Wednesday, January 26, 2011

போலீசாரை வசைபாடிய அமைச்சர்: அரசியல் கட்சியினரை சாடிய எஸ்.பி.,

"தி.மு.க.,வினர் மீது பழி போடுவதற்காக, மாணவர்களை சிலர் தூண்டி விடுகின்றனர். போலீசாரும் இதை கண்டும் காணாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது' என்ற, அமைச்சரின் பேச்சும், "சிங்கமே, சிறுத்தையே என, பேனர் வைக்கும் அரசியல் கட்சியினர், ரகளையில் ஈடுபடுவதும், அவர்களை நாங்கள் தண்டிப்பதுமாக உள்ளது' என, அரசியல் கட்சியினரை, எஸ்.பி., பேசியதும், சேலம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் நேற்று முன்தினம் தீயணைப்பு நிலைய திறப்பு விழா நடந்தது. வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திறந்து வைத்தார். அவர் விழா மேடைக்கு சென்று கொண்டிருந்தபோது, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வடசென்னிமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், அமைச்சர் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கல்லூரியில், தொகுப்பூதியத்தில், பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் கோரி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவதால், தங்களது படிப்பு பாதிப்பதாகவும், அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு வலியுறுத்தினர். பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார், மாணவர்களை விரட்டியபோதும், சில மாணவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை தொடர்பாக காரசாரமாக முறையிட்டனர். அவர்களின் பேச்சால் ஆவேசமான அமைச்சர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அந்த கோபத்தை, அடுத்து நடந்த விழா மேடையில், போலீசார் மீது காட்டினார் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

பின்னர், கெங்கவல்லி விழாவில் பேசிய அமைச்சர், "மாணவர்களை ஆசிரியர்கள் தூண்டி விடுகின்றனர்; போலீசாரும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது, எனக்கு வருத்தத்தை அளிக்கிறது' என்றார்.

இந்நிலையில், நேற்று சேலம் நேரு கலையரங்கில், தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது.

அதில், சேலம் மாவட்ட எஸ்.பி., ஜான்நிக்கல்சன் பேசியதாவது:நான் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்... இங்கு கூடிய கூட்டம், கலெக்டருக்காக வந்த கூட்டம். மாநாடு, பொதுக்கூட்டம் எல்லாம் அரசியல் கட்சியினர் நடத்துகின்றனர். "சிங்கமே வா, சிறுத்தையே வா' என, பேனர் வைக்கின்றனர்; அதையும் கிழிக்கின்றனர். கூட்டம் முடிந்து போகும் வழியில் பஸ் கண்ணாடியை உடைக்கின்றனர். இப்போது நடக்கும் இந்தக் கூட்டம் மனித நேயமிக்க கூட்டம்; மனிதனாக வா, மனிதனாக போ.இவ்வாறு ஜான்நிக்கல்சன் பேசினார்.

அரசியல் கட்சியினரை தாக்கி அதிரடியாக, எஸ்.பி.. பேசுகிறாரே என கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அண்மையில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில், அக்கட்சி தொண்டர்கள் சிலர் போலீசாரிடம் கடுமையாக நடந்து கொண்டனர். அமைச்சர் ஆதரவாளரும், "சேலத்து சிங்கம்' என, பேனர், கட் அவுட் வைத்து, அவ்வப்போது போலீசாருடன் மோதல் போக்கை மேற்கொள்கின்றனர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே எஸ்.பி., பேசியதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இது குறித்து எஸ்.பி., ஜான்நிக்கல்சனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: அய்யய்யோ, யாரையும் நான் தாக்கி பேசவில்லை; சின்ன வயதில் இருந்தே விழாக்களில் நன்றாக பேசுவேன். மாணவர்கள் கலந்து கொண்டதால், அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக, மனிதனாக வா, மனிதனாக போ என, அறிவுரை வழங்கும் வகையில் பேசினேன். மற்றபடி யாரையும் நான் குறை கூறவில்லை. பிரச்னைகளில் மாட்டி விடாதீர்கள்.இவ்வாறு ஜான்நிக்கல்சன் கூறினார்.

திடீரென போலீசாரை அமைச்சர் கண்டித்து பேசியதும், அடுத்த நாளே, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மாவட்ட போலீஸ் எஸ்.பி., "சிங்கமே, சிறுத்தையே' என, பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.