Sunday, April 3, 2011

"ஸ்பெக்ட்ரம்' ராஜா, "ஜாமீன்' மனு செய்யாதது ஏன்? திடுக்கிடும் பின்னணி தகவல்கள்


"நான் தவறே செய்யலை... நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்என, பேட்டிக்குப் பேட்டி,"டயலாக்' விட்ட முன்னாள் அமைச்சர் ராஜா, "ஸ்பெக்ட்ரம்' புயலில் சிக்கி சின்னாபின்னமாகி, 52 நாட்களுக்கும் மேலாக டில்லி திகார் ஜெயிலில் உள்ளார். தேர்தலில் தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டிய அவரைப் பற்றி, இன்று எதிர்க்கட்சிகள் வீதிக்கு வீதி பேசி, ஆளுங்கட்சிக்கு அனலை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

சின்ன வழக்காக இருந்தாலும், முன் ஜாமீனுக்காக முன்கூட்டியே கோர்ட் படிக்கட்டுகளை ஏறுவார்கள் அரசியல்வாதிகள். ஆனால், சி.பி.ஐ., வலையில் சிக்கி திணறிக்கொண்டிருக்கும் ராஜா, இதுவரை ஜாமீன் பெற முயற்சிக்காதது ஏன்?



"ஸ்பெக்ட்ரம்' ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பிப்., 2ம் தேதி ராஜாவை சி.பி.ஐ., கைது செய்தது. அவரது, தனிச் செயலராகப் பணியாற்றிய ஆர்.கே.சந்தாலியா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா ஆகியோரையும் சி.பி.ஐ., கைது செய்தது. கைதான பின், பல முறை சி.பி.ஐ., விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின், டில்லி திகார் சிறையில் ராஜா அடைக்கப்பட்டார். சிறையில் 50 நாட்களுக்கும் மேலாக வாடிக்கொண்டிருக்கும் ராஜா, இதுவரை ஜாமீன் பெற முயற்சிக்கவில்லை.கட்சித் தலைமை உத்தரவிட்டதன் பேரில் தான், ராஜா அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.


இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறும்போது,"குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபின், ஜாமீன் கோரி மனு செய்ய ராஜா திட்டமிட்டுள்ளார். இதற்கு முன் ஜாமீன் பெற்றால், தேவையற்ற விமர்சனங்கள் வரும்' என்றனர்.


ஆனால், ராஜா ஜாமீன் மனு செய்யாததற்கு வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஜாமீன் கேட்டு ராஜா மனு செய்து, அம்மனு மீது வழக்கு நடைபெற்றால், பல்வேறு கேள்விகள் பூதம்போல் எழும்பும். குறிப்பாக, "வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார், யார்? அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதா? அவர்கள் கைது செய்யப்படவேண்டியவர்களா? அவர்களுக்கும், ராஜாவுக்கும் உள்ள தொடர்புகள் என்னென்ன?' போன்ற சரமாரியாக கேள்விகள் வந்து விழும்.இதற்கு, ராஜா கட்டாயம் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி, பதிலளித்தால், அதையொட்டி, கோர்ட் புதிய உத்தரவுகளை வெளியிட நேரிடும். அதுபோன்று ஒரு நிலை ஏற்பட்டால், ஆளுங்கட்சியில் மிகப்பெரிய சூறாவளி ஏற்பட்டுவிடும் என்று முன்கூட்டியே தெரிந்து தான், ஜாமீன் கேட்காமல் ராஜா அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.


மேலும், கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழி ஆகியோரை சி.பி.ஐ., விசாரித்துள்ளது. இந்நிலையில், ராஜா ஜாமீன் கோரி மனு செய்தால், அதுதொடர்பான விசாரணையில், இவர்களது பெயர்களையும் இழுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிடும் என்பதும், ராஜாவின் மவுனத்திற்கு ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. "தேர்தல் நடைபெறும் போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக எழும் விவாதங்கள் அவசியமற்றது' என்று தி.மு.க., தலைமை கருதுவதால், ராஜாவை அமைதி காக்குமாறு உத்தரவிட்டுள்ளது.