
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய புள்ளியாக இருந்தாலும் அரசு பாரபட்சமோ தயக்கமோ காட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பு காட்டியதையடுத்து, சிபிஐயின் விசாரணை வளையம் பெரிதாகிக் கொண்டே வருகிறது.
இதன் ஒரு கட்டமாக நேற்று பாஜக அரசில் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த அருண் ஷோரியை பிப்ரவர் 21-ம் தேதி விசாரணைக்கு வருமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. முதலில் வருபவர்களுக்கே உரிமம் தருவதில் முன்னுரிமை என்பு 'புரட்சிகர' தொலைத் தொடர்புக் கொள்கையை வகுத்து பெரும் கொள்ளைக்கு வழிவகுத்தவர் இவரே என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு (உலகிலேயே Disinvestment என்ற பெயரில் ஒரு துறையை முதல்முறையாக உருவாக்கியது பாஜக அரசு. அதற்கு மந்திரியாகவும் இருந்தவர் இந்த அருண்ஷோரிதான்!)
இப்போது, 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி ஆதாயம் பெற்றவர்கள், அப்படிப் பெறுவதற்காக பெரும் தொகையை லஞ்சமாகத் தந்தவர்கள் மீதும் சிபிஐயின் பிடி இறுகத் தொடங்கியுள்ளது.
இந்த ஒதுக்கீட்டில் 8 தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் அதிக லாபம் அடைந்தன. அந்த 8 நிறுவனங்களில் ரிலையன்ஸ், லூப், எஸ்டெல், ஸ்வான், யுனிடெக் ஆகிய 5 நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை எப்படி பெற்றன என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் முதல் கட்டமாக ஸ்வான், யுனிடெக் நிறுவனங்களின் முறைகேடுகள் வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளன. ரியல் எஸ்டேட் தொழில் நிறுவனமான யுனிடெக், வங்கிகளில் கடன் வாங்கி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
இன்னணொரு பக்கம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற டாடா தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டு வருகிறது. இதற்காக டாடா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்புகிறது சி.பி.ஐ.
அரசியல் - வர்த்தகத் தரகர் நீரா ராடியா மூலம் டாடா நிறுவனம் பெரிய அளவில் ஸ்பெக்ட்ரமில் பலன் அடைந்தள்ளது. ஜி.எஸ்.எம். உரிமத்தை ரூ. 1658 கோடிக்கு பெற்ற டாடா நிறுவனம், சிறிது நாள் கழித்து அதன் 26 சதவீத பங்கை ஜப்பானின் டொகோமா நிறுவனத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது.
இது தவிர டாடா நிறுவனம் சென்னை உள்பட பல நகரங்களில் வாங்கி உள்ள சொத்துக்கள் குறித்தும் ஆய்வு செய்ய சி.பி.ஐ. தீர்மானித்துள்ளது.