே நாளில் நாட்டை மாற்றிவிடுமா என்ன?


சுதந்திரப் போராட்ட காலத்தில், காந்தி மேற்கொண்ட சத்யாகிரக நடைமுறை, ஏழை முதல், பணக்காரர்களை ஒரே கருத்தில் கொண்டு வந்து இயக்க வைத்த நடைமுறை. அன்று எல்லாருக்கும் பொது எதிரி, "பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி!' சுதந்திரம் பெற்ற பின், எல்லாரும் இந்நாட்டு மன்னர்; அதில் கடமை பொறுப்புகள், காற்றில் பறந்தன. நேரு பிரதமராக இருந்த போது, அவர் தவறைச் சுட்டிக்காட்ட அல்லது இடித்துரைக்க, சர்தார் படேல் இருந்தார். அவர் மறைவுக்குப் பின், கோவிந்த வல்லப பந்த், மகாவீர் தியாகி போன்றோர் இருந்தனர். ஆசார்ய கிருபளானி போன்ற அப்பழுக்கற்ற தலைவர்கள் கருத்தை, நேரு கேட்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. அவசர நிலைக்காலத்தில், ஜனநாயகமே தடம்புரண்ட போது, சர்வாதிகார உணர்வு மேலோங்கிய போது, பொதுமக்கள் கருத்துக்கு உருவம் தந்தவர், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன். அவர் கூறியது முழுமைப்புரட்சி. அந்த முழுமைப் புரட்சியை ஆதரித்த லாலு பிரசாத் எப்படி, மற்றொரு அரசியல்வாதியான நிதிஷ் குமார் எப்படி? ஒப்பிட்டுப் பாருங்கள்.


நம் தமிழகத்தில், மாபெரும் தலைவரான காமராஜர், 1975, அக் 2ம் தேதி அன்று காலமானார். அவர், அவசர நிலைக்கு எதிரி. அவரது செயலராக இருந்த, எஸ்.வெங்கட்ராமனிடம், அன்று காலையில் அவர் முதலில் கேட்ட கேள்வி, "ஜெ.பி.யை சிறையில் இருந்து இந்திரா விடுவித்தாரா?' என்பது தான். அவரிடமிருந்து, "இல்லை' என்று பதில் வந்ததும், அவர் மனம் அதிக வேதனைப்பட்டு நொந்தது. காரணம், காங்கிரசை நல்ல இயக்கமாக வளர்த்த அவருக்கு, இந்திராவின் செயலில் ஒப்புதல் இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியில், துதிபாடும் கூட்டத்தின் கை மேலோங்கி விட்டது. அண்ணாதுரை, "திராவிட நாடு' கேட்ட தலைவர்; வித்தியாசமானவர். தலைவர் என்று ஏற்றுக் கொண்ட ஈ.வெ.ரா., இளம் பெண்ணை, இரண்டாவது மனைவியாக மணம் செய்ததை ஆதரிக்காமல், வேறுபாதை கண்டவர். பின்பு அரசியலில் வெற்றி பெற்றபின், குறிப்பாக ராஜ்யசபா எம்.பி.,யான பின், "இந்தியா என்பது பெரிய தேசம். அதில் மக்களை ஈர்க்கும் தலைவர்கள் உள்ளனர்' என்று உணர்ந்து செயல்பட்டவர். அவரது ராஜ்யசபா பேச்சுக்களில் சில அவற்றுக்கு சாட்சி. அதனால், அவர் ஓரளவு மனச்சாட்சிப்படி நடந்ததால், ஊழலில் திளைக்கவில்லை; ஆதரிக்கவும் இல்லை. இதை வேறு விதமாகச் சொன்னால், ஆளுவோருக்கும் சரி, பெரிய நிர்வாகத்திலும், பொதுப் பணி ஆற்றும் இயக்கங்களுக்கும், இந்த மாதிரி முற்றிலும் நேர்மையான, விஷயம் தெரிந்த, உலக நடப்புகளுடன் வழிநடத்த, ஒரு சக்தி தேவை. அது தனி மனிதராக அல்லது இயக்கமாக அமையலாம். அதை ஆங்கிலத்தில், "கிரிட்டிக்கல் இன்சைடர்' என்பர்.


காந்தி, தன் சுயசரிதையில் அதை, "அந்தராத்மா' என்பார். தமிழில் அதை, "உள்மனதின் நல்ல ஒலி' என்று கூட கூறலாம். வள்ளுவர் அதை, "பூதங்கள் ஐந்தும் அனைத்தே நகும்' என்று துறவு அதிகாரத்தில் கூறுவார். இன்றைய நிலையில், அந்த பழைய விளக்கங்கள் அப்படியே பொருந்தாது. ஜனநாயகம், உலக அளவில் இணைந்த பொருளாதாரம், இணையதள செய்தித் தொடர்பு என்று பரந்து, உலகமே சுருங்கிய பின், அதற்கேற்ற நடைமுறை தேவை. இந்திய மண்ணின் சுபாவமே, பொறுத்திருந்து பொங்கி எழுவது என்பதுதான். அதே சமயம், எல்லாரும் பின்பற்றும் தலைவர் என்பவர், இந்த மண்ணை ஒட்டிய நடைமுறைகளைப் பின்பற்றினால், அதை மக்கள் அப்படியே ஏற்பர். அதற்கு ஹசாரே தற்போது, முதலில் வடிவம் தந்திருக்கிறார். அதனால், அவரே தன் பேட்டியில், "இப்போது தான் பயணம் தொடங்கியிருக்கிறது' என்கிறார். இப்பயணம் எந்த அளவு உருப்பெறும் என்பது, வரும் சுதந்திர நன்னாளுக்குப் பின் தெரியும். அதுமுழு வெற்றி பெற்றால், நம்நாட்டிற்கு, பாமர மக்களுக்கு கிடைக்கும் சுதந்திர தினப் பரிசு. email: ramalingamcff@gmail.com


எம்.ஆர். இராமலிங்கம், பத்திரிகையாளர்


தினமலர்

Saturday, April 16, 2011

ஒரு ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழலா?


சட்டசபை தேர்தலில், 80 சதவீதத்திற்கு அதிகமாக மக்கள் ஓட்டளித்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்பதா? ஆட்சியாளர்கள் மீதிருந்த அதிருப்தி என கொள்வதா? வாக்காளர்கள் கடமை இதோடு முடிந்து விட்டதா? நாம் யாரை தேர்வு செய்ய ஓட்டளித்து இருக்கிறோம்? அடுத்த ஐந்து ஆண்டுகள் எந்த ஊழல் கட்சி கையில் அதிகாரம் போகப் போகிறது?


தமிழ்ப் பண்பாடு, நாகரிகம், கலாசாரம், ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, "குடவோலை' ஓட்டு முறை மூலம், ஜனநாயகத்தை உலகத்திற்கு கற்றுத் தந்தவர்கள் தமிழ் மன்னர்கள். சர்வ அதிகாரமும் பெற்றவன் மன்னன். அனைவரும் அவன் கொடை கீழ் தான் என்றிருந்த போதும், தமிழ் மன்னர்கள் ஜனநாயகத்தைப் போற்றி வந்திருக்கின்றனர். குற்றமிழைத்தவர்கள், கொலைகாரர்கள், குடிகாரர்கள், சமூக அந்தஸ்து இல்லாதவர்கள், தனக்குப் பின் தன் வாரிசு என்போருக்கெல்லாம் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லை என, அன்றே நிர்ணயித்தவர்கள் தமிழர்கள். ஆனால், இன்று அவைகள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது கண்டு, நெஞ்சம் கனக்கிறது. அன்றைய 10ம் நூற்றாண்டில் மட்டுமல்ல, இன்றைய, 21ம் நூற்றாண்டிலும் தமிழகம் தலை நிமிர்ந்து தான் நின்றது. உலகின் மிகப்பெரும் ஐ.டி., நிறுவனங்கள், நாசா போன்ற விண்வெளி அமைப்புகள், தமிழர்களையும், சீனர்களையும் தான் தங்கள் நிறுவனங்களுக்கு தேர்வு செய்தனர். தமிழர்களின் அறிவுத்திறன், வேகம், முற்போக்கு சிந்தனையே இதற்கு காரணம் என்று பில்கேட்ஸ் முதலானோர் கூறினர்.


இத்தகைய பெருமை பெற்ற தமிழகம், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் புரிந்து தமிழ், தமிழன் என்று பேசி, நம்மை ஏமாற்றி, உலகம் நம்மை எள்ளி நகையாட வைத்த கட்சிகளால், இன்று, தலைகுனிந்து நிற்கிறது. ஓட்டளித்த 80 சதவீத மக்கள், இன்றைய ஆட்சியாளரை மாற்றிவிட்டால், இந்த நிலை மாறி விடுமா? தமிழகம் மீண்டும் தலைநிமிர்ந்து விடுமா? ஆட்சியாளர்களுக்கு நாம் அதிகாரம் வழங்குகிறோம், பொறுப்பு கொடுக்கிறோம். அதற்கு ஆட்சியாளர்கள், மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். அவர்கள் பதில், ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தலின் போது மட்டும் தான் இருக்கிறது என்பதும் ஒரு காரணம். மக்கள் நலனுக்காக ஆட்சி செய்ய வேண்டிய நல்லவர்கள் கிடைக்காததால், வாக்காளர்களும், உண்மையான ஆட்சி மாற்றத்தை செய்ய முடியாமல், இதுவரை, ஒரே தோசையை திரும்பத் திரும்ப, திருப்பிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன தீர்வு? புதிய ஆட்சியாளர்களை கொண்டு வர முடியாதா? ஆளும் கட்சியின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த சட்டசபைக்குள்ளும், சட்டசபைக்கு வெளியேயும் ஒரு மூன்றாவது சக்தி வேண்டும். அது தரமான, தகுதியான, நிரூபிக்கப்பட்ட, மக்கள் நலம் விரும்பும் சக்தியாக இருக்க வேண்டும். நீதிபதிகள், தேர்வாணைக் குழு நிர்வாகிகள், பல்கலைக் கழக துணைவேந்தர்கள் என்பன போன்ற பல்வேறு மக்கள் நல முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில், ஆளும் கட்சியின் ஜால்ராக்கள் அல்லது தகுதியில்லாதவர்கள் நியமிக்கப்படுவதைத் தடுக்க, இந்த மூன்றாவது சக்தி சட்டசபைக்குள் வர வேண்டும்.


சட்டசபைக்கு வெளியேயும் ஒரு மூன்றாவது சக்தி தேவை. அதுவும், தரமும், தகுதியும் வாய்ந்த அரசு சாரா பொது நல அமைப்பாக இருக்க வேண்டும். இன்று ஊழலுக்கு எதிராக, இந்தியாவை உலுக்கிய, இளைஞர்களை கவர்ந்த சமூக ஊழியர் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் மாதிரியான ஒரு காவல் அமைப்பு வேண்டும். அதில் பொதுமக்கள் பெருமளவு பங்கு கொள்ள வேண்டும். இந்த சமூக அமைப்பிலிருந்து பாதி பேர், அரசின் பிரதிநிதிகள் பாதி பேர் என்று சேர்ந்த குழுவே, அரசின் கொள்கைகளை முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவுகளே இறுதியில் சட்டமாக்கப்பட வேண்டும். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆட்சியாளர்களின் செயல்பாட்டுக்கு ஓட்டுரிமை மூலம் மக்கள் தீர்ப்பளிக்கின்றனர். அதுவும், இன்றைய அரசுக்கு தண்டனை தரப்படுகிறதே தவிர, நாளைய நல்ல அரசு தேர்வுக்கான தீர்ப்பாக அது இருப்பதில்லை. இந்நிலை மாற வேண்டும் என்றால், அரசின் ஐந்து ஆண்டு கால செயல்பாட்டிலும், மக்களின் பங்கும், பங்களிப்பும் இருக்க வேண்டும். ஓட்டுரிமை பயன்படுத்தும் போது மட்டுமே வாக்காளர்களின் பங்கு அரசியலில் இருக்கிறது என்ற நிலை உள்ளதாலேயே, இம்மாதிரி ஊழல் அரசுகள் வந்து போகின்றன. அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை. உள்ளொன்றும், வெளியொன்றும் என இரு முகங்களில் உள்ளதை, "விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது.


அரசை யாரெல்லாம் நடத்துகின்றனர்? தமிழ், தமிழன், இந்தியன் என்போரெல்லாம், இந்தியாவின் இறையாண்மையை எப்படி வெளிநாட்டிற்கு விற்கின்றனர்? பன்னாட்டு கம்பெனிகள் எப்படி இந்திய அரசுகளை ஆட்டிப் படைக்கின்றன? இவையெல்லாம் விக்கிலீக்ஸ் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த நிலை தொடராமல் இருக்க, அரசின் கொள்கை முடிவு எடுப்பதில், அதை அமல்படுத்துவதில், வாக்காளர்களாகிய நம் பங்கு இருக்க வேண்டும். அதுவும், ஆட்சி செய்யும் ஐந்து ஆண்டு காலமும் இருக்க வேண்டும். இதற்கு நம் உரிமைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், ஜனநாயக தத்துவத்தை குடை சாய்க்கும் ஆட்சியாளர்களை தடுத்து நிறுத்த முடியும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இது சாத்தியம். இதில், பத்திரிகை, ஊடகங்கள் பங்கு மகத்தானது. அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை நான்கே நாட்களில் உலகறியச் செய்தது ஊடகங்கள் தான். இதே ஊடகங்கள் தான், தரமுள்ள, தகுதியாக மூன்றாவது சக்தியை சட்டசபைக்குள் கொண்டு செல்ல காரணமாக இருக்க வேண்டும். சட்டசபைக்கு வெளியே வலிமையான மக்கள் சக்தி கொண்ட, தகுதியான சமூக குழுக்களை உருவாக்க பத்திரிகைகள் உதவ வேண்டும். இந்த இரண்டும் நடக்கும்போது, ஊழல் பறந்தோடும்; நேர்மை நெஞ்சு நிமிரும்; தமிழகம் மீண்டும் தலை நிமிரும்.

Friday, April 15, 2011

காங்கிரசை கலங்கடித்த இலங்கை தமிழர் பிரச்னை: மிரண்ட வேட்பாளர்கள்


இந்தியாவின் சக மாநில மக்களை போல், பார்க்கபட்டவர்கள் தான் இலங்கை தமிழர்கள். அந்த அளவிற்கு நம் தேசத்திற்கும், அவர்களுக்குமான நட்பு கொண்டாடப்பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு இன்னல் என்றால் தமிழகம் கொந்தளித்தது. இலங்கை போராட்டக் குழுக்களுக்கு தமிழக கட்சிகள் போட்டி போட்டு ஆதரவு கொடுத்தன.


இலங்கை தமிழர் விவகாரத்தில் நமக்குள்ள கடமையை உணர்ந்து செயல்பட்டவர் மறைந்த பிரதமர் இந்திரா. போராளிக் குழுக்களுக்கு, "ரா' அமைப்பு மூலம் பயிற்சி கொடுத்து, போராட்டத்திற்கு நேரடி ஆதரவு தந்தார். இலங்கை தமிழர் போராட்டத்திற்கு எம்.ஜி.ஆரும் மிகப்பெரிய உதவியை வழங்கினார். "டெசோ' மாநாடு போன்றவற்றை நடத்தி கருணாநிதியும் தன் பங்கிற்கு ஆதரவு கொடுத்தார். இப்படி, கட்சி பேதம் இல்லாமல் இலங்கை தமிழர்களுக்காகவும், அங்குள்ள போராட்டக் குழுக்களுக்காகவும் உதவிய காலத்திற்கு முற்றுப்புள்ளி ஏற்படுத்திய சம்பவம் ராஜிவ் கொலை. இலங்கை விவகாரத்தை அலசும் அத்தனை ஆய்வாளர்களும், ராஜிவ் கொலைக்கு முன் - பின் என்று இரு பிரிவாகவே அதை பார்க்கின்றனர்.


ராஜிவ் கொலை சம்பவத்திற்கு பிறகு, இலங்கை தமிழர்கள் குறித்த பிரச்னையில் கவனம் செலுத்தாமல் இருந்தாலும், தமிழகத்தில் தங்களது கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என, எண்ணிய பல கட்சிகள் கை விரிக்க துவங்கி விட்டன. இலங்கை தமிழர்களுக்காக தனது அழுத்தமான குரலை வைகோ தொடர்ந்து பதிவு செய்த போதிலும், ம.தி.மு.க., கட்சிக்கு தேர்தலில் செல்வாக்கு உயரவில்லை. இவையெல்லாம் இலங்கை தமிழர்கள் பிரச்னையில் தமிழர்களின் அக்கறை குறைந்ததை காட்டியதாகவே அரசியல் கட்சியினர் எண்ணினர். இதனால், முக்கிய கட்சிகள் பல இந்த விஷயத்தில் சற்று இடைவெளி விட்டே நின்று கொண்டன. இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக இலங்கை தமிழர்கள் பெருந்துன்பத்திற்கு ஆளானதும், இறுதி கட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்து, கொத்தாக கொல்லப்பட்டதும், தமிழக மக்களின் மனதை உலுக்க செய்தது. அத்துடன் கடந்த சில மாதங்களாக, தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவதும், பிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது. இரண்டு சம்பவங்களையும் ஒன்றாக பார்க்கும் மனபக்குவத்திற்கு வந்த தமிழக மக்களுக்கு யார் மீது கோபமோ... இல்லையோ... ஆனால், இந்த இரண்டு விஷயத்திலும் அமைதி காத்து வந்த காங்கிரஸ் கட்சியின் மீது தீராத வெறுப்பாக அது மாறியது.


இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பெரும் தடையாக இலங்கை பிரச்னையே எதிரொலிக்கும் நிலை ஏற்பட்டது. மத்திய உளவுத் துறையினரும் இதை உறுதி செய்து மேலிடத்திற்கு தெரியப்படுத்தினர். விலைவாசி பிரச்னை, ஸ்பெக்ட்ரம் முறைகேடு, குடும்ப அரசியல் என, முக்கிய பிரச்னைகளில், தி.மு.க., மாட்டி தவித்ததால், இலங்கை தமிழர்கள் பிரச்னை, அவர்களுக்கு, ஆறு, ஏழாவது இடத்துக்கு போய்விட்டது. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இலங்கை பிரச்னையே தோல்விக்கு அழைத்து செல்லும் பிரதானமான பிரச்னையாக வெடித்தது. இந்த விஷயத்தில் சற்று அனுசரித்து சென்றால் மட்டுமே, தேர்தலில் தமிழக மக்களின் மனதை நெருங்க முடியும் என, நினைத்த மேலிட காங்கிரஸ் சற்று இறங்கி வந்தது. அதனால் தானோ என்னவோ, தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் தொடர்பாக சென்னையில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு குறித்து பேசி சென்றார். குறிப்பாக அவர்கள் சம உரிமை பெறவும், மறுவாழ்விற்காகவும், புனரமைப்பு பணிக்காகவும் மத்திய அரசு பல்வேறு உதவிகளையும், தேவையான நிதி உதவியையும் செய்து வருவதாக குறிப்பிட்டார்.


"இதெல்லாம் பொய் வேஷம்; களத்தில் காங்கிரசை காணாமல் அடிக்க வேண்டும்' என, தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட, 63 தொகுதிகளிலும், "நாம் தமிழர் இயக்கம்' உள்ளிட்ட தமிழர் அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கின. ஏற்கனவே லோக்சபா தேர்தலின் போது இவர்கள் கொடுத்த நெருக்கடியால், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, இளங்கோவன் தோல்வி, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் சிதம்பரத்தின் வெற்றி அமைந்தது போன்ற திருப்பங்கள் நிகழ்ந்தன. இந்த தேர்தலில், ஏற்கனவே கோஷ்டி பூசலாலும், உள்ளடி வேலையாலும் கலங்கி நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இலங்கை பிரச்னையும் சேர்ந்து கொள்ள உச்சக்கட்ட தோல்வி பயத்தில் உறைந்தனர். பல பிடிவாதங்களுக்கு பின், தி.மு.க., கூட்டணியில், 63 தொகுதிகளை பெற்ற போதிலும், வெற்றி வாய்ப்பை பாதிக்கும் இலங்கை தமிழர் விவகாரத்தில், ஆரம்பத்திலேயே, சில சரியான அணுகுமுறைகளை பின்பற்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களும் தவறிவிட்டனர். இலங்கை தமிழர் பிரச்னை தமிழகத்தில் மறுபடியும் ஓட்டு வங்கியை உருவாக்கியுள்ளதா என்பதற்கான விடை, காங்கிரசின் வெற்றி, தோல்விகள் மூலம் தெரியவரும். அதன் மூலமாக, மற்ற கட்சிகளுக்கு இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என்பதில் தெளிவு ஏற்படும்.

Thursday, April 14, 2011

பிரமிக்க வச்சுட்டீங்க மிஸ்டர் பிரவீன்குமார்... பிரமாதம்!



அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவமாக இன்னும் சில நாட்கள்தான் பாக்கி இருக்கும். ஆனால், தைரியமாக ஓட்டுச்சாவடியில் வரிசையில் நிற்கிறார் அவர். மற்றவர்கள் பார்த்து, அவரை முன்னால் ஓட்டுப்போட அனுமதிக்கின்றனர். ஓட்டுப்போட்டு வந்து, வெளியே இருப்போரிடம் தன் விரல் மையை அவர் உயர்த்திக்காட்டும்போது, அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு குழந்தையைப் பிரசவித்த பரவசம்.

இது எப்படிச் சாத்தியமானது என்று தெரியவில்லை. நினைத்துப் பார்த்தால், பெரும் பிரமிப்பாகத் தெரிகிறது, தமிழகத்தில் இப்படியொரு தேர்தலா என்று. கள்ள ஓட்டு இல்லை; கை கலப்பு இல்லை; கலவரம் எதுவுமில்லை. அமைதியான ஓட்டுப்பதிவு என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதை துல்லியமாக காட்டி, இந்த தேர்தலின் கதாநாயகன் தான்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது தேர்தல் கமிஷன்.தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதற்கு அடுத்த நாளிலிருந்தே ஊரெல்லாம் ஒலி பெருக்கிகள் முழங்கும்; அரசியல் விளம்பரங்களால் வெள்ளைச் சுவர்கள் அழுக்காகும்; காணும் திசையெல்லாம் கட்சித் தோரணங்கள் கலங்கடிக்கும்; ஊர்வலம் என்ற பெயரில் ஊரே குப்பையாகும்; தொண்டர்களின் வெள்ளத்தில் மதுக்கடைகள் மூழ்கிப்போகும்; ஓட்டுப்பதிவு நாளில், மக்கள் வெளியே வர பயப்படும் அளவுக்கு சூழல் மிரட்டும்.


இந்த தேர்தலில் இந்தக்காட்சிகள் எதுவுமில்லை; ஆங்காங்கே பணப்பட்டுவாடா நடந்தாலும், அதுவும் இலைமறை காய்மறையாகத்தான் நடந்தது. சிறு சிறு தகராறுகள் அரங்கேறினாலும், அதுவும் பரவாத அளவுக்கு பாதுகாப்பு வளையம் இறுக்கப்பட்டது. எல்லாவற்றையும் விட, தேர்தல் நாளில் மக்களிடம் காணப்பட்ட உற்சாகம், தேர்தல் கமிஷன் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த நம்பிக்கையை முழுமையாக வெளிப்படுத்தியது. ஏதோ திருவிழாக் கூட்டத்தைப் பார்க்க அழைத்து வருவதைப்போல, ஓட்டுச்சாவடிக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய்மார்களும், முதியவர்களும் வந்த காட்சி, முன் எப்போதும் பார்த்திராதது. வண்டி வைத்து வாக்காளர்களை தூக்கி வரும், தேர்தல் கால திடீர் கரிசனத்தை நேற்று எங்கும் பார்க்க முடியவில்லை. இறுதி கட்ட "கேன்வாஸ்' என்ற பெயரில், வாக்காளர்களை வம்புக்கிழுக்கும் வேலையும் நடக்கவில்லை.


தேர்தல் கமிஷனில் பணியாற்றும் எந்த அலுவலரும், திடீரென வானத்திலிருந்து குதித்தவர்களில்லை; இதே ஊரில், ஏதோ ஒரு துறையில் வேலை பார்க்கும் அலுவலர்கள்தான். வெளி மாநிலங்களிலிருந்து கண்காணிக்க பல அதிகாரிகள் வந்திருந்தாலும், இவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களால் முழு வீச்சில் செயல்பட்டிருக்க முடியாது. அப்படி இருந்தும் யாருக்கும் பயப்படாமல் தேர்தல் பணியாற்றிய இவர்களே, முதல் பாராட்டுக்குரியவர்கள்.இவர்களுக்கு அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் தந்து செயல்பட வைத்ததும், செயல்பட மறுத்தவர்களைத் தண்டித்து, மற்றவர்களுக்குப் பாடம் புகட்டியதும் தேர்தல் கமிஷன்தான். தலை சரியாயிருந்தால், எல்லாமே சரியாயிருக்கும் என்பார்கள். அந்த வகையில், எல்லோரையும் சரியாகச் செயல்பட வைத்து, தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன் குமார்தான் ஒட்டு மொத்த பாராட்டுக்குரியவர்; அவருக்கு தமிழக மக்கள் அனைவர் சார்பிலும் தலை தாழ்த்தி குரல் உயர்த்திச் சொல்கிறோம்... சபாஷ்!

Wednesday, April 13, 2011

ஏன் இப்படி மக்கள் ஆர்வம் : வெற்றி யாருக்கு ?


சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் இன்று காலை முதல் விறு, விறு ஓட்டுப்பதிவு நடந்து வருவதற்கு என்ன காரணம் என ஆங்காங்கே அரசியல் கட்சியினர் காரணம் தெரியாமல் திகைக்து போயினர். 8 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு முதல் தமிழகம் முழுவதும் நகரம், கிராமம் என பாகுபாடு இல்லாமல் அனைத்து சாவடிகளிலும் மக்கள் சாரை, சாரையாக நீண்ட கியூ வரிசையில் காத்து நின்றனர்.


திருச்சியில் வரிசையில் காத்து நின்ற வாக்காளர்கள் என் எவ்வளவு நேரம் வரிசையில் நிற்பது சீக்கிரமாக ஓட்டு போட விடுங்கப்பா என அலுத்துபோய் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனையடுத்து இந்த சாவடியில் கூடுதல் அலுவலகர்களை நியமித்து ஓட்டுப்பதிவு விரைவாக நடத்தப்பட்டது.


மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகத்திலேயே கூடுதலாக தர்மபுரியில் 63 சதம் ஓட்டுக்கள் பதிவாகின. கரூர். கோவை, மதுரை, சேலம் , திருச்சி என அனைத்து சாவடிகளிலும் 50 சதத்தை தாண்டி பதிவு போய்க்கொண்டிருந்தது. சென்னையிலும் 55 சதம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தது.


வெயில் காரணமாக காலையில் மக்கள் வந்தார்களா, அல்லது ஆளும் அரசுக்கு எதிராக ஓட்டளிக்க ஆர்வத்துடன் வந்தனரா, அல்லது பணம்பட்டுவாடா காரணமா என ஆங்காங்கே அலசப்பட்டு வந்தது. குறிப்பாக அரசியல் தலைவர்கள் அனைவரும் எங்களுக்கே வெற்றி என எல்லோரும் சொந்தம் கொண்டாடினாலும், உண்மையான வெற்றி தேர்தல் கமிஷனுக்குத்தான் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.


தேர்தல் கமிஷனின் ஓட்டுப்போட வாங்க, ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்க என்றும் அழைப்பு விடுத்ததற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்துள்ளனர் என்றே கருதலாம். இப்போதைக்கு வெற்றி தேர்தல் கமிஷனுக்கே ! அரசியல் ரீதியாக வெற்றி பெற்றது யார் என்பதற்கு இன்னும் 30 நாள் ( வரும் மே 13 ம்தேதி வரை ) காத்திருப்போம்.

Tuesday, April 12, 2011

அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்? தேர்தலை ஒத்தி வைக்க பரிசீலனை


சென்னை: ""வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்ந்தால், அந்த தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும். தேர்தல் நடந்த பின் கூட, அந்தந்த தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படும்,'' என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் எச்சரித்துள்ளார். இதையடுத்து, சில தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:தேர்தல் பிரசாரம், மாலை 5 மணியுடன் முடிந்து விட்டது. இதன்பின், "டிவி'க்களில் கூட பிரசாரம் செய்யக் கூடாது. செய்தி தவிர, பிரசாரமாக ஒளிபரப்பினால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கக் கூடிய வகையில் வழக்கு பதிவு செய்யப்படும். எஸ்.எம்.எஸ்., மூலமும் பிரசாரம் செய்யக் கூடாது.
தேர்தலில் சில தொகுதிகளில் பணப் பட்டுவாடா செய்வது குறித்து கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையும் மீறி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால், அந்த தொகுதிகளின் தேர்தல் தள்ளி வைக்கப்படும். பணப் பட்டுவாடா மற்றும் அதிகளவில் முறைகேடுகள் நடந்தது பற்றி, ஓட்டுப் பதிவுக்கு பிறகு கூட தகவல் கிடைத்தால், அந்த தொகுதியில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்படும்.


சில தொகுதிகளில், பணம் கொடுப்பதாக அதிகளவில் புகாரும், சில தொகுதிகளில் குறைந்தளவு புகாரும் வந்துள்ளன. இதுவரை, மொத்தம் 33 கோடியே 11 லட்சம் ரொக்கமும், 12 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில், கணக்கு காட்டியதன் அடிப்படையில், 5.18 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஸ்டாலின் அவதூறாக பேசியதாக வந்த புகாரின் பேரில், இன்று (நேற்று) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, ஜெயலலிதா மற்றும் விஜயகாந்துக்கு அனுப்பிய நோட்டீசுக்கு, அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதை பரிசீலித்து, தேர்தல் கமிஷன் முடிவு எடுக்கும்.


தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக, இதுவரை, 61 ஆயிரத்து 20 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றில், சுவர்களை சேதப்படுத்தியதாக, 55 ஆயிரத்து 254 வழக்குகளும், வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக, 2,850 வழக்குகளும், வழிபாட்டுத்தலங்களை தவறாக பயன்படுத்தியதாக, 24 வழக்குகளும், சட்டவிரோத கூட்டங்கள் நடத்தியதாக, 154 வழக்குகளும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, 975 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.பணப் பட்டுவாடாவில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பல இடங்களில் பணம் கொடுப்பதாக புகார்கள் வருகின்றன. ஆனால், பறக்கும் படையினர் அங்கு செல்வதற்குள், அவர்கள் பணத்தை கொடுத்து முடித்து ஓடி விடுகின்றனர்.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.


கொளத்தூரில் தடை?எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு பிரசாரத்தின் சுருதியைக் குறைத்த தேர்தல் கமிஷன், பண வினியோகத்தை தடுக்க வங்கிக் கணக்குகளை கண்காணித்தல், வாகனச் சோதனை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கோடிக்கணக்கில் பணம், பொருள், நகை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது.கடந்த நான்கு நாட்களாக தமிழகம் முழுவதும் பண வினியோகம் தீவிரமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் கமிஷன், வி.ஐ.பி., தொகுதிகளான திருவாரூர், ஸ்ரீரங்கம், ரிஷிவந்தியம், கொளத்தூர் மற்றும் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.மதுரையில் அழகிரி அதிகார எல்லையில் வரும் தொகுதிகள் மீது, கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தொகுதிகளில் பண வினியோகம் நடந்தால், உடனே தேர்தலை ரத்து செய்யவும் தேர்தல் கமிஷன் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

Monday, April 11, 2011

தமிழக தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது., நாளை மறுநாள் ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார் !


சென்னை: ஒரு மாதகால பிரசாரம் முடிந்து இன்று மாலையுடன் எவ்வித சலனமுமின்றி அமைதியாக முடிந்தது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் விஜயகாந்த் பிரசார வாகனத்தின்மீது செருப்பு வீசப்பட்டது. பெரிய அளவில் வன்முறை எதுவும் இல்லை. இதே நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக வந்த புகாரையடுத்து தேர்தல் அதிகாரிகள் , ராமநாதபுரம் , வாடிப்பட்டி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி ரூ. 5 லட்சம் வரை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் பகுதியில் உள்ள தேனி மாவட்ட தி.மு.க., பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

கட்சி தலைவர்களின் பிரசாரம் : தி.மு.க., தலைவர் கருணாநிதி ( திருவாரூரிலும்) , அ.தி.மு.க., தலைவர் ஜெயலலிதா( சென்னையிலும்) , தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ( ரிஷிவந்தியத்திலும்),இந்திய கம்யூ., அகில இந்திய செயலாளர் டி. ராஜா (வத்திராயிருப்பிலும்) , மா.கம்யூ., மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ( திண்டுக்கல்லிலும் ) இன்று பிரசாரம் செய்து நிறைவு செய்தனர். உள்பட அனைத்து பெரிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி பிரசாரம் செய்தனர் சினிமா நடிகர்களுக்கு கட்சிகள் முக்கியத்துவம் அளிப்பதை காண முடிந்தது.


தேர்தல் கமிஷன், கடும் விதிமுறைகளை அமல்படுத்தியதால், தமிழகத்தில் எங்கும் பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கவில்லை. காதை கிழிக்கும் "லவுடு ஸ்பீக்கர்' சத்தம், சுவர்களை பாழாக்கும் போஸ்டர், சாலையை மறைக்கும் "பிளெக்ஸ்' போர்டு என எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை தேர்தல் நடக்கிறதா என்ற சந்தேகத்தை கிளப்பும் வகையில், பிரசாரம் அமைந்தது.


போட்டி: தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் தலா 234 தொகுதிகளிலும், பா.ஜ., கூட்டணி 207 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சென்னையில் உள்ள தொகுதிகளில் அதிபட்சமாக 274 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி, கடந்த மார்ச் 1ம் தேதி அறிவிக்கப்பட்டது. மனு தாக்கல் 19ம் தேதி துவங்கி, 30ம் தேதி வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. ஓட்டுப் பதிவு வரும் 13ம் தேதி நடக்கிறது.எனவே, இடைப்பட்ட 14 நாட்களில், தமிழகம் முழுவதும் கட்சியினர் பிரசாரம் செய்ய வேண்டியிருந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். இது தவிர, பிரதான இரண்டு கூட்டணிகளிலும் ஸ்டார் பிரசாரகர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது, இரு தரப்பிலுமே மாறி மாறி தனிப்பட்ட முறையில் விமர்சிக்கப்பட்டு, சேறு வாரி இறைக்கப்பட்டன. இதுவரை தேர்தல்களில் இல்லாத அளவு தனிப்பட்ட விமர்சனங்களை தி.மு.க., அணியினரும், அ.தி.மு.க., அணியினரும் மேற்கொண்டனர். தற்போது இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபடனர்.
இன்று மாலை 5 மணிக்கு பின்னர் கூட்டம் நடத்தியோ, மைக் மூலமாகவோ யாரும் பிரசாரம் செய்யக்கூடாது. எனினும், வீடு வீடாகச் சென்று அமைதியாக ஓட்டு சேகரிக்கலாம். தொகுதியில் வாக்காளராக இல்லாத எவரும் அந்த தொகுதிக்குள் இருக்கக்கூடாது. லாட்ஜ்கள், மண்டபங்கள் போன்றவற்றில் சம்பந்தமில்லாதவர்கள் தங்கி இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Sunday, April 10, 2011

எப்படி ஓட்டளிப்பது? உங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள்!




ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் தேர்தல். தேர்தலின் முக்கிய நடவடிக்கை ஓட்டளிப்பது. ஒவ்வொரு குடிமகனும், தவறாமல் இதில் பங்கேற்றால் உண்மையான ஜனநாயகம் தழைக்கும். ஓட்டளிப்பது நமது கடமை. எப்படி ஓட்டளிப்பது என்ற உங்கள் சந்தேகங்களை தீர்க்க இதோ...காலையில் செல்லுங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப் பதிவு நடைபெறும். ஆனாலும் உங்கள் ஓட்டை வேறு யாரும் போட்டுவிடாமல் இருக்க, முன்னதாகவே ஓட்டுச் சாவடிக்குச் செல்வது நல்லது. இதனால் கடைசி நேர காத்திருப்பை தவிர்க்கலாம்.வரிசையாக நிற்கவும்ஓட்டுச் சாவடியில் ஆண், பெண், மாற்றுத் திறனாளிகள், முதியோர் என தனித்தனி வரிசைகள் இருக்கும். உங்களுக்குரிய வரிசையை தேர்வு செய்து அதில் நிற்க வேண்டும்.
ஓட்டுச் சாவடிக்குள்1. ஒவ்வொரு வாக்காளராக ஓட்டு சாவடிக்குள் அனுமதிப்பர். 2. உள்ளே நுழைந்தவுடன், முதல் ஓட்டுப் பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில், உங்கள் பெயர் உள்ளதா, அப்பெயருக்குஉரியவர் நீங்களா என பரிசோதிப்பார். 3. வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டு சிலிப்பை அவரிடம் காண்பிக்க வேண்டும். அதன் பின், உங்கள் பெயரையும், வரிசை எண்ணையும் அவர் சொல்வார். இதன் மூலம் அந்த அறையில் உள்ள தேர்தல் முகவர்கள், உங்களை அறிந்து கொள்வர். 4. அடுத்து நீங்கள் 2வது அலுவலரிடம் செல்ல வேண்டும். அங்கு அவர் உங்கள் ஆட்காட்டி விரலில் அழிக்க முடியாத மையை தடவுவார். அதன்பின், வாக்காளர் பட்டியலில் உங்கள் வரிசை எண்ணை பதிவு செய்வார். 5. அதன்பின், அப்பதிவேட்டில் நீங்கள் கையெழுத்திட வேண்டும் அல்லது இடதுகை பெருவிரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். அவர் கையெழுத்து இடப்பட்ட அடையாள சீட்டை உங்களுக்குத் தருவார். 6. அடுத்து 3வது அலுவலரிடம் நீங்கள் செல்ல வேண்டும். அவர் 2வது அலுவலரால் வழங்கப்பட்ட அடையாளச் சீட்டை பெற்றுக் கொண்டு, கட்டுப்பாட்டு இயந்திரத்தின் பொத்தானை இயக்குவார். இப்போது நீங்கள் ஓட்டளிப்பதற்கான அனுமதியை பெற்றுவிட்டீர்கள் என்று பொருள்.ஒருகணம் சிந்தியுங்கள்7. அடுத்து ஓட்டுப் பதிவு இயந்திரம் உள்ள இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். ஒரு கணம், ஒரேஒரு கணம் ஆழ்ந்து சிந்தியுங்கள். இந்நாட்டை வழிநடத்திச் செல்லும் தகுதியுள்ள சரியான நபரை மனதிற்குள் தேர்ந்தெடுங்கள். முக்கியமாக உங்கள் மனசாட்சிப்படி, நீங்கள் நேர்மையாக நடக்க வேண்டும். அதன்படி உங்கள் மனதிற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு நேராக இருக்கும் நீலநிறப் பொத்தானை அழுத்துங்கள். "பீப்' ஒலி கேட்கும். அதேநேரம் உங்கள் வேட்பாளரின் சின்னத்திற்கு நேராக சிவப்பு ஒளி ஒளிரும். ஒருமுறை பொத்தானை அழுத்தினால் போதும். இப்போது உங்கள் ஓட்டு பதிவாகிவிட்டது நிச்சயம். இத்துடன் ஓட்டுச்சாவடிக்குள் உங்கள் பணி முடிந்து விட்டது. அங்கே நிற்க கூடாது.நீங்கள் யாருக்கு ஓட்டளித்தீர்கள் என்பது, உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

பூத் சிலிப்போட்டோவுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட அனைவருக்கும் ஓட்டு இருக்கும். மார்ச் 16ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்குக் கூட வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு தேர்தல் கமிஷன் அடையாள அட்டையை அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் தேர்தல் கமிஷனே, அடையாள சீட்டுகளை (பூத் சிலிப்) வீடுதோறும் வினியோகித்து வருகிறது. அடையாள சீட்டு உங்களைத் தேடி வந்தால் ஓட்டு உள்ளது என்று அர்த்தம். இல்லையெனில் ஓட்டுச் சாவடிக்குப் போய் உறுதி செய்து கொள்ளுங்கள்.ஓட்டளிக்க விரும்பாதோர்..நீங்கள் எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்றால், உங்கள் அதிருப்தியை பதிவு செய்யவும் சட்டம் அனுமதிக்கிறது. நீங்கள் ஓட்டளிக்க விரும்பாவிட்டால், உடனே அதை ஓட்டுச் சாவடி தலைமை அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். அவர் உங்களிடம் இருந்து ஓட்டுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு, இவர் ஓட்டளிக்க விரும்பவில்லை என தனியே ஒரு பதிவேட்டில் குறித்துக் கொள்வார். அதில் நீங்கள் கையெழுத்திட வேண்டும். இப்போது நீங்கள் "49 ஓ' போட்டுவீட்டீர்கள் என பொருள்.வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் கவலை வேண்டாம். தேர்தல் கமிஷன் வழங்கும் ஓட்டு சிலிப் உங்களிடம் இருந்தால் போதும். தாராளமாக ஓட்டளிக்கலாம். அதுவும் இல்லையெனில் நீங்கள் ஓட்டளிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டையும் இல்லை. தேர்தல் கமிஷனின் ஓட்டு சிலிப்பும் இல்லை என்றால், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றைக் காட்டி ஓட்டளிக்கலாம். ரேஷன் கார்டை ஏற்க மாட்டார்கள்.
ஓட்டுச்சாவடியில் சந்தேகம் எழுப்பினால்வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது. ஆனால் அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள் இல்லை என்று ஓட்டுச் சாவடியில் உள்ள யாராவது சந்தேகம் எழுப்பினால் என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், இப்படி சில ஆவணங்கள் மூலம் உங்கள் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் போலியானவர் என நிரூபிக்கப்பட்டால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் பெயரில் ஒருவர் வாக்களித்து இருந்தால் என்ன செய்வது? முதல் ஓட்டுப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என பரிசோதிப்பார். உங்கள் பெயரில் வேறு யாரேனும் ஓட்டுப் போட்டு இருந்தால் அதை உடனே ஓட்டுச் சாவடி தலைமை அலுவலரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்கு ஆராய்ச்சிக்குரிய ஓட்டுச் சீட்டு (டென்டர்ட் பேலட் பேப்பர்) அளிக்கப்படும். அதைப் பெற்றுக் கொண்டு, நீங்கள் கையெழுத்திட வேண்டும். நீங்கள் ஓட்டளித்ததும், அதை ஓர் உறையில் இட்டு தனியே வைத்துக் கொள்வர். இங்கு நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது...
நீங்கள் மின்னணு இயந்திரம் மூலம் ஓட்டளிக்க முடியாது என்பதுதான். புகார் தெரிவிக்க..மிரட்டுபவர்கள், பணம் கொடுக்க முற்படுவோர், பிரச்னை குறித்து யாரிடம் முறையிடுவது? போலீசாரிடம் கூறலாம். தொகுதி அளவில், ஓட்டுப்பதிவு அலுவலர், துணைத் தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர், மாநில தலைமை தேர்தல் அலுவலர்(044-2567 0390), தேர்தல் பார்வையாளர்களை அணுகலாம்.

Saturday, April 9, 2011

தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவது சவால்: முறைகேடுகளை தடுக்க குரேஷி தீவிரம்

புதுடில்லி: தேர்தலில் ஓட்டு பெறுவதற்காக அரசியல் கட்சிகள் செய்யும் முறைகேடுகளை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இத் தேர்தலை நடத்துவது எங்களுக்கு சவாலாகும் என்று அவர் தெரிவித்தார். தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. எப்போதும் இல்லாத வகையில் தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடுகள் இந்த முறை அதிகரித்துள்ளது. இதனால், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுகளை பெறும் முயற்சி கணிசமாக தடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் கடுமையாக பரிசோதிக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் எடுத்து செல்லப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடிகளால் வெறுத்துப் போன கட்சித் தலைவர்கள், தேர்தல் கமிஷனை விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுவதாக முதல்வர் கருணாநிதியும், தேர்தல் கமிஷன் அத்துமீறி செயல்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசும் குறை கூறிவருகின்றனர்.


இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: தேர்தல் கமிஷனின் புதிய நடைமுறைகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் விளக்கி விட்டோம். அந்த கூட்டத்தில் கூறப்பட்டவைகளைத் தான் தற்போது நடைமுறை படுத்தி வருகிறோம். புதிதாக நாங்கள் ஏதும் செய்து விடவில்லை. தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடக்க வேண்டும் என்பது தான் எங்களது இலக்கு. மக்கள் எதிர்பார்ப்பது போல இந்த தேர்தல் வெளிப்படையானதாக, சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டி வருகிறோம். குறிப்பாக தேர்தல் செலவீனம் குறித்து அதிக விழிப்போடு இருக்கிறோம். அதிகம் செலவழிக்கக்கூடாது என்பது மட்டுமல்ல, கணக்கில் வராத பணம் அதிகம் புழங்குவதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில இடங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாதது. தமிழகத்தில் மட்டுமல்ல, தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது.


அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது என நாங்கள் கண்டிப்புடன் இருப்பதால், ஆளும் கட்சியினருக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும். அரசியலமைப்பு சட்டப்படி நாங்கள் செயல்படுகிறோம்; வரம்பு மீறவில்லை. ஆனால், எங்களது இந்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர் பாராட்டுகின்றனர். எங்களது அதிரடி நடவடிக்கையால் 53 கோடி ரூபாய், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 42 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாங்கள், அரசியலமைப்பு சட்டப்படி எங்கள் அதிகார வரைமுறைக்குட்பட்டு தான் செயல்படுகிறோம். கட்டுப்பாடற்ற தேர்தல் தில்லுமுல்லுகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியாது. உண்மையாகவும், அக்கறையாகவும் எங்கள் கடமையை செய்வது தவறா? தமிழகத்தில் தேர்தலை நடத்துவது எங்களுக்கு சவாலாக உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாங்கள் கூறிய விதிமுறைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தான் செயல்படுத்தி வருகிறோம். எனவே, நாங்கள் தொல்லை கொடுப்பதாக அரசியல் தலைவர்கள் சொல்வதை ஏற்க முடியாது.


எங்களது நடவடிக்கைகளை பாராட்டி பொதுமக்கள் எங்களுக்கு தினமும் மொபைல் போனில் ஏராளமான எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பி ஊக்குவித்து வருகின்றனர். தமிழகத்தில் ஊடகங்கள் விஷயத்திலும் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் வற்புறுத்தி வருகின்றனர். இதையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். தமிழக தேர்தலில் பண ஆதிக்கம் செலுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மேற்கு வங்கத்தை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சவாலாகத் தான் உள்ளது. எனினும், அம்மாநில அரசு எங்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிக்கிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம். ஊழலை ஒழிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்த அன்னா ஹசாரே போன்றவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி அரசை வற்புறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. ஆனால், குற்றப் பின்னணி உள்ளவர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் சீர்திருத்த நடைமுறைகள் கொண்டுவர வலியுறுத்துகிறோம். அவை அமலானால், கிரிமினல்கள் மற்றும் ஊழல் புரிந்தவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. அத்துடன், தேர்தலுக்கு அரசு பணம் செலவழிக்கும் நடைமுறையும் வந்தால், இம்மாதிரி நபர்கள் அதிகாரப் பதவிகளுக்கே வரமுடியாது. இவ்வாறு குரேஷி கூறினார்.

Friday, April 8, 2011

ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள் : அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு

ஊழலை எதிர்த்து உண்ணாவிரதமிருக்கும் அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நாடு முழுவதும் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பட்ட மக்கள் ஊழலுக்கு எதிராக திரள ஆரம்பித்துள்ளனர். இந்த திடீர் எழுச்சி, மத்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே, மூன்றாவது நாளாக தனது உண்ணாவிரதத்தை டில்லியில் தொடர்ந்து வருகிறார். ஜந்தர் மந்தர் பகுதியில் மேடை அமைக்கப்பட்டு, அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், அவருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் உள்ள இந்தியர்களும் அவர் போராட்டத்துக்கு ஆதரவு தருகின்றனர். ஹசாரேக்கு குவிகிற ஆதரவை கண்டு, நேற்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் அரசு சார்பில் பேச முன்வந்தார். ஹசாரே சார்பில் சுவாமி அக்னிவேஷ், அமைச்சர் கபில் சிபலை சந்தித்து பேசினார். ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

"லோக்பால் மசோதா தயாரிக்கும் குழுவில் அரசு தரப்பில் 50 சதவீதம் பேர் இருந்தால், பொதுமக்கள் பிரதிநிதிகளாக 50 சதவீதம் பேர் இருக்க வேண்டும். அரசில் நடக்கும் ஊழல்கள் பெருகி விட்டன.எனவே, மசோதா தயாரிப்பு குழுவில் 50 சதவீதம் பேர், பொதுமக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும்' என்பது ஹசாரே தரப்பு கோரிக்கை. இதற்கு மத்திய அரசு சார்பில் பேசிய அமைச்சர் கபில் சிபல் மறுப்பு தெரிவிக்கவில்லை. காரணம் திரும்ப திரும்ப அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் சட்டவரையறை மற்றும் முடிவுகள் குறிப்பிட்ட விஷயத்தை முன்னிறுத்தாமல் அதை நீர்த்து போக செய்யும் என்ற கருத்தில் பேச்சு நடத்திய அக்னிவேஷ் உறுதிபட தெரிவித்தார்.



அடுத்து, இந்த மசோதா தயாரிப்பு குழுவுக்கு, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைவராக இருப்பார் என்று அரசு தரப்பு கூறியது. அதற்கு, கூடவே கூடாது என, மக்கள் சார்பில் உள்ள பொதுக்குழு மறுப்பு தெரிவித்தது. மேலும், ஹசாரே தான் அந்த குழுவுக்கு தலைவராக இருக்க வேண்டுமென்றும் பொதுக்குழு வலியுறுத்தியது. ஆனால், ஹசாரே கூட லோக்பால் வரைவு மசோதா உருவாக்கும் குழுவிற்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். பிறகு லோக்பால் மசோதாவை, வரும் ஜூன் 20ம் தேதிக்கு முன்பாக தயாரித்து முடித்து, வரும் மழைக்கால கூட்டத்தொடரிலேயே பார்லிமென்டில் தாக்கல் செய்திட வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு கபில் சிபல், "மே மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன. அதனால், கால அவகாசம் இல்லை என்றும், மே 13ம் தேதி வரை லோக்பால் மசோதாவை தொடவே முடியாது' என்றார்.


இதற்கு பதிலாக அக்னிவேஷ் "சட்டசபை தேர்தலை காட்டி லோக்பால் மசோதாவை தள்ளிப்போட அரசு முயற்சிக்கிறது. அதற்கு இடம் தர முடியாது. லோக்பால் மசோதாவை விரைந்து தயாரித்து தாக்கல் செய்தால் தான் ஆதரவு தருவோம். ஓட்டுப் போடுவோம் என, இம்மாநில மக்கள் உறுதியுடன் கிளர்ந்து எழுந்து நிற்க வேண்டும். அப்போது தான் அரசியல்வாதிகளுக்கு அறிவு வரும்' என கூற, பொதுக்குழு அதை ஆமோதித்தது. அதேபோல ஹசாரே தான் தலைவராக இருக்க வேண்டும் என, இந்த இயக்கத்தின் பொதுக்குழு வலியுறுத்தியது. ஹசாரே உண்ணாவிரதப் பந்தலில் உள்ளவர்களே பொதுக்குழுவாக கருதப்படுவதால், அரசு அதை ஏற்கவில்லை என்றும், மீண்டும் அக்னிவேஷுடன் பேச கபில் சிபல் காத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இறுதியாக பேசிய அன்னா ஹசாரே, "நமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படாதவரையில் நான் உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன். உறுதியுடன் தொடருவேன்' என்று மட்டும் கூறினார்.


"அர்த்தமில்லாத பேச்சுக்கள் பயனில்லை': அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ஜந்தர் மந்தர் பகுதி முழுக்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கடந்த இருநாட்களில் அவர் எடை 1.5 கிலோ குறைந்திருக்கிறது. சிறிது ரத்த அழுத்தம் கூடியிருக்கிறது. ஆனால், அழுத்தம் திருத்தமாக அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதை அவர் நிருபர்களிடம் கூறினார்.


ஹசாரே கூறியதாவது: பேச்சுவார்த்தை நடத்த நான் தயார். அதை தட்டிக் கழிக்கவில்லை. அதேசமயம் அதிகார மையத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா அல்லது பிரதமர் மன்மோகன் சிங் என்றால் சரி. முக்கிய முடிவுகளை எடுக்க முடியாத கமிட்டிகளிடம் பேசி என்ன பயன்? அமைச்சரவைக் குழு என்கிறார்கள். அவர்களா முடிவு எடுக்கின்றனர்? லோக்பால் மசோதா கொண்டு வரவில்லை என்றால், அது மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்க வழியாகும். நான் ஒன்றும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தூண்டுதலில் இதை மேற்கொள்ளவில்லை. சமுதாயத்திற்கு, கடந்த 35 ஆண்டுகளாக நான் தொண்டாற்றுகிறேன். நான் என் வீட்டிற்கே சென்றது கிடையாது. எனக்கு மூன்று சகோதரர்கள். அவர்கள் குழந்தைகளின் பெயரும் எனக்கு தெரியாது. எனக்கு வங்கியில் பணம் ஏதும் கிடையாது. நான் பக்கத்தில் வைத்திருக்கும் ஜோல்னா பையில், ஏதாவது ஐந்து அல்லது 10 ரூபாயை போடச் சொல்லி மக்களிடம் கேட்பேன். அது தான் என் செலவுக்கு பணம். காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுடன் எனக்கு என்ன வேலை? அவர்கள் இந்த நாட்டுக்கு அதிகம் பணியாற்றியதாக கூறினால், ஏன் நாட்டில் இன்று இவ்வளவு பிரச்னை? எல்லா கதவையும் அடைக்கும் போது சத்யாகிரகம் தவிர வேறு வழி இல்லை. பொதுவாக என் மேடையில் அரசியல்வாதிகளை ஏற்றுவதில்லை. காரணம் அதில் அவர்கள் பயன் பெற முயற்சிப்பர். இவ்வாறு ஹசாரே கூறினார். ஹசாரேயின் உடல்நிலையை, டாக்டர்கள் அவ்வப்போது கண்காணித்த வண்ணம் உள்ளனர்.


பிரதமர் அவசர ஆலோசனை: ஹசாரே உண்ணாவிரதம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சரவை சகாக்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அமைச்சர் கபில்சிபல் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Thursday, April 7, 2011

தேர்தல் முடிவை தீர்மானிக்கும் நதிநீர் பிரச்னை : இலவச ஆற்றில் தண்ணீர் காணோம்

தமிழக தேர்தலில் எதிரொலித்து வரும், விலைவாசி உயர்வு, ஊழல், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகள் தவிர, சத்தமில்லாத யுத்தமாக, தண்ணீர் பிரச்னையும் விஸ்வரூபமெடுத்துள்ளது. சாயக்கழிவுகளால் ஆறுகள் விஷமாவதும், நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத குடிநீர் திட்டங்களும், மணல் கொள்ளை போன்ற நிலத்தடி நீருக்கு வேட்டு வைக்கும் விவகாரங்களும், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்க உள்ளன.

திருப்பூரில் முறையான அனுமதி பெறாமல் இயங்கிவந்த சாயப்பட்டறைகள், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூடப்பட்டுவிட்டன. பின்னலாடை தொழிலுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவு, தொழிலாளர்களின் போராட்டமாக, அதிருப்தியாக வெடித்துள்ளது. மற்றொரு புறத்தில், நிலத்தடி நீரை பாதுகாக்க, விவசாயத்துக்கு உயிர்நீர் கிடைக்க, இந்த நடவடிக்கை தொடர வேண்டுமென விவசாயிகள் தரப்பில் குரல் எழுந்துள்ளது. இதில், எந்தத் தரப்பை திருப்திபடுத்தினாலும், எதிர்த் தரப்பின் ஓட்டு சிதறிவிடும் என்பதால், இந்த நீண்டகால பிரச்னைக்கு, நீண்டகாலமாகவே தீர்வு காணாமல், காலம் கடத்தி வந்தன கழகங்கள். இதனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒய்யாரமாய் நடைபயின்ற நொய்யல் ஆறு, சாயக்கழிவுகளால் முடமாக்கப்பட்டு, தனது ஜீவனை இழந்துவிட்டது. பாசனத்திற்காக கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணை, சாயப்பட்டறை கழிவுகள் சங்கமிக்கும் கழிவறையாக மாறியுள்ளது.


நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம், குமாரபாளையத்தில் புதிதாக முளைத்துள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு, சுத்திகரிப்பு செய்யப்படாமல் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால், காவிரிநீர், விஷமாக மாறும் அபாயம் ஏற்படுள்ளது. இப்பிரச்னை, தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் நிலை உள்ளது. கொங்கு மண்டலத்தில் இந்தப் பிரச்னை என்றால், டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி பிரச்னை, கட்சிகளின் கழுத்தை நெரிக்கிறது. நெல்லுக்கு நடுவே மீன்கள் துள்ளி விளையாடிய காவிரிப்படுகை, இன்று வானம் பார்த்த பூமியாக காய்ந்து கிடக்கிறது. வருண பகவானும், கர்நாடக அரசும் மனது வைத்தால் தான், கடைமடை பகுதியில் காவிரி பாயும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு அடுத்தடுத்து தடுப்பணைகளைக் கட்டியது. அதைத் தடுக்க முயற்சிக்காமல், "மழைக்காலத்தில் கூட அதில் தண்ணீர் வராது' என, தமிழக அமைச்சரே அலட்சியம் காட்டியதன் விளைவு, பாலாற்றுப் படுகை இன்று பாலைவனமாகிவிட்டது.


தென் மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமாக இருப்பது முல்லைப் பெரியாறு. கேரள அரசின் முரண்டைச் சமாளிக்கும் சாமர்த்தியம் இல்லாததால், சுப்ரீம் கோர்ட்டே உத்தரவிட்டும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தமிழகத்தால் முடியவில்லை. இதனால், தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் வேறு தொழிலுக்கு மாற வேண்டிய நிலை வந்துவிட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிலத்தடி நீரில் புளோரைடின் அளவு அதிகம். இந்த குடிநீரை பருகும் மக்களுக்கு எலும்பு, தோல், நரம்பு சம்பந்தமான நோய்கள், பல்லில் கறை படிதல் தொடர்ந்து வந்தது. இவ்விரு மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், காமராஜர் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்டது. இன்னும் அப்பகுதியின் தேர்தல் பிரச்னையாகத் தொடர்கிறது. "ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை' என்பதைப் போல, யார் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி, பாலாறு, அமராவதி, பவானி என, எந்த ஆறாக இருந்தாலும், விதிவிலக்கில்லாமல் மணல் கொள்ளை நடந்து வருகிறது.


விதிமுறைகளை மீறி எடுக்கப்படும் மணலால், நிலத்தடி நீரின் அளவு அதள பாதாளத்திற்கு போய்விடுகிறது. ஆற்றுப்படுகைகளை ஒட்டியுள்ள வளம் கொழித்த கிராமங்கள் கூட, பட்டணங்களைப் போல குடிநீருக்காக குடத்தை தூக்கி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. வெகுண்டெழுந்த கிராம மக்களால், ஆங்காங்கே மணல் லாரிகளை மடக்கும் காட்சி, அன்றாட நிகழ்வாகிவிட்டது. திரும்பிய இடமெல்லாம் இதே நிலை தொடர்ந்தால், தண்ணீரின்றி தவிக்கும் இந்த தேசம். அதைத் தடுக்க முயல்பவர்களுக்கு ஆதரவாகவே, ஓட்டுச்சீட்டுகள் பேசும்!

Wednesday, April 6, 2011

மீனவர்கள் ஆவிகூட கருணாநிதியை மன்னிக்காது: விஜயகாந்த் ஆவேசம்

ஆர்.எஸ்.மங்கலம்: ""இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த மீனவர்களின் ஆவிகூட, கருணாநிதியை மன்னிக்காது,'' என, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் பிரசாரம் செய்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.

தே.மு.தி.க., வேட்பாளர் முஜிபுர் ரகுமானை ஆதரித்து, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானையில் அவர் பேசியதாவது:அமைச்சர் தங்கவேலன், குடிசை மாற்றுத் துறை தலைவராகத் தான் உள்ளார். அவர் அமைச்சரே இல்லை. ஒன்றுமே செய்யாமல், சொகுசுக்காக சைரன் காரில் வலம் வருகிறார். உள்துறை அமைச்சர் சிதம்பரம், எப்படி ஜெயித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயித்ததற்கு பெயர், "சிதம்பரம் ரகசியம்!'அழகிரி பாதுகாப்பை எடுத்ததால், அழகிரி, அழுதகிரியாக உள்ளார். தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. முந்தைய அ.தி.மு.க., காலத்தில், ஜெ., முதல்வராக இருந்தபோது, சென்னையைச் சுற்றி, 150 கி.மீ., தொலைவில் தண்ணீர் சப்ளை செய்து வந்தனர். ஆனால், தற்போது எத்தனையோ திட்டங்கள் இருந்தும், தண்ணீருக்காக மக்கள் தவிக்கின்றனர்.


மாறிவரும் காலங்களில், எத்தனையோ திட்டங்கள் இருந்தும், பள்ளிக் குழந்தைகள், மரத்தடியில் கல்வி கற்பது கேவலமாக உள்ளது. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பெயரில், தனியார் மருத்துவமனைக்கு கிராம மக்களை அனுப்புகின்றனர். அந்த ரூபாயில், சிறிய சிகிச்சைக்கூட செய்ய முடியவில்லை.சிகிச்சைக்காக, ஸ்டாலின் லண்டன் செல்கிறார். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்னாச்சு? அதில் சிகிச்சை பெறுவதை விட்டு ஏன் லண்டன் செல்ல வேண்டும்?அவர் சிகிச்சைக்காக செல்லவில்லை; ரூபாய் நோட்டை மாற்ற செல்கிறார். கருணாநிதி, மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை; குடும்பத்திற்கு சேவை செய்யவே வந்துள்ளார். காங்., கூட்டணிக்கு, 63 சீட் கொடுத்ததின் ரகசியம் என்ன தெரியுமா? குடும்பத்தினரை கைது செய்யமாட்டார்கள் என்பதற்காக தான் . தேர்தல் முடிவுக்கு பின், குடும்பத்துடன் கைதாவது உறுதி.


தமிழர்களின் உணர்வை கச்சத்தீவு மூலம் தாரை வார்த்து கொடுத்தார். இலங்கை கடற்படையால், 550 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் ஆவிகூட, கருணாநிதியை மன்னிக்காது. எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சியில் கூட்டணி வைத்திருப்பது, பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சி அமையும் என்ற பயத்தில், சில, "டிவி' களில், விஜயகாந்த் தப்பா பேசுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதும், மீண்டும் மீண்டும் காட்சிகளை போடுவதுமாக உள்ளனர்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Tuesday, April 5, 2011

தேர்தல் கமிஷன் கலக்கலால் கலங்குகின்றன கட்சிகள்: மக்கள் நிம்மதி

முன்பெல்லாம் தேர்தல் என்றால், எங்கு பார்த்தாலும், ஒலிப்பெருக்கி சத்தம், பாடல்கள், குத்தாட்டம், அனல் பறக்கும் பிரசாரங்கள், ஒளி அமைப்புகள், சுவர் விளம்பரங்கள் என அமர்க்களப்படும். ஆனால், இப்போது தேர்தல் கமிஷனின் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள், அரசியல் கட்சிகளுக்கு சோகமாக இருந்தாலும், பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் சமயங்களில், ஒரு கட்சியினர் மீது இன்னொரு கட்சியினர் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்வது வழக்கம். ஆனால், தற்போது தேர்தல் கமிஷன் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. தேர்தல் கமிஷனிடம் வரும் புகார்களின் எண்ணிக்கையும், வழக்கு பதிவுகளும் அதிகரித்துள்ளன. தமிழகத்தில், இதுவரை 52 ஆயிரம் தேர்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் பார்க்காமல், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. வாகன சோதனை நடத்தி, கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்படுகிறது. அதுமட்டுமன்றி, வேட்பாளர்கள் தங்களது வங்கிக் கணக்கு மூலமே, தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டுமென, புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.வங்கிகளில் ஒரு கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல், பரிவர்த்தனை நடந்தால், அதை மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்க வேண்டுமென, அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சியினர் பணம் வினியோகிப்பதற்கு சிரமப்படுகின்றனர். எங்கு பார்த்தாலும், @பாக்குவரத்தை பாதிக்கும் வாகன ஊர்வங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.


பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதால், வீடுகளின் சுவர்கள் தப்பியுள்ளன. ஒவ்வொரு பிரசாரத்தையும் வீடியோவில் பதிவு செய்து, அதன் மூலம் வேட்பாளரின் செலவுக் கணக்கை மதிப்பிடுவதால், அதிகளவில் தோரணங்கள் மற்றும் "கட்-அவுட்'களை காணோம்! இவைஅனைத்தையும் தடுத்தாலும், போலீஸ் மற்றும் அதிகாரிகளின் துணை இருந்தால், தேர்தல் கமிஷனுக்கே, "டிமிக்கி' கொடுத்து விடலாம் என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் துவக்கியது. ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் முதல், உயரதிகாரிகள் வரை, அந்த இடத்தில் இருந்து வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டுமென உத்தரவிட்டது.


சில மாவட்ட கலெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். முன்னெப்போதும் இல்லாத வகையில், டி.ஜி.பி.,யே Œட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர், விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.அதிகாரிகள் மீது புகார் வந்தால் தான், இதுபோன்ற நடவடிக்கைகள் முன்பு எடுக்கப்படும். ஆனால், புகார் இல்லாமலேயே, அவர்கள் மீது சந்தேகமோ, முந்தைய தேர்தல்களில் நடவடிக்கையோ எடுக்கப்பட்டிருந்தாலே, இம்முறை இடமாற்றம் செய்துவிடுவது என்ற நடைமுறையை தேர்தல் கமிஷன் கடைபிடிக்கத் துவங்கியுள்ளது. இதன் காரணமாகவே, உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி., விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.


முந்தைய தேர்தலின் போதும், உளவுத் துறை டி.ஐ.ஜி.,யாக இருந்த சிவனாண்டி மாற்றப்பட்ட போதிலும், அவருக்கு மேல் உயரதிகாரிகள் அந்த பிரிவில் இருந்தனர். தற்போது, உயரதிகாரிகளை மாற்றியதால், அதற்குக் கீழ் நிலையில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு பயம் வந்துவிட்டது. இதனால், பாரபட்சமின்றி, தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி செயல்படத் துவங்கியுள்ளனர்.மதுரை மாவட்ட கலெக்டர் தன்னை நிர்பந்திப்பதாக, தொகுதி தேர்தல் அதிகாரியே புகார் தெரிவித்தார். இதையடுத்து, தொகுதி தேர்தல் அதிகாரியை அப்பணியில் இருந்து தேர்தல் கமிஷன் விடுவித்தது. இப்படி எல்லாம் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுப்பதால், அதன் மீது மக்களிடையே மதிப்பு கூடியுள்ளது.அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை, "கதாநாயகி, கதாநாயகன்' என்று கூறிவந்தாலும், இந்த தேர்தலைப் பொறுத்தவரை உண்மையான, "கதாநாயகன்' தேர்தல் கமிஷன் தான்.

Monday, April 4, 2011

அரசியல் கட்சிகளின் "மாஸ்டர் பிளான்' அம்பலம்: சர்வே நடத்தி பணம் பட்டுவாடா?

தமிழக வாக்காளர்களுக்கு, அரசியல் கட்சியினர் பணம் வினியோகிக்கும் வழிமுறைகள் தொடர்பான புதிர், கோவையில் விலகியது. தொகுதி வாரியாக வீடு வீடாக தி.மு.க.,வினர் கணக்கெடுத்து, அரசின் நலத்திட்டங்கள் எதிலுமே பயனடையாத வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், கணக்கெடுப்பில் ஈடுபட்டு சிக்கிய தி.மு.க.,வினரிடம், தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.


கொள்கைகளை முன்வைத்தும், நாட்டின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை வாக்குறுதியாக அளித்தும் அரசியல் கட்சியினர் தேர்தலை எதிர்கொண்ட காலம், மலையேறிவிட்டது. இலவச பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனங்களாக திராவிடக் கட்சிகள் மாறிவிட்டன. ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்து வருவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார்கள் தொடர்ந்து வந்தபடி உள்ளன. பணம் வழங்கப்படுவது எங்கே, எப்படி என்ற விவரம் தெரியாமல் அதிகாரிகள் திக்குமுக்காடுகின்றனர். தேர்தல் கமிஷனின் கண்காணிப்பு கெடுபிடிகளை மீறி அரசியல் கட்சிகள், தமிழகத்தின், 234 தொகுதிகளின் வாக்காளர்களுக்கும் பணம் வழங்க சாத்தியக்கூறுகள் உள்ளனவா, அதற்கான பல நூறு கோடி ரூபாய் எங்கிருந்து, யாரால், எந்த வழிமுறைகளில் கடத்திச் செல்லப்படுகிறது, தொகுதி வாரியாக யாரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டு, எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் தேர்தல் அதிகாரிகள் திணறி வந்தனர்.


இதற்கான, விடை கோவையில் சமீபத்தில் வெளிப்பட்டது. கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள தெலுங்குபாளையம்புதூர் பகுதியில், தி.மு.க., வினர், வீடு வீடாக வாக்காளர்களிடம் கணக்கெடுப்பு நடத்துவதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. விரைந்து சென்ற தேர்தல் அதிகாரி சிவஜோதி தலைமையிலான குழுவினர், கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த தி.மு.க.,வைச் சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்ட சிலரைப் பிடித்தனர். அவர்கள் வசம் இருந்த மாதிரி வாக்காளர் பட்டியலுடன் கூடிய, கணக்கெடுப்பு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களை அணுகியதாக செந்தில்குமார் உள்ளிட்டோர் மீது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


பணம் வழங்க புதிய யுக்தி: தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட கையேட்டில், "தி.மு.க., - வாக்காளர் விவர கணக்கெடுப்பாளர் கையேடு' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அதில், கணக்கெடுப்பு நடத்தப்படும் தொகுதி, உள்ளாட்சி பாகம் எண், கணக்கெடுக்கப்பட வேண்டிய வாக்காளர்களின் பெயர், ஓட்டுச் சாவடி குழு உறுப்பினர் பெயர், கணக்கெடுப்பு களப்பணியாளர் பெயர், அவரது பேக்ஸ் நம்பர், மொபைல் போன் எண், போன் எண் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன.கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய வார்டில் வசிக்கும் வாக்காளர்களின் விபரம் உள்ளிட்ட பல கேள்விகள் எழுப்பப்பட்டு, பதிலளிக்க ஏதுவாக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.


இறுதியாக தரப்பட்டுள்ள இணைப்புச் சீட்டில், தி.மு.க.,வின் ஐந்தாண்டு கால ஆட்சியில் வாக்காளர் பயன் ஏதும் அடைந்துள்ளாரா என்ற கேள்வி தரப்பட்டுள்ளது. இதற்கான பதிலை, "டிக்' செய்ய ஏதுவாக கலைஞர் வீடு வழங்கும் திட்டம், விவசாய கடன் தள்ளுபடி, இலவச "டிவி', இலவச காஸ் அடுப்பு, கலைஞர் காப்பீடு திட்டம், திருமண உதவி, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் அல்லது விதவை அல்லது மாற்றுத் திறனாளி அல்லது அமைப்புசாரா உதவித் தொகை, அரசு பணி பெற்றவர், வேலை இல்லா பட்டதாரி உதவித் தொகை, கல்வி கட்டண சலுகை, 108 ஆம்புலன்ஸ் உதவி என்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன.


கணக்கெடுப்பு குழுவினர், வாக்காளரிடம் மேற்கண்ட கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை, ஆவணத்தில் "டிக்' செய்ய வேண்டும் என, மேலிடம் உத்தரவிட்டிருக்கிறது.இதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எனினும், கணக்கெடுப்பு எதற்காக நடத்தப்பட்டது என்ற விவரம், தங்களுக்கு தெரியாதென கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட நபர்கள் கைவிரித்துவிட்டனர். வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் திட்டத்துடன் ஆளுங்கட்சி சார்பில் கணக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது என அ.தி.மு.க., வினர் குற்றம்சாட்டியுள்ளனர். அது உண்மை தானா என தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Sunday, April 3, 2011

"ஸ்பெக்ட்ரம்' ராஜா, "ஜாமீன்' மனு செய்யாதது ஏன்? திடுக்கிடும் பின்னணி தகவல்கள்


"நான் தவறே செய்யலை... நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்என, பேட்டிக்குப் பேட்டி,"டயலாக்' விட்ட முன்னாள் அமைச்சர் ராஜா, "ஸ்பெக்ட்ரம்' புயலில் சிக்கி சின்னாபின்னமாகி, 52 நாட்களுக்கும் மேலாக டில்லி திகார் ஜெயிலில் உள்ளார். தேர்தலில் தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டிய அவரைப் பற்றி, இன்று எதிர்க்கட்சிகள் வீதிக்கு வீதி பேசி, ஆளுங்கட்சிக்கு அனலை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

சின்ன வழக்காக இருந்தாலும், முன் ஜாமீனுக்காக முன்கூட்டியே கோர்ட் படிக்கட்டுகளை ஏறுவார்கள் அரசியல்வாதிகள். ஆனால், சி.பி.ஐ., வலையில் சிக்கி திணறிக்கொண்டிருக்கும் ராஜா, இதுவரை ஜாமீன் பெற முயற்சிக்காதது ஏன்?



"ஸ்பெக்ட்ரம்' ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பிப்., 2ம் தேதி ராஜாவை சி.பி.ஐ., கைது செய்தது. அவரது, தனிச் செயலராகப் பணியாற்றிய ஆர்.கே.சந்தாலியா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா ஆகியோரையும் சி.பி.ஐ., கைது செய்தது. கைதான பின், பல முறை சி.பி.ஐ., விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின், டில்லி திகார் சிறையில் ராஜா அடைக்கப்பட்டார். சிறையில் 50 நாட்களுக்கும் மேலாக வாடிக்கொண்டிருக்கும் ராஜா, இதுவரை ஜாமீன் பெற முயற்சிக்கவில்லை.கட்சித் தலைமை உத்தரவிட்டதன் பேரில் தான், ராஜா அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.


இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறும்போது,"குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபின், ஜாமீன் கோரி மனு செய்ய ராஜா திட்டமிட்டுள்ளார். இதற்கு முன் ஜாமீன் பெற்றால், தேவையற்ற விமர்சனங்கள் வரும்' என்றனர்.


ஆனால், ராஜா ஜாமீன் மனு செய்யாததற்கு வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஜாமீன் கேட்டு ராஜா மனு செய்து, அம்மனு மீது வழக்கு நடைபெற்றால், பல்வேறு கேள்விகள் பூதம்போல் எழும்பும். குறிப்பாக, "வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார், யார்? அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதா? அவர்கள் கைது செய்யப்படவேண்டியவர்களா? அவர்களுக்கும், ராஜாவுக்கும் உள்ள தொடர்புகள் என்னென்ன?' போன்ற சரமாரியாக கேள்விகள் வந்து விழும்.இதற்கு, ராஜா கட்டாயம் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி, பதிலளித்தால், அதையொட்டி, கோர்ட் புதிய உத்தரவுகளை வெளியிட நேரிடும். அதுபோன்று ஒரு நிலை ஏற்பட்டால், ஆளுங்கட்சியில் மிகப்பெரிய சூறாவளி ஏற்பட்டுவிடும் என்று முன்கூட்டியே தெரிந்து தான், ஜாமீன் கேட்காமல் ராஜா அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.


மேலும், கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழி ஆகியோரை சி.பி.ஐ., விசாரித்துள்ளது. இந்நிலையில், ராஜா ஜாமீன் கோரி மனு செய்தால், அதுதொடர்பான விசாரணையில், இவர்களது பெயர்களையும் இழுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிடும் என்பதும், ராஜாவின் மவுனத்திற்கு ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. "தேர்தல் நடைபெறும் போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக எழும் விவாதங்கள் அவசியமற்றது' என்று தி.மு.க., தலைமை கருதுவதால், ராஜாவை அமைதி காக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Saturday, April 2, 2011

என் அருமைத் தோழனின் லவ்வும் கலர் போன வானவில்லும்!

காதலிக்கறது இனிப்பானதா இல்லையான்னு எனக்கு தெரியாது. ஆனா காதலிக்கறவனுக்காக லவ் லெட்டர் எழுதி தரது 'பால் கோவா'குள்ள பச்சை மிளகாயை வெச்சு சாப்பிடற மாதிரி.. மேலோட்டமா பாக்கும் போது நாக்குல எச்சி ஊறும்.. கடிச்சு திண்ணும்போது கண்ல கண்ணீர் ஊறும்.

எதுக்கு இப்ப இந்த பாழாப்போன ஃபிலாசபி..? சொல்றேன்.

ப்ளஸ் டூ பரிட்சைக்கு ஸ்டடி ஹாலிடேஸ்ல நிறைய படிச்சு படிச்சு, ஒண்ணும் மனப்பாடம் ஆகாததால கடுப்பாகி, அந்த வெறுப்புல நான் கவிஞன் ஆயிட்டேன்.. ஆக்கிட்டாங்க.. நியாயமா பாத்தா '3 இடியட்ஸ்' கதைய நான் தான் எழுதியிருக்கணும்.. யாரோ எழுதி யாரோ எடுத்து பேர் வாங்கிட்டாங்க.. விடுங்க.

ஒருத்தன் கவிஞன் ஆக என்ன பண்ணனும்? மொதல் வேலையா கண்ணதாசன், வைரமுத்து, வாலி இவங்க எழுதின சினிமா பாட்டையெல்லாம் மனப்பாடம் பண்ணனும். எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டு வரியை நாம நிறுத்தி நிதானமா ரசிச்சு சொல்லத் தெரியணும். சொல்ல கத்துகிட்டேன். அதுதான் தப்பா போச்சு.. வந்தது வம்பு.

வினோத் கைல அக்கவுண்ட்ஸ் நோட்புக்கோட வந்தான். நான் அலட்சியம் கலந்த நக்கலோட ஒரு அரை சிரிப்பு சிரிச்சேன்.. (கவிஞன்னா அப்படி தான் சிரிக்கணும்..!) "எதுக்கு இந்த படிப்பு..? வரவு இல்லேன்னா செலவு.. நம்பரை வலது பக்கம் போடணும்.. இல்லேன்னா இடது பக்கம் போடணும்.. இதுல என்ன கிரியேட்டிவிட்டி இருக்கு..?"

வினோத் நோட்புக்கை திறந்து அதுலேந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான். அதுல அழகான கையெழுத்துல அபத்தமா நாலு வரி எழுதியிருந்தது.

"என்னடா இது..?"

"பாத்தா தெரியல.. கவிதை.."

"யார் எழுதினது?"

வினோத் விட்டத்தை பார்த்தபடி மோனாலிசா மாதிரி சிரிச்சுகிட்டே சொன்னான் "சுப்ரியா"

அடப்பாவி.. லவ்வா..? ஈர்குச்சி மாதிரி இருக்க இவனுக்கு லாலிபாப் மாதிரி இருக்க அவ மேல அப்படி என்ன ஈர்ப்பு.. (இந்த லைனை நோட் பண்ணி வெச்சுக்கணும்.. பிற்பாடு எதாவது கவிதை எழுதும்போது அடிச்சிவுட்றலாம்..)

மறுபடியும் ஒருமுறை அந்த கவிதைய படிச்சு பாத்தேன்..


"வானவில்"

சூரிய 'சூடு'
பட்ட இடத்தில்
மழை 'நீர்' தொட்டதால்
அங்கே
கலர் கலராய்
கொப்புளங்கள்!

- சுப்ரியா

கொப்புளமா.. ? அடத்தூ..! அய்யோ.. இனிமே வானவில்லை பாக்கும்போதெல்லாம் இது ஞாபகம் வந்து தொலைக்குமே..!

ரொம்ப ஓவரா ரியாக்ட் பண்றேனோ..? நல்லாத்தான் இருக்கோ.. நமக்கு எழுத வரலைன்னு பொறாமைனால பொங்கறேனோ..?

"வினோத்.. என்ன மச்சான் இது..?"

வினோத் என் தோள் மேல கைய போட்டு "மச்சான்.. இந்த கவிதை எனக்கு புரியல.. ஆனா இது சுப்ரியா என் பிறந்த நாளுக்காக ஸ்பெஷலா எழுதின கவிதை.. "

மறுபடியும் பேப்பரை பாத்தேன்.. கவிதைக்கு கீழ '(செல்ல வினோத்.. இந்த கவிதை உனக்கு என் பிறந்த நாள் பரிசு)' ஸ்ஸ்ஸப்ப்பா.. தாங்கலைடா சாமி..!

"சரி.. இப்ப எதுக்கு இதை எங்கிட்ட கொண்டு வந்த..?"

"என் 'பர்த் டே'க்கு அவ கவிதை குடுத்துட்டா.. பதிலுக்கு நானும் அவளுக்கு கவிதை குடுக்கணும்.."

"குடு"

"எனக்கு தான் கவிதை எழுத தெரியாதே.. நீ ஒரு கவிஞன்.. அதனால.."

பால்கோவாவுக்குள்ள பச்சை மிளகாய பதுக்கி வெச்சு, அதை என்னை பாக்க வெச்சுட்டான்.. படுபாவிப்பய..

ஆனா, ஆசை யாரை விட்டது ? நம்மை நம்பி வந்தவனை.. அதுவும் கவிஞன்னு நம்பி வந்தவனை கைவிட்டா, தமிழ்த் தாய் என்னை செருப்பால அடிக்க மாட்டாளா..? ஸோ.. கவிதை எழுதிடலாம்னு டிசைட் பண்ணிட்டேன்..

"வினோத்.. எந்த மாதிரி கவிதை வேணும்.. அவளுக்கு நன்றி சொல்ற மாதிரியா..?" ஹோட்டல்ல சர்வர் "என்ன சார் வேணும்"னு கேக்கற மாதிரி கேட்டேன்.

"ம்ஹூம்.. அவளை வர்ணிச்சு எழுதணும்.. அப்ப தான் கவிதைய நான் எழுதினதா நம்புவா.."

சுப்ரியாவை வர்ணிச்சு எப்படி எழுத முடியும்..? அதுவும் அவ காதலனை பக்கத்துல வெச்சுகிட்டு..?

"என்ன மச்சி யோசிக்கற..? கவிதை எழுத வராதா..?"

எனக்கு தோல்கல்.. சாரி.. தோள்கள் தினவெடுத்தன.. நாக்கு நமநமத்தது. மூச்சை நல்லா உள்ளே இழுத்து விட்டுகிட்டு, "திக்கெட்டும் பாடப்பட வேண்டிய என் கவிதையை உன் பாக்கெட்டு மட்டும் சுமப்பதா..? என் செய்வேன்.. காதலை சாக்கிட்டு கேட்கப்படும் உதவிக்கு நான் மறுத்தால் என் நா கெட்டுப் போகாதோ..?"

வினோத் அப்டியே ஆடிப்போயிட்டான்.. "அய்யய்யோ.. இதுவே கவிதை மாதிரி இருக்கே.. சூப்பர் மச்சான்.. நல்ல 'மூட்'ல இருக்க.. டக்குனு அவளை நல்லா வர்ணிச்சு ஒரு கவிதை எழுதி குடுத்துடு.."

கோடீஸ்வரன் வீட்ல கார் டிரைவரா இருக்கறவன் குடுத்து வெச்சவன்.. வேளா வேளைக்கு சோறு.. ஓட்றதுக்கு பி.எம்.டபிள்யூ காரு.. அப்பப்ப மத்த டிரைவருங்க கூட அக்கப்போரு.. மொதலாளி கூட ஊட்டி, கொடைக்கானல்னு சம்மர்ல டூரு.. ஜாலியான வாழ்க்கை.. ஒரு வேளை மொதலாளி திவால் ஆயிட்டார்னா கூட, அடுத்த வேலைய பாத்துகிட்டு போயிடலாம்.

அடுத்தவனுக்கு லவ் லெட்டர் எழுதித் தரதும் அந்த கார் டிரைவர் வேலை மாதிரி தான். நல்லா ரசிச்சு, லயிச்சு, வார்த்தைகளை வளைச்சு வளைச்சு எழுதி குடுக்கலாம்.. நல்லா இருந்துச்சுன்னா பாராட்டு.. சொதுப்பிடுச்சுன்னா நஷ்டம் நமக்கில்லை. என்ன சொல்றீங்க பாஸ்..?

கவிதை எழுதித் தரேன்னு ஒத்துகிட்டேனே தவிர, எழுத ஆரம்பிக்கும்போது தான் எனக்கு ஆரம்பிச்சுது சனி. சுத்தமா ஒண்ணுமே தோணலை.

அந்த கவிதைய முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.. அப்பறம் ஒரு மாதிரி கொஞ்சம் ரைமிங்கா எனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச வார்த்தைங்களை எல்லாம் போட்டு.... அதை கிட்டத்தட்ட கவிதை மாதிரி ஆக்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு..

அதை எழுதி முடிச்சதும் தான் தெரிஞ்சுது எனக்கு சுத்தமா கவிதை எழுதவே வராதுன்னு.. வேணும்னா அடுத்தவன் கவிதைய படிக்கலாம், அவ்ளோதான். ச்சே... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே..!

ஆனா, இதை வினோத் கிட்ட சொல்ல முடியுமா..? தப்பும் தவறுமா கவிதைன்ற பேர்ல குடுத்த பேத்தலை வினோத் அப்படியே இன்னொரு பேப்பர்ல எழுதி, கீழ "என்றும் உன்... வினோத்"னு போட்டுகிட்டான்.

என்னவாகப் போகுதோன்னு எனக்கு வயத்தை கலக்க ஆரம்பிச்சிடுச்சு.. இவன் காதல் சக்சஸ் ஆகாட்டியும் பரவால்ல, நாம மக்குன்னு ஊருக்கு தெரிஞ்சிடக் கூடாதேன்னு கவலையா இருந்தது.

வினோத் ஒரு பத்து பதினஞ்சு தடவை அதை படிச்சு பாத்தான். அப்பறம் 'தளபதி' படத்துல மம்முட்டி அவர் பொண்டாட்டிகிட்ட ரஜினிய அறிமுகப்படுத்தும் போது காமிப்பாரில்ல ஒரு எக்ஸ்பிரஷன்.. அதே மாதிரி பெருமையா மூஞ்சை வெச்சுகிட்டு, என் தோள் மேல கைய போட்டு என் கண்ணை உத்து பாத்தான்.

"இந்த கவிதை எனக்கு புரியலை.. ஆனா ஒண்ணு மச்சான்.. இது அவளுக்கு பிடிச்சிருந்தா, உனக்கு கண்டிப்பா ட்ரீட் வெக்கறேன்.. அது மட்டும் இல்லை.. எங்களுக்கு பொறக்கற குழந்தைக்கு உன் பேரை வெக்கறேன்.."ன்னு சொல்லிட்டு என் கன்னத்தில் ஒரு இச்சும் லவ் லெட்டருக்கு ஒரு இச்சும் கொடுத்துவிட்டு போய்த் தொலைஞ்சுது அந்த அச்சுபிச்சு.

அதுக்கப்பறம் நான் ப்ளஸ் டூ ஃபெயில் ஆகி.. பரிட்சை எழுதி ஃபெயில் ஆகி.. மறுபடியும் எழுதி.. சரி விடுங்க.. உங்களுக்கு தெரியாததா.. ப்ளஸ் டூ முடிக்கவே ரெண்டு மூணு வருஷம் ஆயிடுச்சு பாஸ். அதுக்கப்பறம் டிகிரி முடிச்சு, வேலைக்கு போய்..

நடுவுல வினோத் தொடர்பு எல்லைக்கு வெளியே போயிட்டான்.. நானும் அவனை மறந்துட்டேன்..

ஒரு நாள் ஆபிஸ் வேலையா பெங்களூரு போயிருந்தேன்.. போன வேலை முடியலை.. கடுப்பா எம்.ஜி ரோடு பக்கத்துல இருக்க 'கமர்ஷியல் ஸ்ட்ரீட்'ல நடந்து வந்திட்டிருக்கும்போது, வானத்துல தூரத்துல லைட்டா வானவில் தெரிஞ்சுது. அதை பாத்ததும் அப்டியே மனசு லேசாயிடுச்சு..

'கொப்புள கவிதை' ஞாபகம் வந்துடுச்சு.. அந்த பொண்ணு பேரு என்ன.. ஏதோ பாக்கு மாதிரி வருமே.. அஜந்தாவா? ச்சே.. ஆங்.. சுப்ரியா..!

வினோத் லவ் மேட்டர் என்னவாகியிருக்கும்..? அவளையே கல்யாணம் பண்ணிட்டிருப்பானோ.. பொறக்கற குழந்தைக்கு என் பேரை வெக்கறேன்னு உணர்ச்சிவசப்பட்டு சொன்னானேன்னு யோசிச்சுகிட்டே நடக்கும்போது, எதிர்ல வந்த பொம்பள மேல மோதிட்டேன்..

"ஐயோ.. சாரி மேடம்.. தெரியாம..."

"இட்ஸ் ஓகே " என்னை நிமிர்ந்து பாத்து.. " நீங்களா..? எப்ப வந்தீங்க பெங்களூருக்கு.. ?"

ஆ.. இது சுப்ரியா.. என்ன இப்படி குண்டாயிட்டா.. லாலிபாப் மாதிரி இருந்தவ குண்டு பீப்பா மாதிரி ஆயிட்டாளே..!

"நீங்க சுப்ரியா தானே..?"

சிரித்தாள். "ஆமா.. என்னை அடையாளம் தெரியலையா..?"

"தெரிஞ்சுது.. இருந்தாலும்.."ன்னு வார்த்தைகளை முழுங்கினேன்.

"இது என்னோட சன்.." பையன் ஆம்பளை பார்பி பொம்மை மாதிரி அழகா இருந்தான்.

"ஹாய்.. உன் பேர் என்ன..?" கேட்டு முடிக்கல.. அதுக்குள்ள என் செல்போன் சிணுங்க, எடுத்து பேசினதுல.. சாரி.. கேட்டதுல.. எங்க ஆபிஸ் மேனேஜன்.. உடனடியா ஒரு கிளையன்ட் ஆபிஸுக்கு போய், அங்க நாங்க கொடுத்திருந்த சாஃப்ட்வேர் புரோகிராமில் இருக்க தப்பை எல்லாம் சரி செய்ய சொல்லி உத்தரவு... ஓகே சார்.. (போய்த் தொலையறேன்...) தப்பு பண்றதெல்லாம் நீங்க.. திட்டு வாங்கவும், தப்பை சரி செய்யவும் நாங்களா.. என்ன பொழப்போ..

சுப்ரியா சிரித்தபடி, "ரொம்ப பிஸியா இருக்கீங்க போலருக்கு.. உங்க செல்போன் நம்பர் சொல்லுங்க.. கட் கால் குடுக்கறேன்.. என் நம்பரை ஸ்டோர் பண்ணிக்கங்க.."

நர்சரி பசங்க ரைம்ஸ் சொல்ற மாதிரி, தன்னிச்சையா என் செல் நம்பரை சொன்னேன்.

செல்போன் சிணுங்க, கட் செய்துவிட்டு "தாங்க்ஸ்.. அப்பறம் பேசறேன்.." ஆபிஸ் அவசரம் தொற்றிக் கொண்டது.

அந்த பக்கமா வந்த ஆட்டோவுல ஏறும்போது தான் வினோத் பத்தி கேக்கலையேன்னு ஞாபகம் வந்தது. பையனுக்கு என்ன பேர்னு கேட்டுக்கலியே.. ஒருவேளை என் பேரா இருந்தா, நிச்சயம் வினோத் தான் புருஷன்.

ஆட்டோ நகர ஆரம்பித்தது.. வெளியே எட்டிப் பாத்து கத்தினேன் "பையா.. உன் பேர் என்ன..? "
"வினோத்"

பையன் எனக்கு டாட்டா காட்டிகிட்டிருந்தான். சுப்ரியா சிரிச்சுகிட்டே நடக்க ஆரம்பிச்சா.. ஆட்டோ ஓட ஆரம்பிச்சது, வானவில்லை நோக்கி.



http://new.vikatan.com

Friday, April 1, 2011

தன்னிலை

பயங்கள் தன்
சாயல்கள், பரிமாணங்கள்
என யாவையும்
தூரவே வைத்து இருந்தது
தொட முடியாத் தொலைவொன்றில் .

எதிர்பார்ப்பின் சாதாரண
பிரதிபலிப்பு கூட
சலனங்களை காட்ட முடியாது
தோல்வி முகம் தழுவியது

வேஷங்கள்
முகமூடிகள்...
என எவைக்கும்
தேவை இருக்கவில்லை

எந்தவித அவசரமோ
இல்லை ஆர்பாட்டமோ
எல்லாவற்றையும் துறந்த
துறவு நிலை

என்ன...
புழுக்கம் மிகுந்து அடைபட்டு கிடக்கையில்
எல்லோரும் என்னை "பிணம்" என்கிறார்கள்...
வீட்டை "கல்லறை" எனவும்...

new vikatan