Saturday, December 17, 2011

தமிழக - கேரள முதல்வர்கள் பேச வேண்டும்: அப்துல்கலாம் யோசனை

திருவனந்தபுரம்: "முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை, தமிழக - கேரள முதல்வர்கள் பேசி தீர்க்க வேண்டும்' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆலோசனை தெரிவித்தார்.

கேரளா தலைநகர் திருவனந்தபுரம் அருகே கழக்கூட்டம் பகுதியில், சைனிக் பள்ளியில் நடந்த விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ""முல்லை பெரியாறு அணை குறித்து இரு மாநில முதல்வர்களும் நேரில் பேசி, சுமுகமாக பிரச்னையை தீர்க்க வேண்டும். இரு முதல்வர்களும் பேசும் போது, அணையின் பாதுகாப்பு, செலவு, பயன்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்க வேண்டும். இரு மாநிலங்களுக்கும் இடைய பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் நல்லுறவு, அணை பிரச்னையால் பாதிக்கப்படக் கூடாது' என்றார். இந்நிலையில், காசர்கோட்டில் நேற்று காலை முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில், "கேரள அரசை பொறுத்தவரையில் எந்த ரகசிய செயல் திட்டமும் கிடையாது. எங்களிடம் உள்ள ஒரே திட்டம், பொதுமக்களின் பாதுகாப்பு தான்' என்றார்.

Friday, December 16, 2011

சோனியா வீடு முன் போராட்டம்: ஹசாரே எச்சரிக்கை

புதுடில்லி: "லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றவில்லை என்றால், அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.சோனியா, ராகுல் உள்ளிட்ட எம்.பி.,க்களின் வீடுகளின் முன், போராட்டம் நடத்துவோம்'என, காந்தியவாதி அன்னா ஹசாரே கூறினார்.

"லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும்' என, காந்தியவாதி அன்னா ஹசாரேயும், அவரது குழுவினரும் வலியுறுத்தி வருகின்றனர். இல்லையெனில், வரும் 27ம் தேதி முதல், டில்லி அல்லது மும்பையில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாகவும் ஹசாரே அறிவித்துள்ளார். இதற்கிடையே, லோக்பால் விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக, அனைத்துக் கட்சி கூட்டம், டில்லியில் நேற்று முன் தினம் நடந்தது. இதில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், லோக்பால் மசோதா, நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.நீட்டிக்க வேண்டும்


ஹசாரே உயர் மட்டக் குழுவின் கூட்டம், இரண்டாவது நாளாக நேற்றும் டில்லியில் நடந்தது. அப்போது, ஹசாரே கூறியதாவது: லோக்பால் மசோதா தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம், தோல்வி அடைந்தது குறித்து பிரச்னை இல்லை. பார்லிமென்டில் அனைத்து எம்.பி.,க்களும் உள்ளனர். அங்கு, மசோதா தாக்கல் செய்யப்படும் போது, அனைத்து எம்.பி.,க்களும், அதை ஆதரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. நடப்பு கூட்டத் தொடரிலேயே, மசோதா நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில், லோக்பால் மசோதா குறித்து விவாதிப்பதற்கு, தற்போதைய கூட்டத் தொடரில் போதிய நேரம் இல்லை. எனவே, குளிர்கால கூட்டத் தொடரின் நாட்களை நீட்டிக்க வேண்டும்.


சிறை நிரப்பும் போராட்டம்: நடப்பு கூட்டத் தொடரில் மசோதா நிறைவேற்றப் படாவிட்டால், முதல் கட்டமாக, வரும் 27ம் தேதி முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து சிறை நிரப்பும் போராட்டம் மேற்கொள்ளப்படும். சோனியா, ராகுல் உள்ளிட்ட எம்.பி.,க்களின் வீடுகளின் முன்னும், போராட்டம் நடத்தப்படும்.


மும்பையா, டில்லியா? வானிலை மாற்றம் காரணமாகவே, 27ம் தேதி நடக்கவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை, டில்லியிலிருந்து மும்பைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம். சாதகமான வானிலை நிலவினால், டில்லியிலேயே போராட்டத்தை மேற்கொள்வோம். இவ்வாறு, அன்னா ஹசாரே கூறினார்.


அரசு தரப்பும் உறுதி: பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியதாவது: நேற்று (நேற்று முன்தினம்) நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், 35 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இவை அனைத்தையும் தொகுத்து, ஒருமித்த கருத்து ஏற்படுத்த வேண்டும். இதனால், அரசின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. அரசின் கருத்தும், இதில் சேர்க்கப்பட வேண்டும். நடப்பு கூட்டத் தொடரிலேயே, லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு, அரசு கடும் முயற்சிகளை மேற்கொள்ளும். குளிர்காலக் கூட்டத் தொடர், இன்னும் ஒரு வாரம் மட்டுமே நடக்க இருப்பதால், இந்த காலக் கெடுவுக்குள் மசோதாவை நிறைவேற்ற முடியாது என கூற முடியாது. வரும் 20ம் தேதி லோக் சபாவிலும், 21ம் தேதி ராஜ்ய சபாவிலும், லோக்பால் குறித்து விவாதம் நடக்கலாம். கூடிய விரைவில், மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற, அரசு தரப்பில் முழு முயற்சி மேற்கெள்ளப்படும். இவ்வாறு பவன் குமார் பன்சால் கூறினார்.


கொறடா உத்தரவு: லோக்பால் மசோதா, அடுத்த வாரம் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால், "வரும் 19ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை, அனைத்து எம்.பி.,க்களும், கட்டாயம் பார்லிமென்ட்டிற்கு வருகை தர வேண்டும்' என, தன் எம்.பி.,க்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tuesday, December 13, 2011

அம்மாவை மீட்டுத் தரக் கோரி கலெக்டர் ஆபீஸ் வந்த குழந்தை

கோவை: காதல் கணவனையும், மூன்று வயது குழந்தையையும் பிரிந்து தலைமறைவானார் மனைவி; மீட்டுத்தருமாறு குழந்தையுடன் வந்து, கலெக்டரிடம் மனு கொடுத்தார், கணவன். அன்னூர் அருகே, ஓரைச்சல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதாசலம். இவரது மனைவி மகேஸ்வரி. வெவ்வெறு ஜாதியை சேர்ந்த இருவரும், 2007ம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு, மூன்று வயதில் யுவன் சாதிக் என்ற மகன் இருக்கிறான். மகேஸ்வரி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார். கடந்த நவ., 5ம் தேதி கல்லூரிக்கு படிக்க சென்ற மகேஸ்வரி, வீடு திரும்பவில்லை; தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அவருக்கு பெற்றோர் வேறு திருமணம் நடத்த முயற்சி செய்து வருவதாக மருதாசலம் கூறுகிறார். "கடந்த ஒரு மாதமாக தாயைப் பிரிந்த நிலையில், குழந்தை எந்நேரமும் அழுது கொண்டே இருக்கிறான். குழந்தையை காப்பாற்ற, வேலைக்கு செல்லக் கூட முடியாத நிலையில் உள்ளேன். மனைவியை மீட்டுத் தர வேண்டும்' என, மருதாசலம் குழந்தையுடன் வந்து, நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

மக்கள் குறைதீர்ப்பு முகாமில் அவர் அளித்த மனு: நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன். மனைவி உயர் ஜாதியை சார்ந்தவர். இதனால், எங்கள் திருமணத்தை மனைவியின் பெற்றோர் விரும்பவில்லை. அவரை, "நிலத்துக்கு கையெழுத்து போட வேண்டும்' எனக் கூறி, அழைத்து சென்றுவிட்டனர். அவர் படிக்கும் கல்லூரிக்கு சென்றபோது, கல்லூரி நிர்வாகமும் என்னை பார்க்க அனுமதிக்கவில்லை. மனைவியை மீட்டுத் தருமாறு, நவ.,14ல் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். போலீசார் கூறியும், அவர் வரவில்லை. அவரது பெற்றோர் என்னை மிரட்டுகின்றனர். என் மனைவிக்கு வேறு திருமணம் செய்து வைக்க, திட்டமிட்டுள்ளனர். எனக்கும், குழந்தைக்கும் தற்கொலையைத் தவிர வேறு வழி இல்லை. குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மனைவியை மீட்டுத் தர வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

Monday, December 12, 2011

பெரியாறு அணை: தமிழக உரிமையை பறிக்க முடியாது

உத்தமபாளையம்: பெரியாறு அணை மிகவும் உறுதியாக உள்ளது. அணையில் 999 ஆண்டிற்கான தமிழகத்தின் உரிமையை யாராலும் பறிக்க முடியாது, என, பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் தெரிவித்தார்.

பெரியாறு பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளான மாநில நீர் வள ஆதார அமைப்பின் முதன்மை தலைமை பொறியாளர் ராஜகோபால், மதுரை நீர் வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் சம்பத்குமார், மதுரை பெரியாறு வைகை வடிநில கண்காணிப்பு பொறியாளர் மோகன சுந்தரம் ஆகியோர் நேற்று பெரியாறு அணையை பார்வையிட வந்தனர். போராட்டங்களால் அங்கு செல்லமுடியவில்லை.பின்னர், உத்தமபாளையத்தில் முதன்மை தலைமை பொறியாளர் ராஜகோபால் நிருபர்களிடம் கூறியதாவது: முல்லை பெரியாறு குறித்து சுப்ரீம் கோர்ட், நிபுணர் குழு ஆணைப்படி அணையில் தொழில் நுட்ப பணிகள் நடப்பதை ஆய்வு செய்ய வந்துள்ளோம். பெரியாறு அணை மிகவும் பலமாக, உறுதியுடன் உள்ளது. நிலநடுக்கம், அணை உடையும் அபாயம் என கேரள அரசு பொய் பிரசாரம் செய்கிறது. நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்கவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதனால், அணையில் தமிழகத்திற்கான உரிமையை துளி அளவும் குறைக்க முடியாது.


அணையில் தமிழகத்திற்கான 999 ஆண்டு அனுபவ உரிமையை யாராலும் தடுக்க முடியாது. 999 ஆண்டுகளுக்கு தொடர்ந்து தமிழகம் தண்ணீர் பெறும். புதிய அணை கட்டுவது சாத்தியமில்லாதது. தங்கள் மக்களை திருப்தி படுத்தவே, கேரள அரசு இது போன்ற தீர்மானங்களையும், பொய் பிரசாரத்தையும் செய்து வருகிறது. அணையில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு, பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அணையில் தமிழகத்திற்கான பாதுகாப்பு, தற்போது செய்ய வேண்டிய தொழில் நுட்ப பணிகள், நிபுணர் குழுவின் ஆணை உள்ளிட்டவைகள் குறித்து அமைச்சர் பன்னீர் செல்வத்தை உத்தமபாளைத்தில் சந்தித்து எடுத்துக் கூறியுள்ளோம். மாவட்ட அளவில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து, அவர்களை தைரியப்படுத்தி, போதிய பாதுகாப்பு அளிக்க உறுதி கூறியுள்ளோம். அணையில் பராமரிப்பு பணியில் இருக்கும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு இடுக்கி கலெக்டரிடம் பேசி போதிய பாதுகாப்பு கொடுத்து உள்ளோம், என்றார்.

Saturday, December 10, 2011

தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு விஜயகாந்த் எச்சரிக்கை

தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகள் மேற்கொள்ளும் கான்ட்ராக்டர்களிடம் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கமிஷன் வாங்கக் கூடாது. கமிஷன் வாங்குவது தெரிந்தால், அவர்களை கட்சியை விட்டு நீக்கி விடுவேன் என விஜயகாந்த் எச்சரித்துள்ளதால், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சமீபத்தில் தனது ரிஷிவந்தியம் தொகுதிக்கு சென்ற விஜயகாந்த், தனது எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இந்தாண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, ஆலோசனை நடத்தினார். எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை முடிவு செய்தார். இது குறித்த விவரங்களை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து சென்னை திரும்பினார். இதே போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு கட்சியின் 28 எம்.எல்.ஏ.,க்களுக்கு, விஜயகாந்த் உத்தரவு பிறப்பித்தார். விஜயகாந்தின் உத்தரவையடுத்து தொகுதிக்கு சென்ற எம்.எல்.ஏ.,க்கள், அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த விவரங்களை சேகரித்தனர். இந்நிலையில், சில கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதிகளில் ஒவ்வொரு பணிகளையும் மேற்கொள்ள 20 சதவீத கமிஷன் கேட்பதாக தகவல் வெளியானது. இது குறித்து அறிந்த விஜயகாந்த் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் தனித்தனியாக சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். தொகுதி மேம்பாட்டு நிதியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பது குறித்த விவரங்களை எழுதிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களும் தொகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்த விவரங்களை எழுதிக் கொடுத்தனர். அப்போது விஜயகாந்த், மழையால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகள், தரைப்பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள் ஆகிய பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்படி எம்.எல்.ஏ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


அதிக முக்கியத்துவம், முக்கியத்துவம் என, இரண்டு வகையாகப் பிரித்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு எம்.எல்.ஏ.,க்களிடம் விஜயகாந்த் ஆலோசனை வழங்கியுள்ளார். இதில் அதிக முக்கியத்துவம் பெற்ற பணிகளை இந்தாண்டு நிதியிலும், முக்கியத்துவம் என கருதப்படும் பணிகளை அடுத்தாண்டு நிதியிலும் மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார். மேலும் எம்.எல்.ஏ.,க்களிடம் விஜயகாந்த், "தொகுதி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் யாரும் கமிஷன் பெறக்கூடாது. கமிஷன் பெற்றதாக தகவல் கிடைத்தால், அவர்களை கட்சியை விட்டே தூக்கிவிடுவேன். எதிர்க்கட்சித் தலைவர் பதவி எனக்கு எதிர்பாராமல் கிடைத்தது தான். அதனால், அந்த பதவி இருந்தாலும், போனாலும் எனக்கு கவலையில்லை. கட்சியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மக்கள் நமக்கு கொடுத்த பணியை திருப்திகரமாக செய்து முடிக்கவேண்டும்' என, எச்சரித்து அனுப்பியுள்ளார். விஜயகாந்தின் இந்த அதிரடி நடவடிக்கையால், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

Monday, November 7, 2011

தினமலர் கொஞ்சி மகிழ்கிறதா? கருணாநிதி ஆவேசம்



சென்னை: ""கண்ணனைக் கொல்ல வந்த பூதகி போல, தினமலர் பாசமொழி பேசுவதைக் கேட்டு உடன்பிறப்புகள் யாரும் ஏமாற மாட்டார்கள். எச்சரிக்கையாகவே இருப்பர்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆவேசப்பட்டிருக்கிறார்.


"உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களுக்கு' என்ற தலைப்பில், தி.மு.க., நிர்வாகிகளிடையே எட்டு பக்கங்கள் கொண்ட கடிதம் வினியோகிக்கப்பட்டு வந்தது. இக்கடிதத்தின் சில பகுதிகள், கடந்த 6ம் தேதி(நேற்று) வெளியான, "தினமலர்' நாளிதழின் இரண்டாம் பக்கத்தில், "உடன்பிறப்புகள் கடிதம்' என்ற தலைப்பில் செய்தியாக வெளியி

டப்பட்டிருந்தது.


அந்த செய்தி தொடர்பாக, தி.மு.க., தொண்டர்களுக்கு கருணாநிதி நேற்று எழுதிய கடிதம்:"தினமலர்' நாளிதழ், தி.மு.க.,வை இடித்துச் சிதைத்து,

குறுகலாக்குவதற்காக எடுக்கும் முயற்சிகளின் தொடர்ச்சியாக, உடன்பிறப்புகள் என்ற பெயரில் ஒரு கற்பனைக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையின் உள்நோக்கத்தை உண்மையான உடன்பிறப்புகள் அனைவருமே உணர்ந்து இருப்பர்.ஏனென்றால், "தினமலர்' நம்மைக் கொஞ்சி மகிழ்வது; பூ

தகி; கண்ணனைக் கொஞ்சி மகிழ்வது போல் நடித்து, அவனைக் கொல்லவே துணிந்தாள் என்று மகாபாரதத்தில் உள்ள ஒரு கிளைக் கதை போன்றது தான். அந்த கிளைக் கதையின் தலையாய கதாபாத்திரமான பூதகியின் பாத்திரத்தைத்தான், "தினமலர்' நாளிதழ் தாங்கிக் கொண்டு, புறப்பட்டிருக்கிறது என்றால் அதில் துளியளவும் தவறில்லை.


அழகிய மங்கை உருவில் வந்து, தாய்ப்பாசம் காட்டுவது போல் நடித்து, கண்ணனை பால் அருந்தச் சொல்லி, அவனைக் கொன்றுவிட முற்பட்ட பாதகியான பூதகிக்கும், இன்று பசப்பு மொழி பேசி நம்மிடையே கசப்புணர்வை வளர்த்து, கட்சியை வீழ்த்த, பகல் கனவு காணும் படுபாவிகள் சிலருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.அந்தப் படுபாவிகள் பத்திரிகை வடிவத்தில் நம்மிடையே வருவர். அந்த விஷ நாகங்களில் ஒன்று, பச்சை பாம்பு வடிவெடுத்து, பச்சை வண்ண பசுங்கிளையில் தன்னை மறைத்துக் கொண்டு, பாசமொழி பேசுவதைக் கண்டு, கேட்டு, உடன் பிறப்புகள் யாரும் ஏமாற மாட்டார்கள்; எச்சரிக்கையாகவே இருப்பார்கள். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Friday, September 30, 2011

உள்ளாட்சியில் ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்: விஜயகாந்த்




பெரம்பலூர்: விஜயகாந்த் தனியாக வந்து பேசுவதாக நினைக்காதீர்கள். தெய்வம் எப்போதும் நேரில் வராது. மக்கள் ரூபத்தில் தான் வரும். கடந்த சேலம் மாநாட்டில் கட்சி தொண்டர்களின் கருத்தை கேட்டுத்தான் தெய்வத்தோடும், மக்களோடும் கூட்டணி அமைத்தேன். இப்போதும் தெய்வத்தோடும், மக்களோடும் தான் கூட்டணி அமைத்துள்ளேன். இன்னைக்கு நான் வருத்தப்படல


. இன்னைக்கு தே.மு.தி.க.,வை நம்பி மா.கம்யூ., இ.கம்யூ., நம்பி வந்தாங்க அவுங்கல கூட்டணியில சேர்த்துக்கிட்டோம். ஏனென்றால் நம்பினார் கெடுவதில்லை. என்னால் முடிந்ததை நான் போராடுவேன். இதில் என் கட்சி தொண்டருக்கும் பங்குண்டு. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகிறது. மக்களிடம் வீட்டுவரி சொத்துவரி போன்ற பல்வேறு வரிகள் வசூல் செய்கின்றனர். ஆனால் இன்னும் ரோடு பிரச்சனை குடிநீர் பிரச்சனை, பஸ் பிரச்சனைகள் எல்லாம் உள்ள

து. அதைப்பற்றி உள்ளாட்சி கவுன்சிலர்கள் யாரும் கவலைப்படவில்லை. நல்ல முட்டையா என்று தண்ணீரில் போட்டு பார்க்கிறீங்க கத்தரிக்காய், வெண்டைக்காய், மீன் போன்றவற்றை நல்லதா என பார்த்து பார்த்து வாங்குறீங்க உள்ளாட்சி பதவி 5 ஆண்டுக்கு உள்ளது எனவே உங்களை பாதுகாக்குற ஒரு ஆட்சியை

தேர்ந்தெடுங்க. என்னோட கவுன்சிலர லஞ்சம் வாங்க விடமாட்டேன். நான் மீண்டும் வருவேன். வந்து மக்களுக்கு நல்ல செய்றாங்களான்னு பார்ப்பேன். பெரம்பலூர் மாவட்டத்துல பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. உள்ளாட்சி நிதியை வீணடிக்கிறாங்க. மக்களை ஏமாத்துறாங்க. இதுபோல 60 வருசமா மக்களை ஏமாத்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். நான் காசுக்கு அடிமையாக மாட்டேன். என்னை காசு கொடுத்து யாரும் விலைக்கு வாங்க முடியாது.

எனக்கு ஓட்டுபோட்டு ஜெயிக்கவைத்தீர்கள். நான் எப்போதும் நன்றி மறக்கமாட்டேன். நான் தனியாக வருவேன் நேற்று தே.மு.தி.க.,வுக்கு விருத்தாசலம் எம்.எல்.ஏ., இன்று 29 எம்.எல்.ஏ.,க்கள். நாளை நீங்கள்தான் முடிவு செய்யனும். மக்களுக்காக விஜயகாந்த் வாழ்தான் என சரித்திரம் எழுதனும். எழுத வைப்பேன். தமிழகத்தில் 67 லட்சம் இளைஞர்கள் வேலைக்காக காத்துக்கொண்டுள்ளனர். ஆனால் இளைஞர்களுக்காக கல்லூரி துவங்குகிறேன் என பல கல்லூரிகள் துவங்க அனுமதிதாராங்க. ஆனால் காசு வாங்கி கொண்டுதான் கல்லூரியில் சீட் கொடுக்கின்றனர். சாதி கட்சிகள் இரண்டும் இன்று திராவிட கட்சிகளோடு இணைந்து காசு சம்பாதித்துவிட்டு இன்று திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் தேவையில்லை என்று கூறுகின்றனர். டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கூறும் ஒரு சாதி கட்சி தலைவர் அவரது கட்சியில் டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் வேலை. என்னோட மக்கள தூண்டுவிட்டு சண்டைப்போட விடாதீங்க. சாதியை பற்றி பேசாதீர்கள். நான் கட்சி ஆரம்பிச்சப்ப 71வது கட்சி சொன்னார்கள் இப்போது 7வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் 1வது கட்சியாகிவிட்டது. உள்ளாட்சியில் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப்பாருங்கள். எங்களை வெற்றி பெற வைத்தால் தவறுகள் நடக்காது. எத்தனை காலம் தான் நீங்கள் ஏமாந்து கொண்டிருப்பது. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பம் வராது. எனவே தே.மு.தி.க., கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பீர். இவ்வாறு அவர் பேசினார்.


Wednesday, September 28, 2011

"தனியாக பேச இது நேரமல்ல': அழகிரியை "டபாய்த்த' தேர்தல் அலுவலர்


மதுரை : ""சுவரில் வரைந்துள்ள ஜெ., மற்றும் விஜயகாந்த் படங்களை நீங்கள் அழிக்கவில்லையென்றால், நாங்கள் அழிப்போம்,'' என, தேர்தல் அலுவலரை மத்திய அமைச்சர் அழகிரி எச்சரித்தார்.


மதுரையில், மாநகராட்சி மேயர் வேட்பு மனு தாக்கலுக்கு, வேட்பாளருடன் அழகிரி வந்தார். தேர்தல் அலுவலர் நடராஜனின் அறையில் நுழைந்ததும், அங்கிருந்த நிருபர்களை வெளியில் இருக்குமாறு அழகிரி கூறினார்.


தேர்தல் அலுவலர், ""நிருபர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம்; அவர்கள் இருக்கட்டும்,'' என்றார்.


""உங்களிடம் தனியாக பேச வேண்டும்,'' என, அழகிரி கூறியதற்கு, ""தனியாக பேச இது நேரமல்ல, பின்னர் கட்டாயம் பேசலாம்,'' என்றார் நடராஜன்.


""தேர்தல் விதிமீறல் குறித்து நாங்கள் கூறிய புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?'' என, அழகிரி கேட்டார்.


""படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறேன்,'' என, நடராஜன் பதிலளித்தார்.


""சிம்மக்கல், சேதுபதி ஸ்கூல், ஜங்ஷன் பகுதியில் ஜெ., மற்றும் விஜயகாந்த் படங்களை வரைந்துள்ளனர். அதை அழித்து விடுங்கள்; இல்லையென்றால் நாங்கள் அழிப்போம்,'' என, எச்சரித்து விட்டு வெளியேறினார்.


நிருபர்களிடம் அவர் கூறுகையில்,""அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. நேர்மையான தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. சுவரில் வரைந்துள்ள படங்களை அழிக்கவில்லையென்றால், நாங்களும் வரைவோம்,'' என்றார்.


"தினமலர்' எங்கே : தேர்தல் அலுவலர் முன்னிலையில், நிருபர்களை பார்த்த அழகிரி, ""எல்லோரும் பார்த்துக்கோங்க, நாங்க ஐந்து பேர் தான் வேட்புமனுதாக்கல் செய்ய வந்துருக்கோம். நேற்று அ.தி.மு.க., மனுத்தாக்கலில் எத்தனை பேர் பங்கேற்றார்கள் என பார்த்தீர்களா? "தினமலர்' எங்கே? "தினமலர்' சார்பில் யாரும் வந்துருக்கீங்களா? முறைப்படி ஐந்து பேர் தான் வந்துருக்கோம்ணு கட்டாயம் செய்தி போடுங்க,'' என்றார். வெளியில் வந்ததும் கேள்வி கேட்டு பின்தொடர்ந்த பிற நிருபர்களிடம், ""அ.தி.மு.க., விதிமீறலை எழுதமாட்றீங்க; நாங்க என்ன செய்தாலும் உடனே எழுதுறீங்க,'' எனக்கூறி கிளம்பினார்.

Tuesday, September 20, 2011

கூட்டணியில் சேர தே.மு.தி.க., தீவிர முயற்சி: தனித்து போட்டியிட நிர்வாகிகள் தயக்கம்


தமிழக உள்ளாட்சித் தேர்தலில், .தி.மு.., கூட்டணியிலிருந்து, தே.மு.தி.., கழட்டி விடப்படும் நிலை உருவாகியுள்ளதால், தே.மு.தி.., தொண்டர்களும், நிர்வாகிகளும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனித்தோ, காங்கிரசுடன்சேர்ந்தோ போட்டியிடுவதை விட, .தி.மு..,வுடன் சமரசமாக போகவே, தே.மு.தி.., முக்கிய நிர்வாகிகள் விரும்புகின்றனர்.


நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 41 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 29 இடங்களை கைப்பற்றி, தமிழக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக அமைந்தது.சட்டசபைத் தேர்தலில் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாத நிலையில், உள்ளாட்சித் தேர்தலில், கிளை நிர்வாகிகள் வரை போட்டியிட வாய்ப்பு அளித்து, அவர்களை திருப்தி படுத்தும் நிலைபாட்டை, தே.மு.தி.க., தலைமை எடுத்திருந்தது.இதனாலேயே உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை, பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும், எவ்வித எதிர்ப்பு குரலும் இல்லாமல், அமைதி காத்து வந்தது.தமிழகத்தில் உள்ள, 10 மேயர் பதவிகளில், இரண்டு முதல் நான்கு வரையும், அனைத்து பதவிகளிலும், 30 சதவீதம் வரை சீட்களை கேட்டுப்பெற வேண்டும் என்ற எண்ணத்தில், தே.மு.தி.க.,வினர் இருந்தனர். இதன் மூலம், கடந்த தேர்தல்களில் போட்டியிட்டு, தோல்வியடைந்த நிர்வாகிகளை திருப்திபடுத்தவும் திட்டமிட்டிருந்தது.


ஆனால், அதற்கு பயனில்லாமல், தன்னிச்சையாக, அ.தி.மு.க., சார்பில், மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.அதன் பின் நடத்திய பேச்சுவார்த்தையிலும், மிக சொற்பமான இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள தே.மு.தி.க., நிர்வாகிகள், தனித்து போட்டியிடுவது அல்லது மற்ற கட்சிகளை சேர்த்து மூன்றாவது அணியில் போட்டியிடுவதா என்பது குறித்து, ஆலோசனை நடத்தி வருகிறது.


ஆனால், தனித்து போட்டியிடுவதற்கு, தே.மு.தி.க., நிர்வாகிகள் தயக்கம் காட்டுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சட்டசபைத் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும், கட்சி ரீதியாக மக்களை கவரும் வகையில், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், தனித்து போட்டியிட்ட போது இருந்த செல்வாக்கிலும், தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது.தி.மு.க., - காங்., - பா.ம.க., - ம.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடும் போது, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தால், 90 சதவீதத்துக்கும் மேலான இடங்களை கைப்பற்றிவிடலாம் என, தே.மு.தி.க.,வினர் எண்ணுகின்றனர்.இத்தனை நாட்கள், "அமைதி காத்து' வந்ததை எடுத்துக்கூறி, அ.தி.மு.க., கூட்டணியில் கூடுதல் சீட்களை பெற, தே.மு.தி.க., நிர்வாகிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.


மாவட்ட செயலர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் : விஜயகாந்த்திடீர் உத்தரவு: ""அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், அதை சந்திப்பதற்கு மாவட்டச் செயலர்கள் தயாராக இருக்க வேண்டும்,'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.


அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தே.மு.தி.க., மாவட்டச் செயலர்களின் கூட்டம், சென்னை கோயம்பேடில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், பொறுப்பாளர்கள் என, 80க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த ரகசிய கூட்டம் குறித்து பத்திரிகைகள், மீடியாக்களுக்கு தகவல் தெரிவிக்காமல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.


கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகள், கார்களில் வர வேண்டாம்; ஆட்டோக்களில் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் கட்சி அலுவலக வாசலில், கார் உள்ளிட்ட வாகனங்களை யாரும் நிறுத்த வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. வெளியாட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க, கறுப்பு நிற ஆடை அணிந்த தனியார் செக்யூரிட்டி ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


இக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: கட்சி அலுவலகத்தில் நடக்கும் ரகசிய கூட்டங்களின் விவரம் கூட, பத்திரிகைகளுக்கு தெரிந்து விடுகிறது. இதற்கு கட்சி நிர்வாகிகள் தான் காரணமாக இருக்கின்றனர். நீங்கள்(கட்சி நிர்வாகிகள்) அளிக்கும் தகவலை வைத்து தான், அவர்கள் செய்திகளை வெளியிடுகின்றனர். இது நமக்குத் தேவையா என்பதை சிந்திக்க வேண்டும். இதே போன்று தொடர்ந்து நடந்தால், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டியிருக்கும்.கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே, அதற்கேற்ற வகையிலான மன நிலையை மாவட்டச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.


வரும் 25ம் தேதி, கோவையில் நடக்கவுள்ள கட்சியின் ஏழாம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டத்தை வெற்றி பெற வைக்க, அனைவரும் உழைக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளையும் இப்போதில் இருந்தே கவனிக்க வேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Tuesday, September 13, 2011

ப.சிதம்பரம் ஒரு பொய்யர்: போட்டு தாக்குகிறார் ஹசாரே


புதுடில்லி: ஊழலுக்கு எதிராக போராட முன்வரும் காங்கிரஸ், பா.ஜ. அல்லாத எந்த ஒரு கட்சி அல்லது இயக்கத்திற்கும் ஆதரவு கொடுக்கத் தயார் என்றும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு பொய்யர் என்றும் காந்தியவாதி அன்னா ஹசாரே கூறினார். ஊழலுக்கு எதிராக 12 நாட்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற பின் முதன்முறையாக தனியார் டி.வி.‌சானல்ஒன்றிற்கு காந்தியவாதி அன்னா ஹசாரே அளித்த பேட்டி,

நாட்டை ஊழல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற ஒரே வழி ஊழலுக்கு எதிராக வலுவான ஜன்லோக்பால் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது தான். ஜன்‌லோக்பால் சட்டத்திற்கு எதிராக இருக்கும் எம்.பி.க்கள் யாராக இருந்தாலும் அவர்களின் வீட்டிற்கு முன்பு பஜனை பாடி போராட்டம் நடத்த எனது ஆதரவாளர்களுக்கு ஏற்க‌னவே நான் உத்தரவிட்டுள்ளேன். அது மட்டுமின்றி அந்த ஜன்லோக்பால் சட்டத்தை எதிர்க்கும் எம்.பி.க்கள் போட்டியிடும் தொகுதி முழுவதும் சென்று அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என வாக்காளர்களை வலியுறத்த சொல்லியுள்ளேன்.

பிரதமராக உள்ள மன்மோகன்சிங்கிற்கு அமைச்சர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது. எனினும் அவ‌ரது பேச்சை எந்த அமைச்சர்களும் கேட்பதில்லை. மாறாக ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களை பிரதமராக நினைத்து கொண்டு தனி ஆவர்த்தனம் செய்கின்றனர். பிரதமர் தற்போது அமைச்சர்களின் ரிமோட் கண்ட்ரோல் போல செயல்படுகிறார். மத்திய அமைச்சர் சிதம்பரம் ஒரு பொய்யர். ஊழல் புரிந்த அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை சாகும்வரை சிறையில் வைக்க வேண்டும்.

ஊழலுக்கு எதிராக போராட முன்வரும் காங்கிரஸ், பா.ஜ. அல்லாத எந்த கட்சிக்கும், இயக்கத்திற்கும் ஆதரவு தருவேன். ஆனால் அந்த இயக்கத்திற்கு நான் தலைவராக வர விரும்பமாட்டேன். ஏழைகள் நலனில் மிகவும் அக்கறை கொண்ட பிரதமர்களில் முன்னாள் பிரதமர் இந்திரா தான் சிறந்தவர். எங்களது போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்புடன் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லலை. இதை காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரம் செய்துவருகின்றனர். வரப்போகும் எந்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். ஊழலை நாட்டை விட்டு விரட்டுவது தான் என நோக்கமே தவிர வேறு ஒன்றுமி்ல்லை.பாராளுமன்றத்தின் நிலைக்குழுவில் பரிசீலனையில் உள்ள ஜன்லோக்பால் மசோதா நிறைவேறும் வரை ஓயமாட்டேன். மீண்டும் எனது போராட்டத்தை துவக்குவேன். இவ்வாறு ஹசாரே கூறினார்.

ரோஜப்பூ ‌கொடுத்து பிரசாரம்: ஊழலுக்கு துணைபோக வேண்டாம் என கூறி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்திற்கு சென்ற அன்னா ஹசாரே ஆதரவாளர்கள், வெள்ளை குல்லாய் அணிந்து , தங்களை அன்னா ஹசாரேயின் ஆதரவாளர் கூறி அறிமுகப்படுத்தி கொண்டு அங்கு பணியாற்றிவரும் அரசு அதிகாரிகளிடம் ஊழலுக்கு துணை போக வேண்டாம், ஊழலை ஒழிக்க ஒத்துழைப்பு கொடுங்கள் என வலியுறுத்தி அவர்கள் கையில் ஒரு ரோஜாப்பூவை கொடுத்து ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்தனர்.

Friday, July 22, 2011

"இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு' : முதல்வரிடம் தூதர் உறுதி


சென்னை: "தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்' என்று, இந்தியாவுக்கான இலங்கை தூதரிடம் முதல்வர் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தினார். இவற்றை நிறைவேற்றுவதாக, இலங்கை தூதரும் உறுதியளித்தார். சென்னை வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் பேசினார். இதையடுத்து, டில்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம், தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி, துணை தூதரகத்தின் உயரதிகாரி அமீத் அஜ்வாத் ஆகியோர், முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியதாவது: பாக் ஜலசந்தியில், மீன் பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் அவ்வப்போது தாக்கப்படுவது, மிகவும் கவலை அளிக்கிறது. அதுபோன்ற சம்பவங்கள், இனி நடக்காமல் இருக்க வேண்டும். கடந்த இரண்டு மாதங்களில், மூன்று முறை தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். இலங்கை முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிச் சென்று மறுவாழ்வு பெறுவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, சிறை பிடிக்கப்படுவது முற்றிலுமாக தடுத்தல், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் விரைவாக முழு மறுவாழ்வு பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தை இலங்கை அரசிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். இந்த சந்திப்பு குறித்து, இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் நிருபர்களிடம் கூறும்போது, ""தமிழக மீனவர் பிரச்னை மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு ஆகிய இந்த இரண்டு முக்கிய பிரச்னைகளை தீர்த்து, நல்ல நண்பர்களாக இருப்பதற்கு இதுவே நல்ல நேரம். இப்பிரச்னைகளை இலங்கை தீர்க்கும் என உறுதியளித்தோம்,'' என்றார்.


Wednesday, June 1, 2011

இது அழகா? அழிக்கப்படும் சுவரோவியங்கள்


உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது, கோவை மாநகர சாலையோர சுவர்களில் தமிழர் பாரம்பரியம், வாழ்க்கை முறை, கலாசாரத்தை புதிய தலை முறையினருக்கும் புரிய வைக்கும் வகையில், அழகுமிகு ஓவியங்கள் வரையப்பட்டன. ரசிக் கும்படியான ஓவியங்களை அதி. மு.க.,வினர் அழித்து, அரசியல் விளம்பரங்களால் அலங்கோலமாக்கி வருகின்றனர்.

கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில், கோவை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. செம்மொழி மாநாட்டுக்காக உற்சாகமாக கோவை தயாராகிக் கொண்டிருந்தது. சாலை மேம்பாடு, பாலங்கள் விரிவாக்கம், நடைபாதை, புதிய விளக்குகள், பூங்காக்கள் என கோவை நகரிலும், நகரைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் 400 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடந்தன. பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள், ஒரே ஆண்டில் சில மாதங்களில் வேக, வேகமாக நடந்தன. செம்மொழி மாநாடு, எந்த காரணத்துக்காக நடத்தப்பட்டிருந்தாலும் அதனால் கோவை நகரம் பயன் அடைந்ததை யாராலும் மறுக்க முடியாது. அந்த மாநாட்டுக்காக, தனியார் தொழில் அமைப்புக்குச் சொந்தமான இடத்திலும் தனியாரிடத்திலும் நடந்த மேம்பாட்டுப் பணிகள் சர்ச்சைக்குரியவை. ஆனால், நகரை அழகுபடுத்த அப்போதைய தி.மு.க., அரசு எடுத்த முயற்சிகள் பலராலும் வரவேற்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாகத்தான் கோவை நகரிலுள்ள பல்வேறு பகுதிகளிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான சுவர்களிலும், தனியார் சுவர்களிலும் சங்க இலக்கிய நிகழ்வுகளை விவரிக்கும் அழகான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. தற்காலத் தலைமுறைக்கு நமது மண்ணின் மகிமையையும், கலைகளின் மேன்மையையும் விளக்கிய அந்த ஓவியங்களில் அரசியல் சார்புடைய எந்தக் குறிப்புகளும் இடம் பெறவில்லை. உதாரணமாக, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களைப் பற்றிய ஓவியங்கள் பல இடங்களில் வரையப்பட்டு, தமிழ் நிலங்களைப் பற்றிய தகவல்களை தற்போதுள்ள இளைய தலைமுறைக்கு எடுத்துக் கூறின.


அவை அழகாக இருந்தன என்பதை விட, அந்தச் சுவர்களை அசிங்கப்படாமல் பாதுகாக்கவும் உதவின. அது மட்டுமின்றி, நகரம் முழுவதும் கட்டுப்பாடின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களும் அகற்றப்பட்டன. ஆனால், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க., ஆட்சியின் தடயங்களை அழிப்பதற்கான முயற்சியாக, செம்மொழி மாநாட்டில் வரையப்பட்ட ஓவியங்கள் அ.தி.மு.க.,வினரால் அழிக்கப்படுகின்றன. வடகோவை மேம்பாலத்தில் இருந்த ஓவியங்கள் அழிக்கப்பட்டு, அங்கு முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்துவதாக அரசியல் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன. இதேபோல, நகரின் பல பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் சுவர்களில் அ.தி.மு.க.,வினரின் வாழ்த்து விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன. அத்துடன், கட்டுப்பாடற்ற வகையில், "பிளக்ஸ் பேனர்'களும் விதிகளை மீறியும், அனுமதியின்றியும் வைக்கப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வந்தவுடன், வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும், புதிய ஆட்சிக்கு வாழ்த்துச் சொல்வதற்காகவும் வைக்கப்பட்ட இந்த பிளக்ஸ் பேனர்களில் பெரும்பாலானவை அகற்றப்படவே இல்லை. அதையும் விட, அமைச்சர் வேலுமணியை வரவேற்று வைக்கப்பட்ட "பிளக்ஸ் பேனர்'களின் எண்ணிக்கையும், அதன் பிரமாண்டமும் ஜெ.,பிறந்த நாள் விழாவுக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களையும் மிஞ்சுவதாக இருந்தன.


மிகவும் குறுகலான ஆத்துப்பாலம்-உக்கடம் ரோட்டிலும் கூட, ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை அகற்றுவதற்கு காவல்துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் முன் வராத நிலையில், இவற்றால் ஏராளமான சிரமங்கள் ஏற்படுகின்றன. இப்போதே இப்படி என்றால், இனி வரும் நாட்களில் இந்த விதிமீறல் எந்த அளவுக்குப் போகுமோ என்ற பயம், கோவை மக்களிடம் இப்போதே எழுந்து விட்டது. அரசியல் சுயலாபத்துக்காக செம்மொழி மாநாட்டை நடத்தியதாகக் குற்றம்சாட்டும் அ.தி.மு.க.,வினர், அதனால், நகருக்குக் கிடைத்த நன்மைகளை நினைவு கூர்ந்து, அதையும்விட தங்களது ஆட்சிக்காலத் தில் கோவை நகருக்குக் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும், நகரை அழகுபடுத்தவும் முயற்சிகளை எடுக்க வேண்டும். அதை விடுத்து, நகரை அலங்கோலமாக்குவது சரியல்ல என்பது மக்களின் கருத்து. கலையும் கனவுகள் : தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற்காக புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தையும், சமச்சீர் கல்வியையும் புறக்கணித்த அ.தி.மு.க., அரசு, கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு, இன்னும் பணிகளே துவங்காத செம்மொழிப் பூங்கா, காந்திபுரம் பல அடுக்கு மேம்பாலங்களை அமைப்பதற்கு வாய்ப்பேயில்லை. ஒரு வேளை பாலம் கட்டப்பட வாய்ப் பிருந்தாலும், சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா என்பது கலைந்து போன கனவுதான்.

Thursday, April 28, 2011

கனிமொழியும், கல்மாடியும் - எஸ்.ஆர்.சேகர் -


காமன்வெல்த் விளையாட்டு ஊழலுக்காக சுரேஷ் கல்மாடி நேற்று முன்தினம் கைது. நாளையோ அல்லது மே மாதம் 6ம் தேதியோ கனிமொழி கைதாகலாம். கனிமொழி கைதானால், அது, தி.மு.க.,விற்கு தேய்பிறை தான்.சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டது குறித்து, கருத்து தெரிவித்த பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, "ஒரு கூட்டமே கைது செய்யப்பட வேண்டிய இடத்தில், ஒருவர் தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்' என்று கூறியிருக்கிறார்.


காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியே குற்றங்களுக்குள் ஒளிந்திருப்பதால், கனிமொழி கைதானால், காங்கிரசும் காட்டிக் கொடுக்கப்படலாம். இருவருமே அனைத்து ஊழல்களிலும், பின்னிப் பிணைந்திருப்பதால், அரசியலிலும் கைதேர்ந்தவர்கள் என்பதால், ஒருவர் ஏற்படுத்தும் உராய்வு, இருவரையுமே சேர்த்து, "சந்திக்கிழுக்கும்' என்பதை இருவருமே அறியாதவர்கள் அல்லர்.


காமன்வெல்த் விளையாட்டு ஊழலும், "2ஜி' அலைக்கற்றை ஊழலும் பல ஒற்றுமைகளைக் கொண்டவை. இரண்டிலேயும், வெளியே தெரியும் முகங்கள் ஒன்று; வெளியே தெரியாத உண்மையான முகங்கள் அதிகம். இரண்டு ஊழல்களிலும் நாட்டின் மிகப்பெரிய, "தலைகள்' பங்கு பெற்றிருக்கின்றன.பெரிய இடத்து சம்பந்தம் - பெருந்தலைகளின் பங்கு இருப்பதாலேயே, கனிமொழியும், கல்மாடியும் சிறிதும் அச்சப்பட்டதாகத் தெரியவில்லை. கல்மாடி, தான் அனைவரையும் கலந்தாலோசித்தே முடிவெடுத்ததாக தைரியமாக சொல்கிறார். இதை உறுதிப்படுத்தும் வண்ணம், சி.பி.ஐ., விசாரணைக்குப் பின், அவர், மன்மோகன், சோனியா கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். மேலிடமும் தன்னோடு சேர்ந்து, "சிக்கி' இருப்பதாலேயே, தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் அவருக்கு உள்ளது.


இந்த விவகாரத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, நிதின் கட்காரி பெற்ற தகவலும், பண பரிவர்த்தனைகள், நிதி முடிவுகள் அனைத்தும், அமைச்சர்கள் குழு, அமைச்சரவை உப கமிட்டி, பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமருக்கு தெரிந்தே நடைபெற்று இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது."2ஜி' அலைக்கற்றை ஊழலிலும், கலைஞர், "டிவி'க்கு கொடுக்கப்பட்ட, 210 கோடி ரூபாயை பார்க்கும் போது, "தி.மு.க.,வின் விஞ்ஞானப்பூர்வ ஊழல்' பட்டம் தகுதி இழந்தது தெரிகிறது. ஆண்டு வருமானம் வெறும், 47 கோடி உள்ள கலைஞர், "டிவி' வெறும் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே முதலீடு கொண்ட, தன்னை விட மிகச்சிறிய இரண்டு நிறுவனங்களிலிருந்து, 210 கோடி ரூபாய் கடன் பெறுவது என்பது, தி.மு.க.,வின் விஞ்ஞானப்பூர்வ ஊழல் பெருமைக்கு ஒரு களங்கம். எங்கோ தப்பு நடந்திருக்கிறது; யாரோ தவறாக ஆலோசனை கூறியிருக்கின்றனர்.


சர்க்காரியா காலத்திலிருந்த விவேகம், இப்போது கருணாநிதியின் வாரிசுகளிடம் இல்லை. லாபம் வரும் என்று தெரிந்தே தான் ராஜா தொலைத் தொடர்பு அமைச்சராக, கனிமொழியால் ஆக்கப்பட்டிருப்பதாக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை சொல்கிறது. விவசாயத்திலிருந்து வருமானமில்லை, வாழ்வு நடத்த வழியில்லை என்பதால், தினசரி 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதே நாட்டில் ஊழல்கள் மூலம் ஆயிரம், லட்சம் கோடிகளை குவிப்பவர்களும் இருக்கின்றனர். இதற்கு எப்போது வரும் தீர்வு?

Wednesday, April 20, 2011

மதுரையின் "பதட்டம்' தணித்த 30 வயது இளைஞர்


தமிழக சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும், போலீஸ் அதிகாரிகள் உட்பட அனைவருக்கும், "டென்ஷன்' ஏறியது. "மதுரையில் டூட்டி போட்டு விடுவார்களோ...?' என, அச்சம் நிலவியது.


இப்படி பலரும் விலகியிருக்க விரும்ப, மதுரையில் சுமுகமாக தேர்தல் நடத்தி முடிக்க, எஸ்.பி.,யாக தேர்தல் கமிஷன் தேர்வு செய்தது 30 வயதே ஆன "ஆஸ்ரா கர்க்' இளைஞரைத்தான்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆஸ்ரா கர்க், பி.இ., எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்தவர். படித்து முடித்த கையோடு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று, 24 வயதில் ஐ.பி.எஸ்., அதிகாரியானார். வேலூரில் பயிற்சி எஸ்.பி., திருவாரூரில் கூடுதல் எஸ்.பி.,யாக பதவி வகித்து, தனது 28வது வயதில் திருநெல்வேலி எஸ்.பி.,யாக 2008ல் நியமிக்கப்பட்டார்.அங்கு பணியில் இருந்தபோது, கூலிப்படை கும்பல், மாமூல் வசூலிக்கும் ரவுடிகள், தாதாக்களின் பட்டியலை தயாரித்து ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்துக்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்தார். போதை மருந்து கடத்தல் கும்பல், ரவுடிகள், "குண்டர்' தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


மதுரை ஆறாவது சிறப்புக்காவல் படையின் கமாண்டராக கடந்தாண்டு ஆஸ்ரா கர்க் இடமாற்றம் செய்யப்பட்டார். பின், தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, மதுரை எஸ்.பி.,யாக கடந்த மார்ச் 22ல் பொறுப்பேற்றார்.கமிஷனராக பொறுப்பேற்றதுடன், தனது மொபைல் எண்ணை வெளியிட்டு, "புகார் தொடர்பாக யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் என்னிடம் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்' என, அறிவித்தார். இதன் விளைவு தினமும் 150 போன் அழைப்புகள். அத்தனைக்கும் பதிலளித்து, புகார் மீது தேவையான நடவடிக்கை எடுத்ததோடு, சட்டம் ஒழுங்கிலும் கவனம் செலுத்தினார். வாகன சோதனையில் கணக்கில் வராத மூன்று கோடி ரூபாயை அரசு கஜானாவில் சேர்த்தார். பணியில் நேர்மையாக இருந்தவர்களை பாராட்டியும், மெத்தனமாக நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்தார். தேர்தல் தொடர்பான வன்முறை, விதிமீறல் என 106 வழக்குகளை பதிவு செய்தார்.


தேர்தல் பணி குறித்து அவர் கூறும்போது, ""தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்டவர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததற்கு நான் மட்டுமே காரணமல்ல. போலீசார் உட்பட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் மட்டுமே இது சாத்தியமானது,'' என்றார் அடக்கமாக.ஆஸ்ரா கர்கிற்கு சபாஷ்!


"பல்டி' அதிகாரிகளுக்கு பறிபோன பதவிகள் : சட்டசபை தேர்தலில், தமிழகத்திலேயே வேறெங்கும் இல்லாத அளவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மதுரைதான். மேலூர் தொகுதியில் தி.மு.க.,வினர் தாக்கியதாக (உதவி தேர்தல் அதிகாரியான) தாசில்தார் காளிமுத்து தேர்தல் கமிஷனில் புகார் கூறினார். ஓரிரு நாளில் தாசில்தார் காளிமுத்து, தி.மு.க.,வினர் தன்னை தாக்கவில்லை என, "பல்டி' அடித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினார்.சில நாள் இடைவெளியில், காளிமுத்து தனது புகாரில் இருந்து, "ஜகா' வாங்கியதால், அவரது இடத்தில், சமூகநலத்திட்ட தாசில்தார் கங்காதரன் நியமிக்கப்பட்டார். இதனால் காளிமுத்துவும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். மதுரை கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியுமான ஆர்.டி.ஓ., சுகுமாறன், தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு பதிவு செய்யும்படி, தன்னை கலெக்டர் சகாயம் நிர்ப்பந்திப்பதாகக் கூறிவிட்டு, உடனடியாக மருத்துவமனையில் "அட்மிட்' ஆனார்.


இதன் தொடர்ச்சியாக தேர்தல் கமிஷனும் நடவடிக்கை மேற்கொண்டது. கலெக்டர் சகாயம் நேர்மையானவர் என கூறி, அவரை குற்றம்சாட்டிய ஆர்.டி.ஓ., சுகுமாறனை, கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக இடமாற்றம் செய்து, பின் சஸ்பெண்டும் செய்தது. அதன் பின் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் வீடு திரும்பினார். இப்போது பதவியில்லாமல் உள்ளார். தமிழக வாக்காளர்களை விட, "சும்மா' இருக்கும் இந்த அதிகாரிகள், தேர்தல் முடிவுகளை அதிகம் எதிர்நோக்கி உள்ளனர். அரசியல்வாதிகளைப் போல, இவர்களின் எதிர்காலத்தையும் தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர்

Tuesday, April 19, 2011

தமிழக சட்டசபை தேர்தல் நாள் ஜாதகம் : எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா


தேர்தல் என்று வந்துவிட்டால் கணிப்பு, வாக்காளர் மனநிலை, சர்வே என அடுத்தடுத்த விஷயங்களும் சகஜம். சமீபகாலமாக இந்த பட்டியலில் ஜோதிடமும் சேர்ந்துள்ளது. சில கட்சிகளில் வேட்பாளரின் தகுதி பெற இணைக்க வேண்டிய பட்டியலில் ஜாதகமும் கூட இடம்பிடித்துள்ளது.


ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஜாதகம் பார்ப்பதற்கு பதிலாக, தேர்தல் நடந்த நாள், நேரத்தை வைத்து, தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்று கணிக்கப்பட்ட செய்தித்துணுக்கு தற்போது, "இன்டர்நெட்'டில் படு பிரபலமாகியுள்ளது. அந்த சுவையான கணிப்பு இது:தமிழக சட்டசபை தேர்தல் புதன்கிழமை 13.4.2011 காலை 8 மணிக்கு சந்திரன் ஓரை, எமகண்டத்தில் ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. புதன்கிழமை புதன் நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திரத்தில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. புதன் நேரடியாக வலுவடையாமல் மறைமுகமாக நீச்சபங்க ராஜயோகம் அடைந்திருப்பதால், தேர்தலில் கடுமையான போட்டியிருக்கும். வெற்றி தோல்விக்குரிய ஓட்டு வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும்.அதற்கு அடுத்த நாள் 14.4.2011 அன்று பிறக்கும் கர வருடம், மிதுன லக்னத்தில் பிறப்பதாலும், கர வருடத்தின் ராஜாவாக சந்திரன் வருவதாலும், ஓட்டுப்பதிவு தொடங்கும் லக்னம், சுக்கிரனின் லக்னமான ரிஷப லக்னமாக வருவதாலும், லக்னாதிபதி சுக்கிரன் 10ம் இடத்தில் அமர்ந்து, கேந்திராதிபத்ய தோஷம் அடைவதாலும், தமிழக சட்டசபை கடைசி கூட்டம், கடந்த 10.2.2011 அன்று பரணி நட்சத்திரத்தில் நடைபெற்றதாலும், தேர்தல் நாளன்று சந்திரன் ஆட்சிப் பெற்று அமர்வதாலும், அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.


ஆனால், தி.மு.க., கட்சியின் ஜாதகமும், தி.மு.க., தலைவரின் ராசிக்கு தற்கால கோச்சார கிரகமும், தேர்தல் நாளன்று வலுவாக உள்ளது. எனவே, ஆளுங்கட்சியான தி.மு.க., கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றும். ஓட்டுப்பதிவு அன்று, லக்னம் சுக்கிரனாக வருவதாலும், சுக்கிரனே 6ம் வீட்டிற்கு அதிபதியாக வருவதாலும், கூட்டணி தர்மத்தையும் தாண்டி, உள்பகையால் தோற்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி மாறும். தனிப்பெரும் கட்சி அறுதிப்பெரும்பான்மை பெறுவது கடினம்.சனி பகவான், குரு, சூரியன், செவ்வாய், புதன், கேது ஆகிய ஐந்து கிரகங்களும் ஐந்து கிரகங்களையும் பார்ப்பதாலும், 7ம் வீட்டையும் சனி பார்ப்பதாலும், கூட்டணி ஆட்சி அமையும். தேசிய கட்சிகள் (காங்கிரஸ் - பா.ஜ.,) மற்றும் ஜாதிக் கட்சிகள் வலுவிழக்கும். தேர்தல் நாளும், ஓட்டு எண்ணிக்கை நாளும் புதனின் ஆதிக்கத்தில் வருவதால், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும். தபால் ஓட்டுகள் அ.தி.மு.க.,விற்கு சாதகமாகும்.


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, தற்சமயம் புதன் திசை நடைபெறுவதாலும், புதனின் ஆதிக்கத்தில் தேர்தல் நாளும், எண்ணப்படும் நாளும் வருவதாலும், அவரின் கட்சிக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அவர் மூலமாக அ.தி.மு.க., கூட்டணி வலுவடையும். புதிய வாக்காளர்களுக்கு உரிய கிரகமாக புதன் வருவதாலும், புதன் அ.தி.மு.க., தலைமைக்கு சாதகமாக இருப்பதால், புதிய ஓட்டுகள் அ.தி.மு.க., கூட்டணிக்கு 80 சதவீதம் வரை கிடைக்கும்.


கன்னி ராசிக்காரரான வைகோ, புதனின் ராசியில் பிறந்தவர். அவர் அ.தி.மு.க., கூட்டணியில் இல்லாததால், அ.தி.மு.க., கூட்டணிக்கு, புதனின், பாசிடிவ், கதிர்வீச்சு குறைகிறது. இதனால், அ.தி.மு.க., அதிக இடங்களை பெற முடியாது. ஆனால், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.மிருகசீரிடம் நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்த தி.மு.க., தலைவருக்கு, பூர்வபுண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் தற்சமயம் சனி அமர்ந்திருப்பதால், அவர் தனது பூர்வீக தொகுதியான திருவாரூரில் போட்டியிடுவதால், அவருக்கும், அவரது மைந்தனுக்கும் வெற்றி திணறி வரும். இது அவரது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...!

Monday, April 18, 2011

இருண்ட காலம் : இருளில் தடுமாறும் மக்கள் : இந்நிலை மாறுவது எப்போ?


அன்று, 2 மணி நேரம்; நேற்று, 3 மணி நேரம்; இன்று, 4 மணி நேரம்... என, மின்வெட்டு ஏற்படும் நேரத்தை நீட்டித்துக்கொண்டே போகிறது, மின்(தடை) வாரியம். இப்படியே போனால், "மின் சப்ளை இருக்கும் நேரம், மதியம் 2.00 - 4.00 மணி' என்ற அறிவிப்பு வந்தாலும் வரக்கூடும். தாறுமாறாக ஏற்படும் மின்வெட்டால் மக்கள், தொழில்துறையினர், விவசா யிகள் என பல தரப்பினரும் கொந்தளித்து போயுள்ளனர்.


தமிழகத்தில் வழக்கமாக கோடை காலத்தில் மட்டும் தினசரி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்படும். சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மின் உற்பத்திக்கும், தேவைக்குமான இடைவெளி அதிகரித்தது. அரசு மின் வினியோகம் குறித்து சரியாக திட்டமிடாததால் மின்வெட்டு அதிகரித்தது. குறிப்பாக 2008ம் ஆண்டு முதல் மின்வெட்டு தலைவிரித்து ஆடுகிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மாவட்டத்தில் ஸ்பின்னிங் மில், ஜின்னிங் பேக்டரி, விசைத்தறி, பவுண்டரி, இன்ஜினியரிங் தொழிற்சாலை, கிரைண்டர், மிக்சி உற்பத்தி நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் மற்றும் இதர உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும்.


இந்நிறுவனங்களில் மின்வெட்டால் உற்பத்தி இழப்பு, ஜெனரேட்டர் பயன்படுத்துவதால் கூடுதல் செலவு, மின்வெட்டுக்கு ஏற்ப தொழிலாளர்களின் வேலை நேரங்களை மாற்றுவதால் ஏற்படும் பாதிப்பு, ஜெனரேட் டருக்கான புதிய முதலீடு என பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தினமும் மூன்று மணி நேரம் மின்வெட்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் உயர்அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மாலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை மின்சாரம் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர இரவில் இரண்டு முறை தலா அரை மணி நேரமும், பகலிலும் அரை மணி நேரமும் மின்வெட்டு ஏற்படுகிறது. தினமும் 9 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தொழிற்சாலைகள் திணறி வருகின்றன.இதேபோல் பருவ மழை குறைவு, நிலத்தடி நீர் உபயோகம் அதிகரிப்பு ஆகியவற்றால் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது.


எனவே தினமும் ஆறு மணி நேரம் கிணறு மற்றும் போர்வெல் மோட்டார்களை இயக்கினால் மட்டுமே பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். ஆனால், எந்த நேரத்தில் விவசாய மோட்டார்களுக்கு மின்சாரம் சப்ளையாகும் என்றே தெரியாத நிலை நீடிக்கிறது. இதனால் பல ஊர்களில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்கின்றன. வீடுகளில் தினமும் மூன்று மணி நேரம் மின் வெட்டு என அறிவிக்கப்பட்டு, தினமும் பல முறை ஆறு மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இரவில் தூக்கமிழக்கும் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்; மின்வாரியத்துக்கு சாபம் விடாதது தான் குறை.


விளம்பரத்துக்கு விரயம்: வீடுகளுக்கான மின் சப்ளையில் அடிக்கடி வெட்டு ஏற்பட்டு மக்கள் அவதியுறும் நிலையில், கோவை நகர், புறநகர் பகுதிகளின் முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் நள்ளிரவு நேரத்திலும் ஒளிருகின்றன; விளம்பர பலகைகளின் எண்ணிக்கை கோவை நகரில் மிக அதிகம். மக்கள் நடமாட்டம் அறவே இல்லாத இரவு நேரத்திலும் விளம்பர பலகைகள் அதிகளவு மின்சாரத்தை குடித்தவாறு ஓளிருகின்றன. அதே வேளையில், பல பகுதிகள் மின் சப்ளையின்றி இருளில் மூழ்கி கிடக்கின்றன. மின் சப்ளை சீராகும் நாள் வரை (!) இரவில் விளம்பர பலகைகளுக்கான மின் சப்ளையை நிறுத்தினால், விரயமாவதை தடுக்கலாம்.


நெருக்கடியில் மில்கள் : சரமாரி மின்வெட்டு குறித்து அன்னூர் ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கூறியதாவது:பஞ்சு விலை ஒரு பேல் 62 ஆயிரத்தை எட்டி விட்டது. ஆனால் நூல் விலை அதற்கு ஏற்ப உயரவில்லை. வங்கி கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் சம்பளம் 180லிருந்து 200 ரூபாயாக உயர்ந்து விட்டது. பஞ்சு, நூல் ஆகியவற்றுக்கான போக்குவரத்து செலவும் கூடி விட்டது. ஸ்பின்னிங் மில்கள் லாபமில்லாமல் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மில்கள் மொத்த உற்பத்தி திறனையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் வழங்கும் மின்சாரத்துக்கு விற்பனை வரி சேர்த்து ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 ஆகிறது.


ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொழிற்சாலைக்கு இதை விட குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இங்கு கூடுதல் கட்டணம் வசூலித்தாலும், பகலில் மூன்று மணி நேரம், மாலையில் நான்கு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் என அறிவிக்கப்பட்ட எட்டு மணி நேர மின்வெட்டுடன், அறிவிக்கப்படாமல் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதால், நூல் அறுந்து விடுகிறது. மீண்டும் மின் சப்ளை வந்தவுடன் இயந்திரங்கள் முழுஅளவில் இயங்க மேலும் அரை மணி நேரம் தேவைப்படுகிறது. மில்லில் முக்கிய பிரிவை மட்டும் ஜெனரேட்டரில் இயக்க 22 லட்சம் ரூபாய்க்கு ஜெனரேட்டர் வாங்க வேண்டி உள்ளது. முழு அளவில் இயக்க 10 ஆயிரம் ஸ்பிண்டில் உள்ள மில்லுக்கு 50 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. ஜெனரேட்டர் பயன்படுத்தி இயக்கினால் ஒரு யூனிட்டுக்கு 13 முதல் 14 ரூபாய் செலவாகிறது. இந்த அளவுக்கு கூடுதலாக செலவு செய்து நூல் உற்பத்தி செய்தால் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நம் பகுதியில் பருத்தி மிக குறைவாக உற்பத்தியாகிறது.


எனவே லாரி வாடகை கொடுத்து ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபிலிருந்து வாங்க வேண்டி உள்ளது. உற்பத்தியாகும் நூலையும், லாரி வாடகை செலவழித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிகமுள்ள குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டி உள்ளது. இவ்வளவு கூடுதல் செலவையும் சமாளித்து மில்களை இயக்கி வருகிறோம். இந்நிலையில் தற்போதுள்ள மின்வெட்டால் மில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


"மின் தடை வாரியம்': மக்கள் ஆவேசம் :


துளசியம்மாள், (குடும்பத்தலைவி): எனது வாழ் நாளில் இப்படியொரு மின்வெட்டை கண்டதே கிடையாது. காலை, இரவு நேர மின் தடையால் சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகள் பாதிக்கப்படுகின்றன. கோடைகாலத்தில் இரவு நேரத்தில் ஏற்படும் திடீர் மின்தடையால் தூக்கம் கெடுகிறது.


சங்கர் (தொழிலாளி): கடுமையான மின்வெட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட் டுள்ளனர். கோடை காலம் என்பதால், மின்சாரத்தின் தேவை அதிகரித்திருக்கிறது. பேன், ரெப்ரிஜிரேட்டர், "ஏசி', "ஏர் கூலர்' உள்ளிட்ட சாதனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவர். இதனால், மின்தேவை அதிகரிக்கும். மின் தேவை அதிகரிக்கும் போது உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லாவிடில் மின்தடை நேரத்தை நீட்டிப்பதை தவிர அரசுக்கு வேறு வழி கிடையாது. முடிந்த வரை மின்சார விரயத்தை மக்கள் தவிர்க்க வேண்டும். தற்போது ஏற்பட்டு வரும் பல மணி நேர மின்வெட்டால் மக்கள் சிரமப்படுகின்றனர்.


பால்பாண்டி: இரவு நேர மின் தடையால் குழந்தைகள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இந்த நிலை எப்போது மாறுமோ என்ற எதிர்பார்ப்பும், கவலையும் அதிகரித்துகொண்டே போகிறது. குளிர் காலத்தில் மின்தடை இருந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம். கோடையில் மின் தடை ஏற்பட்டால் என்ன செய்ய முடியும்? மின் தடைக்கு யார் காரணமென ஆட்சியாளர்களும், எதிர்கட்சியினரும் பட்டிமன்றம் நடத் துவதை கைவிட்டு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். தற்போதுள்ள மின் தடை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும், இப்பிரச்னைக்கு மின்வாரியம் எவ்வாறு தீர்வு காணப்போகிறது, அதற்கு எவ் வளவு ஆண்டுகள் பிடிக்கும் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.


பிரபு (விவசாயி): மின் தடையால் பயிர்களுக்கு முறையாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. விளைச்சல் பாதிக்கப்படுகிறது; பயிர் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம் இருந்தால் மோட் டாரை இயக்கி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். மும்முனை மின்சாரம் இல்லாதததால் மோட்டாரை இயக்க முடிவதில்லை. விளைச்சல் குறையும் போது பொருட்களின் விலை உயருகின்றன. இதனால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.


டாக்டர் சிவசாமி (விவசாயிகள் சங்க தலைவர்): பகலில் 6 மணி நேரமும், இரவில் 8 மணி நேரமும் மின் வினியோகம் இருக்க வேண்டும். ஆனால், இரவில் விவசாயத்துக்கு 2 மணி நேரம் கூட மின்சாரம் இல்லை. பயிர்கள் காய்ந்து விட்டன. இதே நிலை நீடித்தால் 70 சதவீத பயிர்கள் அழிந்து விடும். அரசு நிர்வாகம், தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டில் உள்ளதால் எங்களின் குமுறுலை, பிரச்னைகளை யாரிடம் போய் சொல்வது என தெரியவில்லை. வீடுகளில் இரவில் மின்வெட்டு ஏற்படுவது மிக கொடுமையானது. தூக்கமில்லாமல் கொசுக்கடியில் அல்லாட வேண்டியுள்ளது. இப்பிரச்சனைக்கு மாநில அரசை மட்டும் குறைகூறி பலனில்லை. மத்திய அரசின் கீழ் இயங்கும் மின்சார ஓழுங்குமுறை ஆணையமும் பொறுப் பேற்க வேண்டும். சென்னைக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் அனைத்து இடங்களுக்கும் மின்சாரத்தை சமமாக பகிர்ந்து வழங்க வேண்டும்.


தியாகு ("புதிய வெளிச்சம்' நிர்வாகி): மின்வெட்டு, அரசின் இயலாமையை காட்டுகிறது. மின்வெட்டின் போது பின்பற்றப்பட வேண்டிய புதிய மின் கொள்கை உருவாக்கப்பட்டு அமுல்படுத்த வேண்டும். மின்சாரம் எப்போது வரும், போகும் என தெரியவில்லை. இக்கொடுமையை யாரிடம் போய் சொல்வது எனவும் தெரியவில்லை.


ராமசாமி (ஒர்க்ஷாப் உரிமையாளர்): அறிவிக்கபட்ட மின்தடை சரியான நேரத்தில் "கட்' செய்யப்படுகிறது. மறுபடியும் திரும்பி வருவது எப்போது என தெரிவதில்லை. திடீரென "கரன்ட்' கட்டாவதால் லேத்தில் "செட்டிங்' மீண்டும் போடவேண்டும். இதனால், உற்பத்தியும் பாதிக் கப்படுகிறது; காலமும் விரையமாகிறது. அரசும், மின் வாரியமும் தொழில்களை நசிவடைய காரணமாகிவிட்டன.


சம்பத்குமார் (தொழிலதிபர்): ஏற்கனவே தொழிலாளர் பற்றாக்குறை, சம்பள உயர்வு ஆகிய பிரச்னைகளால் தொழில் பாதிப்படைந்துள்ளது. தற்போது நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் தொழிற்சாலையை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்தடையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு "ஆர்டர்களை' குறித்த நேரத்தில் கொடுக்க முடிவதில்லை. "ஜெனரேட்டர்' வைத்து இயக்கினாலும் நஷ்டம்தான் ஏற்படுகிறது. மின்தடையால் சிறு மற்றும் குறுந்தொழில் செய்வோர் கடும் பாதிப்படைந்துள்ளனர்.


குமரேசன் : தேர்வு காலங்களில் மின்வெட்டு இருக்காது என அறிவித்தனர். ஆனால், தேர்வின் போதும் மின்வெட்டு ஏற்பட்டது. வீடுகளில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பிரிட்ஜ் உள்ளிட்டவை பழுதடைந்து விட்டன. காலை 6.00 மணிக்கே மின்வெட்டு ஏற்படுவதால் வேலைக்கு செல்பவர்கள் சமைக்க கூட முடிவதில்லை.


வில்சன் (தனியார் நிறுவன ஊழியர்): காலையில் எழுந்தது முதல் இரவில் தூங்கச் செல் லும் வரை எப் போது கரன்ட் போகுமோ என்ற கவலை எங்களுக்கு. குறிப்பிட்ட வேலையை குறித்த நேரத்தில் முடிக்காவிட்டால் மாலை முழுவதும் பரபரப்புக்கு ஆளாகி, சிரமப்பட வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம், அறிவிக்கப்பட்ட நேரத்தில் மட் டுமே மின்தடை ஏற் பட்டது. தற்போது பகல், இரவு என சரமாரியாக மின்தடை ஏற்படுகிறது. தமிழகத்தை பொருத்தவரை இந்த காலம், இருண்ட காலம் தான். மின் வாரியத்தை "மின் தடை வாரி யம்' என்றே அழைக்கலாம்.


சாவித்திரி (தனியார் நிறுவன ஊழியர்): மின் தடையால் வீட்டு சமையல் வேலைகளை குறித்த நேரத்தில் முடித்து வேலைக்கு செல்ல முடிவதில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் சமையல் மற்றும் துணி துவைப்பது என்று எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை. "கரன்ட்' இருக்கும்போது வேலைகளை முடிக்க வேண்டியுள்ளது. கரன்ட் பிரச்னை தினமும் ஓயாத தொல்லை.

Sunday, April 17, 2011

வெல்லட்டும் புனித யுத்தம்: உரத்த சிந்தனை, எம்.ஆர். இராமலிங்கம்


காந்தியவாதி அன்னா ஹசாரே, இந்திய நாட்டையே கலக்கி விட்டார். அவரது உண்ணாவிரதப் போராட்டம், சமுதாயத்தில் பல்வேறு தரப்பினரை சிந்திக்க வைத்திருக்கிறது. இவர் வலியுறுத்தும் லோக்பால் மசோதாவை அரசியல்வாதிகள் உயிரோட்டமாக கொண்டு வருவரா என்பது இனி தெரியும். அதற்கான சட்டவரைவு மசோதாவை, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு முடிவு செய்யும்.


மொரார்ஜி தேசாய் அரசில் இருந்த, சட்ட அமைச்சர் சாந்தி பூஷண் மற்றும் அவர் மகனும், சிறந்த சட்ட அறிஞருமான பிரசாந்தி பூஷண் ஆகிய இருவரும், இதற்கு உருத் தரலாம். பிரசாந்தி பூஷண் சுபாவமே, நியாயத்திற்கு புறம்பான சட்ட நெறிமுறைகளை, பணத்திற்கு ஆசைப்பட்டு செய்யாதவர். சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள, "ஆம்புட்ஸ்மென்' பாணியில் இந்த லோக்பால் மசோதா உருவாகும்போது, அது சமுதாயத்தில் புரையோடிப் போய் இருக்கும் லஞ்சத்தை அடியோடு தீர்க்குமா என்ற கேள்வி எழுகிறது. சுதந்திர இந்தியாவில் பெரும் வளர்ச்சி பெற்ற பெரிய கம்பெனிகள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் இழுத்தடிக்கும், தாமதித்த நீதி நடைமுறைகள் எல்லாமே, லஞ்சம் வளரக் காரணமாக, ஏதாவது ஒரு விதத்தில் அமைந்திருக்கின்றன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சீர்திருத்தம் செய்து, அரசை இயக்கும் பொறுப்பில் உள்ளவர்கள், கிரிமினல் தொடர்பு இல்லாத நடைமுறையில் தேர்வு செய்யப்படும் வழி காண, இன்னமும் தேர்தல் கமிஷன் காத்திருக்கிறது. இதில் சீர்திருத்தம் கொண்டுவரச் சட்டம் இயற்றாத போது, இந்த மசோதா மட்டும், ஒரே நாளில் நாட்டை மாற்றிவிடுமா என்ன?


சுதந்திரப் போராட்ட காலத்தில், காந்தி மேற்கொண்ட சத்யாகிரக நடைமுறை, ஏழை முதல், பணக்காரர்களை ஒரே கருத்தில் கொண்டு வந்து இயக்க வைத்த நடைமுறை. அன்று எல்லாருக்கும் பொது எதிரி, "பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி!' சுதந்திரம் பெற்ற பின், எல்லாரும் இந்நாட்டு மன்னர்; அதில் கடமை பொறுப்புகள், காற்றில் பறந்தன. நேரு பிரதமராக இருந்த போது, அவர் தவறைச் சுட்டிக்காட்ட அல்லது இடித்துரைக்க, சர்தார் படேல் இருந்தார். அவர் மறைவுக்குப் பின், கோவிந்த வல்லப பந்த், மகாவீர் தியாகி போன்றோர் இருந்தனர். ஆசார்ய கிருபளானி போன்ற அப்பழுக்கற்ற தலைவர்கள் கருத்தை, நேரு கேட்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. அவசர நிலைக்காலத்தில், ஜனநாயகமே தடம்புரண்ட போது, சர்வாதிகார உணர்வு மேலோங்கிய போது, பொதுமக்கள் கருத்துக்கு உருவம் தந்தவர், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன். அவர் கூறியது முழுமைப்புரட்சி. அந்த முழுமைப் புரட்சியை ஆதரித்த லாலு பிரசாத் எப்படி, மற்றொரு அரசியல்வாதியான நிதிஷ் குமார் எப்படி? ஒப்பிட்டுப் பாருங்கள்.


நம் தமிழகத்தில், மாபெரும் தலைவரான காமராஜர், 1975, அக் 2ம் தேதி அன்று காலமானார். அவர், அவசர நிலைக்கு எதிரி. அவரது செயலராக இருந்த, எஸ்.வெங்கட்ராமனிடம், அன்று காலையில் அவர் முதலில் கேட்ட கேள்வி, "ஜெ.பி.யை சிறையில் இருந்து இந்திரா விடுவித்தாரா?' என்பது தான். அவரிடமிருந்து, "இல்லை' என்று பதில் வந்ததும், அவர் மனம் அதிக வேதனைப்பட்டு நொந்தது. காரணம், காங்கிரசை நல்ல இயக்கமாக வளர்த்த அவருக்கு, இந்திராவின் செயலில் ஒப்புதல் இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியில், துதிபாடும் கூட்டத்தின் கை மேலோங்கி விட்டது. அண்ணாதுரை, "திராவிட நாடு' கேட்ட தலைவர்; வித்தியாசமானவர். தலைவர் என்று ஏற்றுக் கொண்ட ஈ.வெ.ரா., இளம் பெண்ணை, இரண்டாவது மனைவியாக மணம் செய்ததை ஆதரிக்காமல், வேறுபாதை கண்டவர். பின்பு அரசியலில் வெற்றி பெற்றபின், குறிப்பாக ராஜ்யசபா எம்.பி.,யான பின், "இந்தியா என்பது பெரிய தேசம். அதில் மக்களை ஈர்க்கும் தலைவர்கள் உள்ளனர்' என்று உணர்ந்து செயல்பட்டவர். அவரது ராஜ்யசபா பேச்சுக்களில் சில அவற்றுக்கு சாட்சி. அதனால், அவர் ஓரளவு மனச்சாட்சிப்படி நடந்ததால், ஊழலில் திளைக்கவில்லை; ஆதரிக்கவும் இல்லை. இதை வேறு விதமாகச் சொன்னால், ஆளுவோருக்கும் சரி, பெரிய நிர்வாகத்திலும், பொதுப் பணி ஆற்றும் இயக்கங்களுக்கும், இந்த மாதிரி முற்றிலும் நேர்மையான, விஷயம் தெரிந்த, உலக நடப்புகளுடன் வழிநடத்த, ஒரு சக்தி தேவை. அது தனி மனிதராக அல்லது இயக்கமாக அமையலாம். அதை ஆங்கிலத்தில், "கிரிட்டிக்கல் இன்சைடர்' என்பர்.


காந்தி, தன் சுயசரிதையில் அதை, "அந்தராத்மா' என்பார். தமிழில் அதை, "உள்மனதின் நல்ல ஒலி' என்று கூட கூறலாம். வள்ளுவர் அதை, "பூதங்கள் ஐந்தும் அனைத்தே நகும்' என்று துறவு அதிகாரத்தில் கூறுவார். இன்றைய நிலையில், அந்த பழைய விளக்கங்கள் அப்படியே பொருந்தாது. ஜனநாயகம், உலக அளவில் இணைந்த பொருளாதாரம், இணையதள செய்தித் தொடர்பு என்று பரந்து, உலகமே சுருங்கிய பின், அதற்கேற்ற நடைமுறை தேவை. இந்திய மண்ணின் சுபாவமே, பொறுத்திருந்து பொங்கி எழுவது என்பதுதான். அதே சமயம், எல்லாரும் பின்பற்றும் தலைவர் என்பவர், இந்த மண்ணை ஒட்டிய நடைமுறைகளைப் பின்பற்றினால், அதை மக்கள் அப்படியே ஏற்பர். அதற்கு ஹசாரே தற்போது, முதலில் வடிவம் தந்திருக்கிறார். அதனால், அவரே தன் பேட்டியில், "இப்போது தான் பயணம் தொடங்கியிருக்கிறது' என்கிறார். இப்பயணம் எந்த அளவு உருப்பெறும் என்பது, வரும் சுதந்திர நன்னாளுக்குப் பின் தெரியும். அதுமுழு வெற்றி பெற்றால், நம்நாட்டிற்கு, பாமர மக்களுக்கு கிடைக்கும் சுதந்திர தினப் பரிசு. email: ramalingamcff@gmail.com


எம்.ஆர். இராமலிங்கம், பத்திரிகையாளர்


தினமலர்

Saturday, April 16, 2011

ஒரு ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழலா?


சட்டசபை தேர்தலில், 80 சதவீதத்திற்கு அதிகமாக மக்கள் ஓட்டளித்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்பதா? ஆட்சியாளர்கள் மீதிருந்த அதிருப்தி என கொள்வதா? வாக்காளர்கள் கடமை இதோடு முடிந்து விட்டதா? நாம் யாரை தேர்வு செய்ய ஓட்டளித்து இருக்கிறோம்? அடுத்த ஐந்து ஆண்டுகள் எந்த ஊழல் கட்சி கையில் அதிகாரம் போகப் போகிறது?


தமிழ்ப் பண்பாடு, நாகரிகம், கலாசாரம், ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, "குடவோலை' ஓட்டு முறை மூலம், ஜனநாயகத்தை உலகத்திற்கு கற்றுத் தந்தவர்கள் தமிழ் மன்னர்கள். சர்வ அதிகாரமும் பெற்றவன் மன்னன். அனைவரும் அவன் கொடை கீழ் தான் என்றிருந்த போதும், தமிழ் மன்னர்கள் ஜனநாயகத்தைப் போற்றி வந்திருக்கின்றனர். குற்றமிழைத்தவர்கள், கொலைகாரர்கள், குடிகாரர்கள், சமூக அந்தஸ்து இல்லாதவர்கள், தனக்குப் பின் தன் வாரிசு என்போருக்கெல்லாம் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லை என, அன்றே நிர்ணயித்தவர்கள் தமிழர்கள். ஆனால், இன்று அவைகள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது கண்டு, நெஞ்சம் கனக்கிறது. அன்றைய 10ம் நூற்றாண்டில் மட்டுமல்ல, இன்றைய, 21ம் நூற்றாண்டிலும் தமிழகம் தலை நிமிர்ந்து தான் நின்றது. உலகின் மிகப்பெரும் ஐ.டி., நிறுவனங்கள், நாசா போன்ற விண்வெளி அமைப்புகள், தமிழர்களையும், சீனர்களையும் தான் தங்கள் நிறுவனங்களுக்கு தேர்வு செய்தனர். தமிழர்களின் அறிவுத்திறன், வேகம், முற்போக்கு சிந்தனையே இதற்கு காரணம் என்று பில்கேட்ஸ் முதலானோர் கூறினர்.


இத்தகைய பெருமை பெற்ற தமிழகம், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் புரிந்து தமிழ், தமிழன் என்று பேசி, நம்மை ஏமாற்றி, உலகம் நம்மை எள்ளி நகையாட வைத்த கட்சிகளால், இன்று, தலைகுனிந்து நிற்கிறது. ஓட்டளித்த 80 சதவீத மக்கள், இன்றைய ஆட்சியாளரை மாற்றிவிட்டால், இந்த நிலை மாறி விடுமா? தமிழகம் மீண்டும் தலைநிமிர்ந்து விடுமா? ஆட்சியாளர்களுக்கு நாம் அதிகாரம் வழங்குகிறோம், பொறுப்பு கொடுக்கிறோம். அதற்கு ஆட்சியாளர்கள், மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். அவர்கள் பதில், ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தலின் போது மட்டும் தான் இருக்கிறது என்பதும் ஒரு காரணம். மக்கள் நலனுக்காக ஆட்சி செய்ய வேண்டிய நல்லவர்கள் கிடைக்காததால், வாக்காளர்களும், உண்மையான ஆட்சி மாற்றத்தை செய்ய முடியாமல், இதுவரை, ஒரே தோசையை திரும்பத் திரும்ப, திருப்பிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன தீர்வு? புதிய ஆட்சியாளர்களை கொண்டு வர முடியாதா? ஆளும் கட்சியின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த சட்டசபைக்குள்ளும், சட்டசபைக்கு வெளியேயும் ஒரு மூன்றாவது சக்தி வேண்டும். அது தரமான, தகுதியான, நிரூபிக்கப்பட்ட, மக்கள் நலம் விரும்பும் சக்தியாக இருக்க வேண்டும். நீதிபதிகள், தேர்வாணைக் குழு நிர்வாகிகள், பல்கலைக் கழக துணைவேந்தர்கள் என்பன போன்ற பல்வேறு மக்கள் நல முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில், ஆளும் கட்சியின் ஜால்ராக்கள் அல்லது தகுதியில்லாதவர்கள் நியமிக்கப்படுவதைத் தடுக்க, இந்த மூன்றாவது சக்தி சட்டசபைக்குள் வர வேண்டும்.


சட்டசபைக்கு வெளியேயும் ஒரு மூன்றாவது சக்தி தேவை. அதுவும், தரமும், தகுதியும் வாய்ந்த அரசு சாரா பொது நல அமைப்பாக இருக்க வேண்டும். இன்று ஊழலுக்கு எதிராக, இந்தியாவை உலுக்கிய, இளைஞர்களை கவர்ந்த சமூக ஊழியர் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் மாதிரியான ஒரு காவல் அமைப்பு வேண்டும். அதில் பொதுமக்கள் பெருமளவு பங்கு கொள்ள வேண்டும். இந்த சமூக அமைப்பிலிருந்து பாதி பேர், அரசின் பிரதிநிதிகள் பாதி பேர் என்று சேர்ந்த குழுவே, அரசின் கொள்கைகளை முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவுகளே இறுதியில் சட்டமாக்கப்பட வேண்டும். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆட்சியாளர்களின் செயல்பாட்டுக்கு ஓட்டுரிமை மூலம் மக்கள் தீர்ப்பளிக்கின்றனர். அதுவும், இன்றைய அரசுக்கு தண்டனை தரப்படுகிறதே தவிர, நாளைய நல்ல அரசு தேர்வுக்கான தீர்ப்பாக அது இருப்பதில்லை. இந்நிலை மாற வேண்டும் என்றால், அரசின் ஐந்து ஆண்டு கால செயல்பாட்டிலும், மக்களின் பங்கும், பங்களிப்பும் இருக்க வேண்டும். ஓட்டுரிமை பயன்படுத்தும் போது மட்டுமே வாக்காளர்களின் பங்கு அரசியலில் இருக்கிறது என்ற நிலை உள்ளதாலேயே, இம்மாதிரி ஊழல் அரசுகள் வந்து போகின்றன. அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை. உள்ளொன்றும், வெளியொன்றும் என இரு முகங்களில் உள்ளதை, "விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது.


அரசை யாரெல்லாம் நடத்துகின்றனர்? தமிழ், தமிழன், இந்தியன் என்போரெல்லாம், இந்தியாவின் இறையாண்மையை எப்படி வெளிநாட்டிற்கு விற்கின்றனர்? பன்னாட்டு கம்பெனிகள் எப்படி இந்திய அரசுகளை ஆட்டிப் படைக்கின்றன? இவையெல்லாம் விக்கிலீக்ஸ் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த நிலை தொடராமல் இருக்க, அரசின் கொள்கை முடிவு எடுப்பதில், அதை அமல்படுத்துவதில், வாக்காளர்களாகிய நம் பங்கு இருக்க வேண்டும். அதுவும், ஆட்சி செய்யும் ஐந்து ஆண்டு காலமும் இருக்க வேண்டும். இதற்கு நம் உரிமைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், ஜனநாயக தத்துவத்தை குடை சாய்க்கும் ஆட்சியாளர்களை தடுத்து நிறுத்த முடியும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இது சாத்தியம். இதில், பத்திரிகை, ஊடகங்கள் பங்கு மகத்தானது. அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை நான்கே நாட்களில் உலகறியச் செய்தது ஊடகங்கள் தான். இதே ஊடகங்கள் தான், தரமுள்ள, தகுதியாக மூன்றாவது சக்தியை சட்டசபைக்குள் கொண்டு செல்ல காரணமாக இருக்க வேண்டும். சட்டசபைக்கு வெளியே வலிமையான மக்கள் சக்தி கொண்ட, தகுதியான சமூக குழுக்களை உருவாக்க பத்திரிகைகள் உதவ வேண்டும். இந்த இரண்டும் நடக்கும்போது, ஊழல் பறந்தோடும்; நேர்மை நெஞ்சு நிமிரும்; தமிழகம் மீண்டும் தலை நிமிரும்.

Friday, April 15, 2011

காங்கிரசை கலங்கடித்த இலங்கை தமிழர் பிரச்னை: மிரண்ட வேட்பாளர்கள்


இந்தியாவின் சக மாநில மக்களை போல், பார்க்கபட்டவர்கள் தான் இலங்கை தமிழர்கள். அந்த அளவிற்கு நம் தேசத்திற்கும், அவர்களுக்குமான நட்பு கொண்டாடப்பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு இன்னல் என்றால் தமிழகம் கொந்தளித்தது. இலங்கை போராட்டக் குழுக்களுக்கு தமிழக கட்சிகள் போட்டி போட்டு ஆதரவு கொடுத்தன.


இலங்கை தமிழர் விவகாரத்தில் நமக்குள்ள கடமையை உணர்ந்து செயல்பட்டவர் மறைந்த பிரதமர் இந்திரா. போராளிக் குழுக்களுக்கு, "ரா' அமைப்பு மூலம் பயிற்சி கொடுத்து, போராட்டத்திற்கு நேரடி ஆதரவு தந்தார். இலங்கை தமிழர் போராட்டத்திற்கு எம்.ஜி.ஆரும் மிகப்பெரிய உதவியை வழங்கினார். "டெசோ' மாநாடு போன்றவற்றை நடத்தி கருணாநிதியும் தன் பங்கிற்கு ஆதரவு கொடுத்தார். இப்படி, கட்சி பேதம் இல்லாமல் இலங்கை தமிழர்களுக்காகவும், அங்குள்ள போராட்டக் குழுக்களுக்காகவும் உதவிய காலத்திற்கு முற்றுப்புள்ளி ஏற்படுத்திய சம்பவம் ராஜிவ் கொலை. இலங்கை விவகாரத்தை அலசும் அத்தனை ஆய்வாளர்களும், ராஜிவ் கொலைக்கு முன் - பின் என்று இரு பிரிவாகவே அதை பார்க்கின்றனர்.


ராஜிவ் கொலை சம்பவத்திற்கு பிறகு, இலங்கை தமிழர்கள் குறித்த பிரச்னையில் கவனம் செலுத்தாமல் இருந்தாலும், தமிழகத்தில் தங்களது கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என, எண்ணிய பல கட்சிகள் கை விரிக்க துவங்கி விட்டன. இலங்கை தமிழர்களுக்காக தனது அழுத்தமான குரலை வைகோ தொடர்ந்து பதிவு செய்த போதிலும், ம.தி.மு.க., கட்சிக்கு தேர்தலில் செல்வாக்கு உயரவில்லை. இவையெல்லாம் இலங்கை தமிழர்கள் பிரச்னையில் தமிழர்களின் அக்கறை குறைந்ததை காட்டியதாகவே அரசியல் கட்சியினர் எண்ணினர். இதனால், முக்கிய கட்சிகள் பல இந்த விஷயத்தில் சற்று இடைவெளி விட்டே நின்று கொண்டன. இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக இலங்கை தமிழர்கள் பெருந்துன்பத்திற்கு ஆளானதும், இறுதி கட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்து, கொத்தாக கொல்லப்பட்டதும், தமிழக மக்களின் மனதை உலுக்க செய்தது. அத்துடன் கடந்த சில மாதங்களாக, தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவதும், பிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது. இரண்டு சம்பவங்களையும் ஒன்றாக பார்க்கும் மனபக்குவத்திற்கு வந்த தமிழக மக்களுக்கு யார் மீது கோபமோ... இல்லையோ... ஆனால், இந்த இரண்டு விஷயத்திலும் அமைதி காத்து வந்த காங்கிரஸ் கட்சியின் மீது தீராத வெறுப்பாக அது மாறியது.


இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பெரும் தடையாக இலங்கை பிரச்னையே எதிரொலிக்கும் நிலை ஏற்பட்டது. மத்திய உளவுத் துறையினரும் இதை உறுதி செய்து மேலிடத்திற்கு தெரியப்படுத்தினர். விலைவாசி பிரச்னை, ஸ்பெக்ட்ரம் முறைகேடு, குடும்ப அரசியல் என, முக்கிய பிரச்னைகளில், தி.மு.க., மாட்டி தவித்ததால், இலங்கை தமிழர்கள் பிரச்னை, அவர்களுக்கு, ஆறு, ஏழாவது இடத்துக்கு போய்விட்டது. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இலங்கை பிரச்னையே தோல்விக்கு அழைத்து செல்லும் பிரதானமான பிரச்னையாக வெடித்தது. இந்த விஷயத்தில் சற்று அனுசரித்து சென்றால் மட்டுமே, தேர்தலில் தமிழக மக்களின் மனதை நெருங்க முடியும் என, நினைத்த மேலிட காங்கிரஸ் சற்று இறங்கி வந்தது. அதனால் தானோ என்னவோ, தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் தொடர்பாக சென்னையில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு குறித்து பேசி சென்றார். குறிப்பாக அவர்கள் சம உரிமை பெறவும், மறுவாழ்விற்காகவும், புனரமைப்பு பணிக்காகவும் மத்திய அரசு பல்வேறு உதவிகளையும், தேவையான நிதி உதவியையும் செய்து வருவதாக குறிப்பிட்டார்.


"இதெல்லாம் பொய் வேஷம்; களத்தில் காங்கிரசை காணாமல் அடிக்க வேண்டும்' என, தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட, 63 தொகுதிகளிலும், "நாம் தமிழர் இயக்கம்' உள்ளிட்ட தமிழர் அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கின. ஏற்கனவே லோக்சபா தேர்தலின் போது இவர்கள் கொடுத்த நெருக்கடியால், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, இளங்கோவன் தோல்வி, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் சிதம்பரத்தின் வெற்றி அமைந்தது போன்ற திருப்பங்கள் நிகழ்ந்தன. இந்த தேர்தலில், ஏற்கனவே கோஷ்டி பூசலாலும், உள்ளடி வேலையாலும் கலங்கி நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இலங்கை பிரச்னையும் சேர்ந்து கொள்ள உச்சக்கட்ட தோல்வி பயத்தில் உறைந்தனர். பல பிடிவாதங்களுக்கு பின், தி.மு.க., கூட்டணியில், 63 தொகுதிகளை பெற்ற போதிலும், வெற்றி வாய்ப்பை பாதிக்கும் இலங்கை தமிழர் விவகாரத்தில், ஆரம்பத்திலேயே, சில சரியான அணுகுமுறைகளை பின்பற்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களும் தவறிவிட்டனர். இலங்கை தமிழர் பிரச்னை தமிழகத்தில் மறுபடியும் ஓட்டு வங்கியை உருவாக்கியுள்ளதா என்பதற்கான விடை, காங்கிரசின் வெற்றி, தோல்விகள் மூலம் தெரியவரும். அதன் மூலமாக, மற்ற கட்சிகளுக்கு இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என்பதில் தெளிவு ஏற்படும்.

Thursday, April 14, 2011

பிரமிக்க வச்சுட்டீங்க மிஸ்டர் பிரவீன்குமார்... பிரமாதம்!



அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவமாக இன்னும் சில நாட்கள்தான் பாக்கி இருக்கும். ஆனால், தைரியமாக ஓட்டுச்சாவடியில் வரிசையில் நிற்கிறார் அவர். மற்றவர்கள் பார்த்து, அவரை முன்னால் ஓட்டுப்போட அனுமதிக்கின்றனர். ஓட்டுப்போட்டு வந்து, வெளியே இருப்போரிடம் தன் விரல் மையை அவர் உயர்த்திக்காட்டும்போது, அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு குழந்தையைப் பிரசவித்த பரவசம்.

இது எப்படிச் சாத்தியமானது என்று தெரியவில்லை. நினைத்துப் பார்த்தால், பெரும் பிரமிப்பாகத் தெரிகிறது, தமிழகத்தில் இப்படியொரு தேர்தலா என்று. கள்ள ஓட்டு இல்லை; கை கலப்பு இல்லை; கலவரம் எதுவுமில்லை. அமைதியான ஓட்டுப்பதிவு என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதை துல்லியமாக காட்டி, இந்த தேர்தலின் கதாநாயகன் தான்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது தேர்தல் கமிஷன்.தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதற்கு அடுத்த நாளிலிருந்தே ஊரெல்லாம் ஒலி பெருக்கிகள் முழங்கும்; அரசியல் விளம்பரங்களால் வெள்ளைச் சுவர்கள் அழுக்காகும்; காணும் திசையெல்லாம் கட்சித் தோரணங்கள் கலங்கடிக்கும்; ஊர்வலம் என்ற பெயரில் ஊரே குப்பையாகும்; தொண்டர்களின் வெள்ளத்தில் மதுக்கடைகள் மூழ்கிப்போகும்; ஓட்டுப்பதிவு நாளில், மக்கள் வெளியே வர பயப்படும் அளவுக்கு சூழல் மிரட்டும்.


இந்த தேர்தலில் இந்தக்காட்சிகள் எதுவுமில்லை; ஆங்காங்கே பணப்பட்டுவாடா நடந்தாலும், அதுவும் இலைமறை காய்மறையாகத்தான் நடந்தது. சிறு சிறு தகராறுகள் அரங்கேறினாலும், அதுவும் பரவாத அளவுக்கு பாதுகாப்பு வளையம் இறுக்கப்பட்டது. எல்லாவற்றையும் விட, தேர்தல் நாளில் மக்களிடம் காணப்பட்ட உற்சாகம், தேர்தல் கமிஷன் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த நம்பிக்கையை முழுமையாக வெளிப்படுத்தியது. ஏதோ திருவிழாக் கூட்டத்தைப் பார்க்க அழைத்து வருவதைப்போல, ஓட்டுச்சாவடிக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய்மார்களும், முதியவர்களும் வந்த காட்சி, முன் எப்போதும் பார்த்திராதது. வண்டி வைத்து வாக்காளர்களை தூக்கி வரும், தேர்தல் கால திடீர் கரிசனத்தை நேற்று எங்கும் பார்க்க முடியவில்லை. இறுதி கட்ட "கேன்வாஸ்' என்ற பெயரில், வாக்காளர்களை வம்புக்கிழுக்கும் வேலையும் நடக்கவில்லை.


தேர்தல் கமிஷனில் பணியாற்றும் எந்த அலுவலரும், திடீரென வானத்திலிருந்து குதித்தவர்களில்லை; இதே ஊரில், ஏதோ ஒரு துறையில் வேலை பார்க்கும் அலுவலர்கள்தான். வெளி மாநிலங்களிலிருந்து கண்காணிக்க பல அதிகாரிகள் வந்திருந்தாலும், இவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களால் முழு வீச்சில் செயல்பட்டிருக்க முடியாது. அப்படி இருந்தும் யாருக்கும் பயப்படாமல் தேர்தல் பணியாற்றிய இவர்களே, முதல் பாராட்டுக்குரியவர்கள்.இவர்களுக்கு அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் தந்து செயல்பட வைத்ததும், செயல்பட மறுத்தவர்களைத் தண்டித்து, மற்றவர்களுக்குப் பாடம் புகட்டியதும் தேர்தல் கமிஷன்தான். தலை சரியாயிருந்தால், எல்லாமே சரியாயிருக்கும் என்பார்கள். அந்த வகையில், எல்லோரையும் சரியாகச் செயல்பட வைத்து, தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன் குமார்தான் ஒட்டு மொத்த பாராட்டுக்குரியவர்; அவருக்கு தமிழக மக்கள் அனைவர் சார்பிலும் தலை தாழ்த்தி குரல் உயர்த்திச் சொல்கிறோம்... சபாஷ்!

Wednesday, April 13, 2011

ஏன் இப்படி மக்கள் ஆர்வம் : வெற்றி யாருக்கு ?


சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் இன்று காலை முதல் விறு, விறு ஓட்டுப்பதிவு நடந்து வருவதற்கு என்ன காரணம் என ஆங்காங்கே அரசியல் கட்சியினர் காரணம் தெரியாமல் திகைக்து போயினர். 8 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு முதல் தமிழகம் முழுவதும் நகரம், கிராமம் என பாகுபாடு இல்லாமல் அனைத்து சாவடிகளிலும் மக்கள் சாரை, சாரையாக நீண்ட கியூ வரிசையில் காத்து நின்றனர்.


திருச்சியில் வரிசையில் காத்து நின்ற வாக்காளர்கள் என் எவ்வளவு நேரம் வரிசையில் நிற்பது சீக்கிரமாக ஓட்டு போட விடுங்கப்பா என அலுத்துபோய் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனையடுத்து இந்த சாவடியில் கூடுதல் அலுவலகர்களை நியமித்து ஓட்டுப்பதிவு விரைவாக நடத்தப்பட்டது.


மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகத்திலேயே கூடுதலாக தர்மபுரியில் 63 சதம் ஓட்டுக்கள் பதிவாகின. கரூர். கோவை, மதுரை, சேலம் , திருச்சி என அனைத்து சாவடிகளிலும் 50 சதத்தை தாண்டி பதிவு போய்க்கொண்டிருந்தது. சென்னையிலும் 55 சதம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தது.


வெயில் காரணமாக காலையில் மக்கள் வந்தார்களா, அல்லது ஆளும் அரசுக்கு எதிராக ஓட்டளிக்க ஆர்வத்துடன் வந்தனரா, அல்லது பணம்பட்டுவாடா காரணமா என ஆங்காங்கே அலசப்பட்டு வந்தது. குறிப்பாக அரசியல் தலைவர்கள் அனைவரும் எங்களுக்கே வெற்றி என எல்லோரும் சொந்தம் கொண்டாடினாலும், உண்மையான வெற்றி தேர்தல் கமிஷனுக்குத்தான் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.


தேர்தல் கமிஷனின் ஓட்டுப்போட வாங்க, ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்க என்றும் அழைப்பு விடுத்ததற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்துள்ளனர் என்றே கருதலாம். இப்போதைக்கு வெற்றி தேர்தல் கமிஷனுக்கே ! அரசியல் ரீதியாக வெற்றி பெற்றது யார் என்பதற்கு இன்னும் 30 நாள் ( வரும் மே 13 ம்தேதி வரை ) காத்திருப்போம்.

Tuesday, April 12, 2011

அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்? தேர்தலை ஒத்தி வைக்க பரிசீலனை


சென்னை: ""வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்ந்தால், அந்த தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும். தேர்தல் நடந்த பின் கூட, அந்தந்த தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படும்,'' என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் எச்சரித்துள்ளார். இதையடுத்து, சில தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:தேர்தல் பிரசாரம், மாலை 5 மணியுடன் முடிந்து விட்டது. இதன்பின், "டிவி'க்களில் கூட பிரசாரம் செய்யக் கூடாது. செய்தி தவிர, பிரசாரமாக ஒளிபரப்பினால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கக் கூடிய வகையில் வழக்கு பதிவு செய்யப்படும். எஸ்.எம்.எஸ்., மூலமும் பிரசாரம் செய்யக் கூடாது.
தேர்தலில் சில தொகுதிகளில் பணப் பட்டுவாடா செய்வது குறித்து கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையும் மீறி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால், அந்த தொகுதிகளின் தேர்தல் தள்ளி வைக்கப்படும். பணப் பட்டுவாடா மற்றும் அதிகளவில் முறைகேடுகள் நடந்தது பற்றி, ஓட்டுப் பதிவுக்கு பிறகு கூட தகவல் கிடைத்தால், அந்த தொகுதியில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்படும்.


சில தொகுதிகளில், பணம் கொடுப்பதாக அதிகளவில் புகாரும், சில தொகுதிகளில் குறைந்தளவு புகாரும் வந்துள்ளன. இதுவரை, மொத்தம் 33 கோடியே 11 லட்சம் ரொக்கமும், 12 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில், கணக்கு காட்டியதன் அடிப்படையில், 5.18 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஸ்டாலின் அவதூறாக பேசியதாக வந்த புகாரின் பேரில், இன்று (நேற்று) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, ஜெயலலிதா மற்றும் விஜயகாந்துக்கு அனுப்பிய நோட்டீசுக்கு, அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதை பரிசீலித்து, தேர்தல் கமிஷன் முடிவு எடுக்கும்.


தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக, இதுவரை, 61 ஆயிரத்து 20 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றில், சுவர்களை சேதப்படுத்தியதாக, 55 ஆயிரத்து 254 வழக்குகளும், வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக, 2,850 வழக்குகளும், வழிபாட்டுத்தலங்களை தவறாக பயன்படுத்தியதாக, 24 வழக்குகளும், சட்டவிரோத கூட்டங்கள் நடத்தியதாக, 154 வழக்குகளும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, 975 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.பணப் பட்டுவாடாவில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பல இடங்களில் பணம் கொடுப்பதாக புகார்கள் வருகின்றன. ஆனால், பறக்கும் படையினர் அங்கு செல்வதற்குள், அவர்கள் பணத்தை கொடுத்து முடித்து ஓடி விடுகின்றனர்.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.


கொளத்தூரில் தடை?எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு பிரசாரத்தின் சுருதியைக் குறைத்த தேர்தல் கமிஷன், பண வினியோகத்தை தடுக்க வங்கிக் கணக்குகளை கண்காணித்தல், வாகனச் சோதனை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கோடிக்கணக்கில் பணம், பொருள், நகை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது.கடந்த நான்கு நாட்களாக தமிழகம் முழுவதும் பண வினியோகம் தீவிரமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் கமிஷன், வி.ஐ.பி., தொகுதிகளான திருவாரூர், ஸ்ரீரங்கம், ரிஷிவந்தியம், கொளத்தூர் மற்றும் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.மதுரையில் அழகிரி அதிகார எல்லையில் வரும் தொகுதிகள் மீது, கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தொகுதிகளில் பண வினியோகம் நடந்தால், உடனே தேர்தலை ரத்து செய்யவும் தேர்தல் கமிஷன் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

Monday, April 11, 2011

தமிழக தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது., நாளை மறுநாள் ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார் !


சென்னை: ஒரு மாதகால பிரசாரம் முடிந்து இன்று மாலையுடன் எவ்வித சலனமுமின்றி அமைதியாக முடிந்தது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் விஜயகாந்த் பிரசார வாகனத்தின்மீது செருப்பு வீசப்பட்டது. பெரிய அளவில் வன்முறை எதுவும் இல்லை. இதே நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக வந்த புகாரையடுத்து தேர்தல் அதிகாரிகள் , ராமநாதபுரம் , வாடிப்பட்டி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி ரூ. 5 லட்சம் வரை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் பகுதியில் உள்ள தேனி மாவட்ட தி.மு.க., பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

கட்சி தலைவர்களின் பிரசாரம் : தி.மு.க., தலைவர் கருணாநிதி ( திருவாரூரிலும்) , அ.தி.மு.க., தலைவர் ஜெயலலிதா( சென்னையிலும்) , தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ( ரிஷிவந்தியத்திலும்),இந்திய கம்யூ., அகில இந்திய செயலாளர் டி. ராஜா (வத்திராயிருப்பிலும்) , மா.கம்யூ., மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ( திண்டுக்கல்லிலும் ) இன்று பிரசாரம் செய்து நிறைவு செய்தனர். உள்பட அனைத்து பெரிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி பிரசாரம் செய்தனர் சினிமா நடிகர்களுக்கு கட்சிகள் முக்கியத்துவம் அளிப்பதை காண முடிந்தது.


தேர்தல் கமிஷன், கடும் விதிமுறைகளை அமல்படுத்தியதால், தமிழகத்தில் எங்கும் பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கவில்லை. காதை கிழிக்கும் "லவுடு ஸ்பீக்கர்' சத்தம், சுவர்களை பாழாக்கும் போஸ்டர், சாலையை மறைக்கும் "பிளெக்ஸ்' போர்டு என எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை தேர்தல் நடக்கிறதா என்ற சந்தேகத்தை கிளப்பும் வகையில், பிரசாரம் அமைந்தது.


போட்டி: தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் தலா 234 தொகுதிகளிலும், பா.ஜ., கூட்டணி 207 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சென்னையில் உள்ள தொகுதிகளில் அதிபட்சமாக 274 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி, கடந்த மார்ச் 1ம் தேதி அறிவிக்கப்பட்டது. மனு தாக்கல் 19ம் தேதி துவங்கி, 30ம் தேதி வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. ஓட்டுப் பதிவு வரும் 13ம் தேதி நடக்கிறது.எனவே, இடைப்பட்ட 14 நாட்களில், தமிழகம் முழுவதும் கட்சியினர் பிரசாரம் செய்ய வேண்டியிருந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். இது தவிர, பிரதான இரண்டு கூட்டணிகளிலும் ஸ்டார் பிரசாரகர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது, இரு தரப்பிலுமே மாறி மாறி தனிப்பட்ட முறையில் விமர்சிக்கப்பட்டு, சேறு வாரி இறைக்கப்பட்டன. இதுவரை தேர்தல்களில் இல்லாத அளவு தனிப்பட்ட விமர்சனங்களை தி.மு.க., அணியினரும், அ.தி.மு.க., அணியினரும் மேற்கொண்டனர். தற்போது இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபடனர்.
இன்று மாலை 5 மணிக்கு பின்னர் கூட்டம் நடத்தியோ, மைக் மூலமாகவோ யாரும் பிரசாரம் செய்யக்கூடாது. எனினும், வீடு வீடாகச் சென்று அமைதியாக ஓட்டு சேகரிக்கலாம். தொகுதியில் வாக்காளராக இல்லாத எவரும் அந்த தொகுதிக்குள் இருக்கக்கூடாது. லாட்ஜ்கள், மண்டபங்கள் போன்றவற்றில் சம்பந்தமில்லாதவர்கள் தங்கி இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Sunday, April 10, 2011

எப்படி ஓட்டளிப்பது? உங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள்!




ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் தேர்தல். தேர்தலின் முக்கிய நடவடிக்கை ஓட்டளிப்பது. ஒவ்வொரு குடிமகனும், தவறாமல் இதில் பங்கேற்றால் உண்மையான ஜனநாயகம் தழைக்கும். ஓட்டளிப்பது நமது கடமை. எப்படி ஓட்டளிப்பது என்ற உங்கள் சந்தேகங்களை தீர்க்க இதோ...காலையில் செல்லுங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப் பதிவு நடைபெறும். ஆனாலும் உங்கள் ஓட்டை வேறு யாரும் போட்டுவிடாமல் இருக்க, முன்னதாகவே ஓட்டுச் சாவடிக்குச் செல்வது நல்லது. இதனால் கடைசி நேர காத்திருப்பை தவிர்க்கலாம்.வரிசையாக நிற்கவும்ஓட்டுச் சாவடியில் ஆண், பெண், மாற்றுத் திறனாளிகள், முதியோர் என தனித்தனி வரிசைகள் இருக்கும். உங்களுக்குரிய வரிசையை தேர்வு செய்து அதில் நிற்க வேண்டும்.
ஓட்டுச் சாவடிக்குள்1. ஒவ்வொரு வாக்காளராக ஓட்டு சாவடிக்குள் அனுமதிப்பர். 2. உள்ளே நுழைந்தவுடன், முதல் ஓட்டுப் பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில், உங்கள் பெயர் உள்ளதா, அப்பெயருக்குஉரியவர் நீங்களா என பரிசோதிப்பார். 3. வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டு சிலிப்பை அவரிடம் காண்பிக்க வேண்டும். அதன் பின், உங்கள் பெயரையும், வரிசை எண்ணையும் அவர் சொல்வார். இதன் மூலம் அந்த அறையில் உள்ள தேர்தல் முகவர்கள், உங்களை அறிந்து கொள்வர். 4. அடுத்து நீங்கள் 2வது அலுவலரிடம் செல்ல வேண்டும். அங்கு அவர் உங்கள் ஆட்காட்டி விரலில் அழிக்க முடியாத மையை தடவுவார். அதன்பின், வாக்காளர் பட்டியலில் உங்கள் வரிசை எண்ணை பதிவு செய்வார். 5. அதன்பின், அப்பதிவேட்டில் நீங்கள் கையெழுத்திட வேண்டும் அல்லது இடதுகை பெருவிரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். அவர் கையெழுத்து இடப்பட்ட அடையாள சீட்டை உங்களுக்குத் தருவார். 6. அடுத்து 3வது அலுவலரிடம் நீங்கள் செல்ல வேண்டும். அவர் 2வது அலுவலரால் வழங்கப்பட்ட அடையாளச் சீட்டை பெற்றுக் கொண்டு, கட்டுப்பாட்டு இயந்திரத்தின் பொத்தானை இயக்குவார். இப்போது நீங்கள் ஓட்டளிப்பதற்கான அனுமதியை பெற்றுவிட்டீர்கள் என்று பொருள்.ஒருகணம் சிந்தியுங்கள்7. அடுத்து ஓட்டுப் பதிவு இயந்திரம் உள்ள இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். ஒரு கணம், ஒரேஒரு கணம் ஆழ்ந்து சிந்தியுங்கள். இந்நாட்டை வழிநடத்திச் செல்லும் தகுதியுள்ள சரியான நபரை மனதிற்குள் தேர்ந்தெடுங்கள். முக்கியமாக உங்கள் மனசாட்சிப்படி, நீங்கள் நேர்மையாக நடக்க வேண்டும். அதன்படி உங்கள் மனதிற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு நேராக இருக்கும் நீலநிறப் பொத்தானை அழுத்துங்கள். "பீப்' ஒலி கேட்கும். அதேநேரம் உங்கள் வேட்பாளரின் சின்னத்திற்கு நேராக சிவப்பு ஒளி ஒளிரும். ஒருமுறை பொத்தானை அழுத்தினால் போதும். இப்போது உங்கள் ஓட்டு பதிவாகிவிட்டது நிச்சயம். இத்துடன் ஓட்டுச்சாவடிக்குள் உங்கள் பணி முடிந்து விட்டது. அங்கே நிற்க கூடாது.நீங்கள் யாருக்கு ஓட்டளித்தீர்கள் என்பது, உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

பூத் சிலிப்போட்டோவுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட அனைவருக்கும் ஓட்டு இருக்கும். மார்ச் 16ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்குக் கூட வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு தேர்தல் கமிஷன் அடையாள அட்டையை அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் தேர்தல் கமிஷனே, அடையாள சீட்டுகளை (பூத் சிலிப்) வீடுதோறும் வினியோகித்து வருகிறது. அடையாள சீட்டு உங்களைத் தேடி வந்தால் ஓட்டு உள்ளது என்று அர்த்தம். இல்லையெனில் ஓட்டுச் சாவடிக்குப் போய் உறுதி செய்து கொள்ளுங்கள்.ஓட்டளிக்க விரும்பாதோர்..நீங்கள் எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்றால், உங்கள் அதிருப்தியை பதிவு செய்யவும் சட்டம் அனுமதிக்கிறது. நீங்கள் ஓட்டளிக்க விரும்பாவிட்டால், உடனே அதை ஓட்டுச் சாவடி தலைமை அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். அவர் உங்களிடம் இருந்து ஓட்டுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு, இவர் ஓட்டளிக்க விரும்பவில்லை என தனியே ஒரு பதிவேட்டில் குறித்துக் கொள்வார். அதில் நீங்கள் கையெழுத்திட வேண்டும். இப்போது நீங்கள் "49 ஓ' போட்டுவீட்டீர்கள் என பொருள்.வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் கவலை வேண்டாம். தேர்தல் கமிஷன் வழங்கும் ஓட்டு சிலிப் உங்களிடம் இருந்தால் போதும். தாராளமாக ஓட்டளிக்கலாம். அதுவும் இல்லையெனில் நீங்கள் ஓட்டளிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டையும் இல்லை. தேர்தல் கமிஷனின் ஓட்டு சிலிப்பும் இல்லை என்றால், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றைக் காட்டி ஓட்டளிக்கலாம். ரேஷன் கார்டை ஏற்க மாட்டார்கள்.
ஓட்டுச்சாவடியில் சந்தேகம் எழுப்பினால்வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது. ஆனால் அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள் இல்லை என்று ஓட்டுச் சாவடியில் உள்ள யாராவது சந்தேகம் எழுப்பினால் என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், இப்படி சில ஆவணங்கள் மூலம் உங்கள் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் போலியானவர் என நிரூபிக்கப்பட்டால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் பெயரில் ஒருவர் வாக்களித்து இருந்தால் என்ன செய்வது? முதல் ஓட்டுப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என பரிசோதிப்பார். உங்கள் பெயரில் வேறு யாரேனும் ஓட்டுப் போட்டு இருந்தால் அதை உடனே ஓட்டுச் சாவடி தலைமை அலுவலரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்கு ஆராய்ச்சிக்குரிய ஓட்டுச் சீட்டு (டென்டர்ட் பேலட் பேப்பர்) அளிக்கப்படும். அதைப் பெற்றுக் கொண்டு, நீங்கள் கையெழுத்திட வேண்டும். நீங்கள் ஓட்டளித்ததும், அதை ஓர் உறையில் இட்டு தனியே வைத்துக் கொள்வர். இங்கு நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது...
நீங்கள் மின்னணு இயந்திரம் மூலம் ஓட்டளிக்க முடியாது என்பதுதான். புகார் தெரிவிக்க..மிரட்டுபவர்கள், பணம் கொடுக்க முற்படுவோர், பிரச்னை குறித்து யாரிடம் முறையிடுவது? போலீசாரிடம் கூறலாம். தொகுதி அளவில், ஓட்டுப்பதிவு அலுவலர், துணைத் தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர், மாநில தலைமை தேர்தல் அலுவலர்(044-2567 0390), தேர்தல் பார்வையாளர்களை அணுகலாம்.

Saturday, April 9, 2011

தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவது சவால்: முறைகேடுகளை தடுக்க குரேஷி தீவிரம்

புதுடில்லி: தேர்தலில் ஓட்டு பெறுவதற்காக அரசியல் கட்சிகள் செய்யும் முறைகேடுகளை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இத் தேர்தலை நடத்துவது எங்களுக்கு சவாலாகும் என்று அவர் தெரிவித்தார். தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. எப்போதும் இல்லாத வகையில் தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடுகள் இந்த முறை அதிகரித்துள்ளது. இதனால், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுகளை பெறும் முயற்சி கணிசமாக தடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் கடுமையாக பரிசோதிக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் எடுத்து செல்லப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடிகளால் வெறுத்துப் போன கட்சித் தலைவர்கள், தேர்தல் கமிஷனை விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுவதாக முதல்வர் கருணாநிதியும், தேர்தல் கமிஷன் அத்துமீறி செயல்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசும் குறை கூறிவருகின்றனர்.


இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: தேர்தல் கமிஷனின் புதிய நடைமுறைகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் விளக்கி விட்டோம். அந்த கூட்டத்தில் கூறப்பட்டவைகளைத் தான் தற்போது நடைமுறை படுத்தி வருகிறோம். புதிதாக நாங்கள் ஏதும் செய்து விடவில்லை. தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடக்க வேண்டும் என்பது தான் எங்களது இலக்கு. மக்கள் எதிர்பார்ப்பது போல இந்த தேர்தல் வெளிப்படையானதாக, சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டி வருகிறோம். குறிப்பாக தேர்தல் செலவீனம் குறித்து அதிக விழிப்போடு இருக்கிறோம். அதிகம் செலவழிக்கக்கூடாது என்பது மட்டுமல்ல, கணக்கில் வராத பணம் அதிகம் புழங்குவதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில இடங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாதது. தமிழகத்தில் மட்டுமல்ல, தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது.


அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது என நாங்கள் கண்டிப்புடன் இருப்பதால், ஆளும் கட்சியினருக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும். அரசியலமைப்பு சட்டப்படி நாங்கள் செயல்படுகிறோம்; வரம்பு மீறவில்லை. ஆனால், எங்களது இந்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர் பாராட்டுகின்றனர். எங்களது அதிரடி நடவடிக்கையால் 53 கோடி ரூபாய், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 42 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாங்கள், அரசியலமைப்பு சட்டப்படி எங்கள் அதிகார வரைமுறைக்குட்பட்டு தான் செயல்படுகிறோம். கட்டுப்பாடற்ற தேர்தல் தில்லுமுல்லுகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியாது. உண்மையாகவும், அக்கறையாகவும் எங்கள் கடமையை செய்வது தவறா? தமிழகத்தில் தேர்தலை நடத்துவது எங்களுக்கு சவாலாக உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாங்கள் கூறிய விதிமுறைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தான் செயல்படுத்தி வருகிறோம். எனவே, நாங்கள் தொல்லை கொடுப்பதாக அரசியல் தலைவர்கள் சொல்வதை ஏற்க முடியாது.


எங்களது நடவடிக்கைகளை பாராட்டி பொதுமக்கள் எங்களுக்கு தினமும் மொபைல் போனில் ஏராளமான எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பி ஊக்குவித்து வருகின்றனர். தமிழகத்தில் ஊடகங்கள் விஷயத்திலும் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் வற்புறுத்தி வருகின்றனர். இதையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். தமிழக தேர்தலில் பண ஆதிக்கம் செலுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மேற்கு வங்கத்தை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சவாலாகத் தான் உள்ளது. எனினும், அம்மாநில அரசு எங்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிக்கிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம். ஊழலை ஒழிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்த அன்னா ஹசாரே போன்றவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி அரசை வற்புறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. ஆனால், குற்றப் பின்னணி உள்ளவர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் சீர்திருத்த நடைமுறைகள் கொண்டுவர வலியுறுத்துகிறோம். அவை அமலானால், கிரிமினல்கள் மற்றும் ஊழல் புரிந்தவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. அத்துடன், தேர்தலுக்கு அரசு பணம் செலவழிக்கும் நடைமுறையும் வந்தால், இம்மாதிரி நபர்கள் அதிகாரப் பதவிகளுக்கே வரமுடியாது. இவ்வாறு குரேஷி கூறினார்.