Saturday, March 5, 2011

கேட்டதெல்லாம் கொடுக்க வேண்டுமா ? காங்., உறவு குறித்து தி.மு.க., கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு

சென்னை : தி.முக., - காங்கிரஸ் இடையிலான 7 ஆண்டுகால கூட்டணி நட்புறவு இன்று முறிந்து விடுமோ என்ற யூகங்கள் கிளம்பியிருக்கிறது. இதற்கிடையில் தி.மு.க.,வுக்கு கூட்டணி அடிப்படையில் நெருக்கடி கொடுக்கும் காங்கிரசை தவிர்த்து தனித்து தேர்தலை சந்திக்கலாம் என தி.க., பொதுசெயலர் கி.வீரமணி தி.மு.க.,வுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தஞ்சையில் நிருபர்களிடம் பேசிய வீரமணி மக்க்ள் செல்வாக்கு தி.மு.க.,வுக்கு உள்ளது. எனவே தேர்தலில் பல்ல வெற்றி வாய்ப்பு இருப்பதால் தி.மு.க. காங்கிரஸ் நிபந்‌தனைக்கு உடன்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இவர் மேலும் கூறுகையில்; தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் சிறி கட்சிகள் எல்லாம் முடிவு செய்து விட்ட பின்னர் காங்., கட்சி இன்னும் முடிவு செய்ய இயலாமல் இருப்பது ஏன்? கூட்டணி நெறிமுறைகளுக்கு மாறாக தொகுதிகளை தாங்களே நிர்ணயம் செய்வோம் என்ற நிபந்தனை ஏற்க கூடியதல்ல. இதனை கருணாநிதி எழுப்பியுள்ள கேள்வி 100 க்கு 100 சரியானது என நடுநிலையாளர்கள் கருத வேண்டியுள்ளது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை விவரம் : ""காங்கிரஸ் கட்சியினர் 63 இடங்கள் கேட்கின்றனர். அதுவும் அவர்கள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இது குறித்து இன்று நடக்கவுள்ள தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட குழுவில் விவாதித்து உரிய முடிவு எடுக்கப்படும்,'' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை: சட்டசபை தேர்தலுக்காக மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பணியில் தி.முக., ஈடுபட்டது.சோனியாவை நான் டில்லியில் சந்தித்த பின், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என, அறிவித்தேன். காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வந்த போது, 2006ம் ஆண்டு தேர்தலில், போட்டியிட்ட விவரங்கள் தி.மு.க., சார்பில் எடுத்துக் கூறப்பட்டது.

தி.மு.க., - காங்கிரஸ் - பா.ம.க., மீண்டும் உறவு கொண்டுள்ள நிலையில், அந்த கட்சிகள் போட்டியிட்ட இடங்களைத் தவிர்த்து, எஞ்சியுள்ள மார்க்சிஸ்ட் கமயூ., இந்திய கம்யூ., போட்டியிட்ட 23 இடங்களை புதிதாக சேர்த்துள்ள விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் போக, மீதமுள்ள இடங்களை தி.மு.க., - காங்கிரஸ் பகிர்ந்து கொள்ளலாம் என பேசப்பட்டது.

அவ்வாறு கணக்கிட்ட போது, காங்கிரஸ் கட்சிக்கு 51 இடங்கள் வந்தன. அந்த இடங்களை அதிகமாக்க வேண்டும் என்ற காரணத்தால், 51 இடங்கள் 53 என்றாகி பின், 55 என்றாகி, 58 என்றாகி கடைசியாக 60 இடங்கள் என்று குலாம் நபி ஆசாத் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதை மேலிடத்தில் தெரிவித்து விட்டு உறுதி செய்வதாகக் கூறினார். ஆனால், அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வராததோடு, இன்று (நேற்று) இரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 63 சீட்கள் ஒதுக்க வேண்டும் என்றும், கேட்கும் தொகுதிகள் அனைத்தையும் தரவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

காங்கிரசிற்கு 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் கேட்பதும், அவர்கள் கேட்கும் இடங்களையெல்லாம் கொடுக்க வேண்டும் என கேட்பதும் முறைதானா என்பதை, அந்த கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். இது குறித்து இன்று மாலையில் நடக்கவுள்ள தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட குழுவில் உரிய முடிவு எடுக்கப்படும்.

சோனியா தலையிடுவாரா ? கருணாநிதி இவ்வாறு கூறியதையடுத்து காங்., மேலிடம் என்ன செய்வெதன தெரியாமல் திகைத்து போய் இருக்கிறது. இந்த விவகாரத்தில் சோனியா , பிரணாப் தலையிட்டு பிரச்னைக்கு முடிவு காண முயற்சி மேற்கொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி வீட்டில் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், மற்றும் மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையில் தி.மு.க., பார்லி., குழு தலைவர் டி.ஆர்.பாலு டில்லிக்கு சென்று தொகுதி உடன்பாட்டில் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகுவோம் என கூறுவார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

நன்றி

தினமலர்