Saturday, December 17, 2011

தமிழக - கேரள முதல்வர்கள் பேச வேண்டும்: அப்துல்கலாம் யோசனை

திருவனந்தபுரம்: "முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை, தமிழக - கேரள முதல்வர்கள் பேசி தீர்க்க வேண்டும்' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆலோசனை தெரிவித்தார்.

கேரளா தலைநகர் திருவனந்தபுரம் அருகே கழக்கூட்டம் பகுதியில், சைனிக் பள்ளியில் நடந்த விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ""முல்லை பெரியாறு அணை குறித்து இரு மாநில முதல்வர்களும் நேரில் பேசி, சுமுகமாக பிரச்னையை தீர்க்க வேண்டும். இரு முதல்வர்களும் பேசும் போது, அணையின் பாதுகாப்பு, செலவு, பயன்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்க வேண்டும். இரு மாநிலங்களுக்கும் இடைய பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் நல்லுறவு, அணை பிரச்னையால் பாதிக்கப்படக் கூடாது' என்றார். இந்நிலையில், காசர்கோட்டில் நேற்று காலை முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில், "கேரள அரசை பொறுத்தவரையில் எந்த ரகசிய செயல் திட்டமும் கிடையாது. எங்களிடம் உள்ள ஒரே திட்டம், பொதுமக்களின் பாதுகாப்பு தான்' என்றார்.

Friday, December 16, 2011

சோனியா வீடு முன் போராட்டம்: ஹசாரே எச்சரிக்கை

புதுடில்லி: "லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றவில்லை என்றால், அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.சோனியா, ராகுல் உள்ளிட்ட எம்.பி.,க்களின் வீடுகளின் முன், போராட்டம் நடத்துவோம்'என, காந்தியவாதி அன்னா ஹசாரே கூறினார்.

"லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும்' என, காந்தியவாதி அன்னா ஹசாரேயும், அவரது குழுவினரும் வலியுறுத்தி வருகின்றனர். இல்லையெனில், வரும் 27ம் தேதி முதல், டில்லி அல்லது மும்பையில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாகவும் ஹசாரே அறிவித்துள்ளார். இதற்கிடையே, லோக்பால் விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக, அனைத்துக் கட்சி கூட்டம், டில்லியில் நேற்று முன் தினம் நடந்தது. இதில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், லோக்பால் மசோதா, நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.நீட்டிக்க வேண்டும்


ஹசாரே உயர் மட்டக் குழுவின் கூட்டம், இரண்டாவது நாளாக நேற்றும் டில்லியில் நடந்தது. அப்போது, ஹசாரே கூறியதாவது: லோக்பால் மசோதா தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம், தோல்வி அடைந்தது குறித்து பிரச்னை இல்லை. பார்லிமென்டில் அனைத்து எம்.பி.,க்களும் உள்ளனர். அங்கு, மசோதா தாக்கல் செய்யப்படும் போது, அனைத்து எம்.பி.,க்களும், அதை ஆதரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. நடப்பு கூட்டத் தொடரிலேயே, மசோதா நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில், லோக்பால் மசோதா குறித்து விவாதிப்பதற்கு, தற்போதைய கூட்டத் தொடரில் போதிய நேரம் இல்லை. எனவே, குளிர்கால கூட்டத் தொடரின் நாட்களை நீட்டிக்க வேண்டும்.


சிறை நிரப்பும் போராட்டம்: நடப்பு கூட்டத் தொடரில் மசோதா நிறைவேற்றப் படாவிட்டால், முதல் கட்டமாக, வரும் 27ம் தேதி முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து சிறை நிரப்பும் போராட்டம் மேற்கொள்ளப்படும். சோனியா, ராகுல் உள்ளிட்ட எம்.பி.,க்களின் வீடுகளின் முன்னும், போராட்டம் நடத்தப்படும்.


மும்பையா, டில்லியா? வானிலை மாற்றம் காரணமாகவே, 27ம் தேதி நடக்கவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை, டில்லியிலிருந்து மும்பைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம். சாதகமான வானிலை நிலவினால், டில்லியிலேயே போராட்டத்தை மேற்கொள்வோம். இவ்வாறு, அன்னா ஹசாரே கூறினார்.


அரசு தரப்பும் உறுதி: பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியதாவது: நேற்று (நேற்று முன்தினம்) நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், 35 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இவை அனைத்தையும் தொகுத்து, ஒருமித்த கருத்து ஏற்படுத்த வேண்டும். இதனால், அரசின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. அரசின் கருத்தும், இதில் சேர்க்கப்பட வேண்டும். நடப்பு கூட்டத் தொடரிலேயே, லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு, அரசு கடும் முயற்சிகளை மேற்கொள்ளும். குளிர்காலக் கூட்டத் தொடர், இன்னும் ஒரு வாரம் மட்டுமே நடக்க இருப்பதால், இந்த காலக் கெடுவுக்குள் மசோதாவை நிறைவேற்ற முடியாது என கூற முடியாது. வரும் 20ம் தேதி லோக் சபாவிலும், 21ம் தேதி ராஜ்ய சபாவிலும், லோக்பால் குறித்து விவாதம் நடக்கலாம். கூடிய விரைவில், மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற, அரசு தரப்பில் முழு முயற்சி மேற்கெள்ளப்படும். இவ்வாறு பவன் குமார் பன்சால் கூறினார்.


கொறடா உத்தரவு: லோக்பால் மசோதா, அடுத்த வாரம் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால், "வரும் 19ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை, அனைத்து எம்.பி.,க்களும், கட்டாயம் பார்லிமென்ட்டிற்கு வருகை தர வேண்டும்' என, தன் எம்.பி.,க்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tuesday, December 13, 2011

அம்மாவை மீட்டுத் தரக் கோரி கலெக்டர் ஆபீஸ் வந்த குழந்தை

கோவை: காதல் கணவனையும், மூன்று வயது குழந்தையையும் பிரிந்து தலைமறைவானார் மனைவி; மீட்டுத்தருமாறு குழந்தையுடன் வந்து, கலெக்டரிடம் மனு கொடுத்தார், கணவன். அன்னூர் அருகே, ஓரைச்சல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதாசலம். இவரது மனைவி மகேஸ்வரி. வெவ்வெறு ஜாதியை சேர்ந்த இருவரும், 2007ம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு, மூன்று வயதில் யுவன் சாதிக் என்ற மகன் இருக்கிறான். மகேஸ்வரி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார். கடந்த நவ., 5ம் தேதி கல்லூரிக்கு படிக்க சென்ற மகேஸ்வரி, வீடு திரும்பவில்லை; தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அவருக்கு பெற்றோர் வேறு திருமணம் நடத்த முயற்சி செய்து வருவதாக மருதாசலம் கூறுகிறார். "கடந்த ஒரு மாதமாக தாயைப் பிரிந்த நிலையில், குழந்தை எந்நேரமும் அழுது கொண்டே இருக்கிறான். குழந்தையை காப்பாற்ற, வேலைக்கு செல்லக் கூட முடியாத நிலையில் உள்ளேன். மனைவியை மீட்டுத் தர வேண்டும்' என, மருதாசலம் குழந்தையுடன் வந்து, நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

மக்கள் குறைதீர்ப்பு முகாமில் அவர் அளித்த மனு: நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன். மனைவி உயர் ஜாதியை சார்ந்தவர். இதனால், எங்கள் திருமணத்தை மனைவியின் பெற்றோர் விரும்பவில்லை. அவரை, "நிலத்துக்கு கையெழுத்து போட வேண்டும்' எனக் கூறி, அழைத்து சென்றுவிட்டனர். அவர் படிக்கும் கல்லூரிக்கு சென்றபோது, கல்லூரி நிர்வாகமும் என்னை பார்க்க அனுமதிக்கவில்லை. மனைவியை மீட்டுத் தருமாறு, நவ.,14ல் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். போலீசார் கூறியும், அவர் வரவில்லை. அவரது பெற்றோர் என்னை மிரட்டுகின்றனர். என் மனைவிக்கு வேறு திருமணம் செய்து வைக்க, திட்டமிட்டுள்ளனர். எனக்கும், குழந்தைக்கும் தற்கொலையைத் தவிர வேறு வழி இல்லை. குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மனைவியை மீட்டுத் தர வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

Monday, December 12, 2011

பெரியாறு அணை: தமிழக உரிமையை பறிக்க முடியாது

உத்தமபாளையம்: பெரியாறு அணை மிகவும் உறுதியாக உள்ளது. அணையில் 999 ஆண்டிற்கான தமிழகத்தின் உரிமையை யாராலும் பறிக்க முடியாது, என, பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் தெரிவித்தார்.

பெரியாறு பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளான மாநில நீர் வள ஆதார அமைப்பின் முதன்மை தலைமை பொறியாளர் ராஜகோபால், மதுரை நீர் வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் சம்பத்குமார், மதுரை பெரியாறு வைகை வடிநில கண்காணிப்பு பொறியாளர் மோகன சுந்தரம் ஆகியோர் நேற்று பெரியாறு அணையை பார்வையிட வந்தனர். போராட்டங்களால் அங்கு செல்லமுடியவில்லை.பின்னர், உத்தமபாளையத்தில் முதன்மை தலைமை பொறியாளர் ராஜகோபால் நிருபர்களிடம் கூறியதாவது: முல்லை பெரியாறு குறித்து சுப்ரீம் கோர்ட், நிபுணர் குழு ஆணைப்படி அணையில் தொழில் நுட்ப பணிகள் நடப்பதை ஆய்வு செய்ய வந்துள்ளோம். பெரியாறு அணை மிகவும் பலமாக, உறுதியுடன் உள்ளது. நிலநடுக்கம், அணை உடையும் அபாயம் என கேரள அரசு பொய் பிரசாரம் செய்கிறது. நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்கவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதனால், அணையில் தமிழகத்திற்கான உரிமையை துளி அளவும் குறைக்க முடியாது.


அணையில் தமிழகத்திற்கான 999 ஆண்டு அனுபவ உரிமையை யாராலும் தடுக்க முடியாது. 999 ஆண்டுகளுக்கு தொடர்ந்து தமிழகம் தண்ணீர் பெறும். புதிய அணை கட்டுவது சாத்தியமில்லாதது. தங்கள் மக்களை திருப்தி படுத்தவே, கேரள அரசு இது போன்ற தீர்மானங்களையும், பொய் பிரசாரத்தையும் செய்து வருகிறது. அணையில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு, பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அணையில் தமிழகத்திற்கான பாதுகாப்பு, தற்போது செய்ய வேண்டிய தொழில் நுட்ப பணிகள், நிபுணர் குழுவின் ஆணை உள்ளிட்டவைகள் குறித்து அமைச்சர் பன்னீர் செல்வத்தை உத்தமபாளைத்தில் சந்தித்து எடுத்துக் கூறியுள்ளோம். மாவட்ட அளவில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து, அவர்களை தைரியப்படுத்தி, போதிய பாதுகாப்பு அளிக்க உறுதி கூறியுள்ளோம். அணையில் பராமரிப்பு பணியில் இருக்கும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு இடுக்கி கலெக்டரிடம் பேசி போதிய பாதுகாப்பு கொடுத்து உள்ளோம், என்றார்.

Saturday, December 10, 2011

தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு விஜயகாந்த் எச்சரிக்கை

தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகள் மேற்கொள்ளும் கான்ட்ராக்டர்களிடம் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கமிஷன் வாங்கக் கூடாது. கமிஷன் வாங்குவது தெரிந்தால், அவர்களை கட்சியை விட்டு நீக்கி விடுவேன் என விஜயகாந்த் எச்சரித்துள்ளதால், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சமீபத்தில் தனது ரிஷிவந்தியம் தொகுதிக்கு சென்ற விஜயகாந்த், தனது எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இந்தாண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, ஆலோசனை நடத்தினார். எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை முடிவு செய்தார். இது குறித்த விவரங்களை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து சென்னை திரும்பினார். இதே போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு கட்சியின் 28 எம்.எல்.ஏ.,க்களுக்கு, விஜயகாந்த் உத்தரவு பிறப்பித்தார். விஜயகாந்தின் உத்தரவையடுத்து தொகுதிக்கு சென்ற எம்.எல்.ஏ.,க்கள், அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த விவரங்களை சேகரித்தனர். இந்நிலையில், சில கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதிகளில் ஒவ்வொரு பணிகளையும் மேற்கொள்ள 20 சதவீத கமிஷன் கேட்பதாக தகவல் வெளியானது. இது குறித்து அறிந்த விஜயகாந்த் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் தனித்தனியாக சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். தொகுதி மேம்பாட்டு நிதியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பது குறித்த விவரங்களை எழுதிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களும் தொகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்த விவரங்களை எழுதிக் கொடுத்தனர். அப்போது விஜயகாந்த், மழையால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகள், தரைப்பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள் ஆகிய பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்படி எம்.எல்.ஏ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


அதிக முக்கியத்துவம், முக்கியத்துவம் என, இரண்டு வகையாகப் பிரித்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு எம்.எல்.ஏ.,க்களிடம் விஜயகாந்த் ஆலோசனை வழங்கியுள்ளார். இதில் அதிக முக்கியத்துவம் பெற்ற பணிகளை இந்தாண்டு நிதியிலும், முக்கியத்துவம் என கருதப்படும் பணிகளை அடுத்தாண்டு நிதியிலும் மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார். மேலும் எம்.எல்.ஏ.,க்களிடம் விஜயகாந்த், "தொகுதி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் யாரும் கமிஷன் பெறக்கூடாது. கமிஷன் பெற்றதாக தகவல் கிடைத்தால், அவர்களை கட்சியை விட்டே தூக்கிவிடுவேன். எதிர்க்கட்சித் தலைவர் பதவி எனக்கு எதிர்பாராமல் கிடைத்தது தான். அதனால், அந்த பதவி இருந்தாலும், போனாலும் எனக்கு கவலையில்லை. கட்சியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மக்கள் நமக்கு கொடுத்த பணியை திருப்திகரமாக செய்து முடிக்கவேண்டும்' என, எச்சரித்து அனுப்பியுள்ளார். விஜயகாந்தின் இந்த அதிரடி நடவடிக்கையால், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் பீதியில் உறைந்துள்ளனர்.