Monday, March 7, 2011

ரகசிய உறவு...! 81 பேர் கொலை: அதிரும் குடும்பங்கள்

மாறி வரும் சமூக, பொருளாதாரச் சூழல்; தனி மனித ஒழுங்குணர்வு குறைவு; எல்லை மீறும் காமம் உள்ளிட்ட காரணங்களால் "குடும்ப அமைப்பின்' ஆணிவேர் மெல்ல, மெல்ல ஆட்டம் கண்டுவருகிறது. கணவன் - மனைவி என்ற புனித உறவைத் தாண்டிய கள்ள உறவுகள் பெரும்பாலும் கொலை, தற்கொலையில் முடிகின்றன. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்குள் கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் 371 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், கள்ள உறவால் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 81.


மாற்றானுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவங்களும், தனது கள்ள உறவை கணவன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மனைவி, காதலுடன் சேர்ந்து கணவனையே தீர்த்துக்கட்டிய சம்பவங்களும் அதிகம் நிகழ்ந்துள்ளன; சில கொலைகள், சந்தேகம் காரணமாகவும் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற கொலை வழக்குகளில் புலன்விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வது போலீசுக்கு பெரும் தலைவலி ஏற்படுத்துகின்றன. கொலைக்குப்பின் தலைமறைவாகும் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் பணி நேரத்தை அதிகம் செலவிட வேண்டியிருக்கிறது. திருட்டு, வழிப்பறி, கொள்ளை, ஆதாயக்கொலை வழக்குகளில் புலன்விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து, திருட்டுச் சொத்துக்களை கைப்பற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக நிவாரணம் வழங்க வேண்டிய நிர்பந்தத்திலுள்ள போலீசார், கள்ள உறவு கொலைகள் அதிகரிப்பால் பணி நெருக்கடிக்கு உள்ளாகி விழிபிதுங்கி நிற்கின்றனர். திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைக்கூட, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி போலீசாரால் கட்டுப்படுத்திவிட முடியும். ஆனால், கள்ள உறவு கொலைகள் தனி நபர்களின் ஒழுங்குணர்வு சார்ந்தது என்பதால், கட்டுப்படுத்துவது எப்படி? எனத்தெரியாமல் திணறுகின்றனர்.


கொலை அதிகரிக்க காரணம் என்ன: கள்ள உறவு தொடர்பான பிரச்னைகள் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் பிரதிபலிக்கின்றன. எனினும், இப்பிரச்னையை சரியானபடி எதிர்கொள்வது அல்லது சமாளிப்பது எப்படி? என்பது தொடர்பான விழிப்புணர்வு மிக குறைவாக இருக்கும் குடும்பங்களிலேயே ஆவேச கொலைகள் அதிகளவில் நிகழ்கின்றன. குறிப்பாக கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் கள்ள உறவு கொலைகள் அதிகம் நடப்பதாக தமிழக மேற்கு மண்டல போலீசாரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த கணவனோ அல்லது மனைவியோ பிறருடன் கள்ள உறவு வைத்திருப்பது தெரியவந்தால் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் துணைக்கு மனோ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அப்பிரச்னையை எதிர்கொள்ள தெரிவதில்லை. ஆக்ரோஷத்தில் வாக்குவாதம் முற்றி துணையை கொலை செய்து விடுகின்றனர்.இவ்வாறான துயர சம்பவங்களில் மனைவியை கொலை செய்த கணவனோ அல்லது கணவனை கொலை செய்த மனைவியோ கைதாகி சிறையில் அடைபட நேரிடும்போது, பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டு விடுகிறது. பெற்றோரை இழந்த பிள்ளைகள் கல்வி பயிலும் வாய்ப்பை இழந்து தவறான நபர்களின் சேர்க்கையினால் சமூகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதுவே, பெண் பிள்ளைகளாக இருப்பின், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகி வாழ்க்கை பாழாகிவிடுகிறது.எனவே, கள்ள உறவு கொலைகளை தடுப்பது அல்லது தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.,அலுவலகம், டி.ஐ.ஜி.,க்கள் மற்றும் எஸ்.பி.,க்களின் கருத்துக்களை கேட்டது. பலரும், இவ்விவகாரம், தனி நபர் ஒழுக்கம் சார்ந்தது என்பதால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சிறந்த வழி என தெரிவித்துள்ளனர்.


வாழ்க்கை சீரழியும்!கோவை பெண் வக்கீல்கள் சங்க தலைவி தேன்மொழி கூறியதாவது: திருமண வாழ்க்கை பந்தம் முழுக்க, முழுக்க நம்பிக்கை அடிப்படையிலானது. தம்பதியர் தங்களது துணை மீது முழு நம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே இல்லற வாழ்வை இனிமையாக தொடர முடியும். கணவனோ அல்லது மனைவியோ வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பது தெரிந்ததும், அமைதியான வாழ்வில் புயல் ஆரம்பிக்கும்; ஆவேசத்தில் கொலையும் நிகழும். இதுபோன்ற சமயங்களில் உணர்ச்சிக்கு ஆட்பட்டு எவ்வித குற்றத்திலும் ஈடுபடத் தேவையில்லை. கள்ள உறவை காரணமாக கூறி கோர்ட்டில் விவகாரத்து பெற முடியும். சட்ட ரீதியான நிவாரணத்தை தேடும் போது, குழந்தைகளின் எதிர்காலம் இருண்டுவிடாமல் தடுக்க முடியும். "ஒருவனுக்கு ஒருத்தி' என்ற "மந்திரம்' மட்டுமே வாழ்க்கையை வளமுள்ளதாக்கும். ரகசியமான கள்ள உறவுகள் என்றேனும் ஓர்நாள் அம்பலமாகும் போது, வாழ்க்கை நிச்சயம் சீரழிந்துவிடும்.இவ்வாறு, தேன்மொழி தெரிவித்தார்.


கோவை நகரில் 5 பேர் கொலை! கோவை மாநகர போலீஸ் எல்லைக்குள் கடந்த ஆண்டில் 20 கொலைகள் நிகழ்ந் துள்ளன; இவற்றில் ஐந்து கொலைகள் கள்ள உறவு மற்றும் பாலியல் தொடர்பானவை. செல்வபுரம் போலீஸ் எல்லைக்குள் நடந்த ஒரு கொலைச் சம்பவம், போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்தது. மனைவியை இழந்த கூலித்தொழிலாளி, தனது மகனுடன் வசித்து வந்தார்.பின்னாளில், இரண்டாம் திருமணம் செய்து அப்பெண்ணுடன் வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தார். இந்நிலையில், "சித்தி' உறவு முறையிலான அந்த பெண்ணுடன், கூலித்தொழிலாளியின் மகன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த தந்தை, தனது மகனை கொலை செய்தார். இதேபோன்று, கள்ள உறவு தொடர்பான மேலும் நான்கு கொலைகளும் நகர எல்லைக்குள் நடந்துள்ளன. அதாவது, கடந்த ஆண்டில் நிகழ்ந்த 20 கொலைகளில், ஐந்து கொலைகள் கள்ள உறவால் நிகழ்ந்துள்ளன.


"ஒழுக்கம் சார்ந்த வாழ்வு குறித்த விழிப்புணர்வு அவசியம்' கோவை மாநகர போலீஸ் தெற்குப்பகுதி சட்டம் - ஒழுங்கு உதவிக்கமிஷனர் பாலாஜிசரவணன் கூறியதாவது:கள்ள உறவு கொலைகள் அதிகரிக்க சமூகத்தில் பல்வேறு காரணிகள் உள்ளன. சினிமா, "டிவி', இன்டர்நெட் மற்றும் ஊடகங்களும் ஒரு காரணம். வெகுஜன தொடர்பு சாதனங்கள் நல்ல பல விஷயங் களை மக்களுக்கு காட் சிப்படுத்தும் போதிலும், பாலுணர்வை தூண்டக்கூடிய ஆபாச காட்சிகளையும் முன்னிலைப்படுத்துகின்றன. சினிமா, இன்டர்நெட் போன்றவற்றில் ஆபாச காட்சிகளை ரசிப்போர், அதற்கான வடிகாலை தேட துவங்குகின்றனர்.காட்சியை ரசிப்பவர் மணமானவராக இருப்பின் தமது துணையுடன், உணர்வை பகிர்ந்துகொள்கிறார். மணமாகாதவராக இருப்பின் கள்ள உறவு போன்ற ஒழுக்கம் தவறிய செயல்களில் ஈடுபட துணிகின்றனர். ஒருவர், தமது விருப்பம், ஆசையை நிறைவேற்றிக்கொள்வதும் கூட சமூகத்தின் கட்டுப்பாட்டுக்குள்தான் நடக்க வேண்டும். கட்டுப்பாட்டை மீறும்போது கள்ள உறவு ஏற்படுகிறது; அது அம்பலமாகும் போது கொலை நிகழ்கிறது. நவீன காட்சி ஊடகங்கள் மலிந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் பாலுணர்வு தூண்டலுக்கான வாய்ப்புகள் பரவிக்கிடக்கின்றன. இதனால், இளைய தலைமுறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெற்றோர், தங்களது பிள்ளைகள் மீதான கவனத்தையும், கண்காணிப்பையும் இன்னும் தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தனி மனித ஒழுக்கம், சமூக பொறுப்பு, கடமைகள் குறித்து இன்றைய இளைய தலைமுறையினருக்கு குடும்பங்களில் எடுத்துரைப்பது வெகுவாக குறைந்துவிட்டது; இந்நிலை அடியோடு மாற வேண்டும். இளைய தலைமுறையினர் மத்தியில் ஒழுக்க வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால், எதிர்காலங்களில் இதுபோன்ற கள்ள உறவு சார்ந்த குற்றங்களை வெகுவாக குறைத்துவிட முடியும். இவ்வாறு, பாலாஜிசரவணன் தெரிவித்தார்.


ஐ.ஜி.,சிவனாண்டி கூறியதாவது: கள்ள உறவு கொலைகள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இது, முற்றிலும் தனி மனித ஒழுக்க குறைபாட்டால் நிகழ்கிறது. கள்ள உறவு பிரச்னைகள் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் உள்ளன. போதிய கல்வியறிவு உடையோர், இப்பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்கின்றனர். தமக்கு துரோகமிழைத்த துணையை கொலை செய்யும் அளவுக்கு உணர்ச்சி வசப்படுவதில்லை. அவ்வாறு செய்தால், தங்களது குழந்தைகளின் வாழ்க்கை பாழாகிவிடும் என்ற முன்னெச்சரிக்கை அவர்களிடம் மேலிடுகிறது. இதனால், தங்களது மணவாழ்க்கையை சட்ட ரீதியாக முறித்துக்கொள்கின்றனர். அதேவேளையில், போதிய கல்வியறிவு பெற்றிராத குடும்பங்களில் கள்ள உறவு பிரச்னை எழும்போது, எதிர்விளைவுகளை உணர்ந்து சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் விழிப்புணர்வு பெற்றிருப்பதில்லை. துணையை கொன்றுவிடும் அளவுக்கு ஆத்திரம் மேலோங்குகிறது. சில நேரங்களில், ஏதுமறியா குழந்தைகளையும் ஈவு, இரக்கமின்றி கொன்று விடுகின்றனர். தங்களது வாழ்க்கை துணை தாம்பத்ய உறவுக்கு துரோகம் செய்துவிட்டதாக தெரிந்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ கொலை செய்யும் அளவுக்கு துணிய வேண்டியதில்லை. இப்பிரச்னையை முன்னெச்சரிக்கையுடன் கையாண்டால் மட்டுமே, பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகாமல் தவிர்க்க முடியும். இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் செயல்படும் தற்கொலை தடுப்பு மையத்தை 99440 95555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்; தகுந்த ஆலோசனை வழங்கப்படும். சட்ட உதவி தேவைப்பட்டால் அதற்கும் உதவ தயாராக உள்ளோம்.இவ்வாறு, ஐ.ஜி., சிவனாண்டி தெரிவித்தார்.


போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறுகையில், ""கள்ள உறவு தொடர்பான கொலைகள் திட்டமிட்டும், சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு ஆவேசத்திலும் நடக்கின்றன. கொலையால் ஏற்படப்போகும் சட்ட ரீதியான பின்விளைவுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலேயே பெரும்பாலான கொலைகள் நடக்கின்றன,'' என்றார்.



45 பேர் தற்கொலை : கள்ள உறவால் கொலைகள் மட்டுமல்ல; தற்கொலைகளும் அதிகம் நிகழ்கின்றன. கடந்த 2010ம் ஆண்டில், தமிழக மேற்கு மண்டத்தில் கள்ள உறவு காரணமாக 45 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பெரும்பாலான வழக்குகளில் தற்கொலைக்கான காரணத்தை குடும்ப உறுப்பினர்கள் வெளிப்படையாக தெரிவிக்காததால், உண்மை நிலவரம் போலீசாருக்கு தெரிவதில்லை. வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக பலரும் தெரிவித்து விடுகின்றனர்; இவ்வாறாக, தமிழக மேற்கு மண்டலத்தில் கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் 293 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

நன்றி


தினமலர்