இந்நிலையில், தற்போது ராகுலும், "கூட்டணி ஆட்சியே காரணம்' என, தெரிவித்துள்ளது தேசியவாத காங்கிரஸ் கட்சியை எரிச்சல் அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் தாரிக் அன்வர் கடுமையாக கூறியதாவது: விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாததற்கு, விவசாய அமைச்சர் சரத் பவாரை மட்டும் குறை சொல்வது சரியாக இருக்காது. அப்படிச் சொன்னால் அது அநீதியாகும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது, ஒட்டுமொத்த அரசின் பொறுப்பு. அதனால், ராகுலின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை.பீகார் தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் எங்கு உள்ளது என்பதையும், அந்தக் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது நடப்பது கூட்டணி ஆட்சிக்காலம். கூட்டணி அரசுகளை நாம்புறக்கணிக்கக் கூடாது. இவ்வாறு தாரிக் அன்வர் கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பொதுச் செயலரும், அக்கட்சியின் தகவல் தொடர்பாளருமான திரிபாதி கூறியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் காங்கிரசே முதன்மையான கட்சி. அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவரின் கருத்து, தாழ்வு மனப்பான்மையை பிரதிபலிக்கிறது. ராகுலின் கருத்து துரதிருஷ்டவசமானது. பவார் உட்பட, எந்த ஒரு தனி அமைச்சரும் விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருக்க முடியாது, அதற்கு பொறுப்பாகவும் முடியாது. நான் எப்போதும் ராகுலை பாராட்டுபவன், அரசியலில் அவர் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துபவன். அவர் தெரிவித்துள்ள கருத்து உண்மையின் அடிப்படையிலானது அல்ல. உணவு மற்றும் விவசாயத் துறையை கவனிக்கும் சரத் பவாரை, பிரதமர் மன்மோகன் சிங்கே பாராட்டியுள்ளார். தனிக்கட்சி ஆட்சி என்பதற்கு இனி வாய்ப்பே இல்லை. இவ்வாறு திரிபாதி கூறினார். இப்பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த காங்., தகவல் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, "ராகுல் பேசியது யாரையும் குறை கூறும் நோக்கில் இல்லை; பொதுவாகத்தான் பேசினார்' என்றார். ஆனால், கூட்டணி அரசியல் பற்றி தெரியாமல், ஏதோ பேசுகிறார் ராகுல் என, பா.ஜ., கருத்து தெரிவித்தது.