Thursday, February 10, 2011

ஓட்டுக்கு பணம் வாங்கினால் உரிமை பறிபோகும்: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

சென்னை : ""ஓட்டுக்கு பணம் வாங்குவோர், தங்கள் ஜனநாயக உரிமையை இழக்க நேரிடும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பேசினார்.

வரும் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் பணிபுரியும் பகுதி நேர செய்தியாளர்களுக்கு, இரண்டு நாள் பயிலரங்கம் சென்னையில் நேற்று துவங்கியது. பயிரலங்கை துவக்கி வைத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பேசியதாவது: சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், ஓட்டளிக்க உரிமையுள்ள அனைவரது பெயரையும், வாக்காளர் பட்டியலில் இடம் பெறவும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற அனைவரும் சுதந்திரமாக ஓட்டுப் போடவும் தேவையான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. ஓட்டுப் போடுவதன் முக்கியத்துவத்தை, ஊடகங்கள் மக்களுக்கு உணர்த்த வேண்டும். தமிழக சட்டசபை தேர்தலுக்காக, மாநிலம் முழுவதும் 54 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் பணியில் மூன்று லட்சம் அரசு பணியாளர்களும், பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசாரும் ஈடுபட உள்ளனர்.


சமீபத்தில் நடந்த பீகார் சட்டசபை தேர்தலை பின்பற்றி, தமிழக சட்டசபை தேர்தலிலும் பணபலம், ஆள்பலம் பயன்படுத்தப்படுவதை தடுக்க தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளது. மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. வாக்காளர்களின் ஓட்டுப் பதிவை உறுதி செய்யும் வகையில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் மூலம் துண்டு சீட்டு தரவும், அதை ரகசியமாக ஒரு பெட்டியில் போடும்படி செய்யவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாதோர், தங்கள் விருப்பத்தை மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் மூலம் தெரிவிக்கும் வசதியை, வரும் தமிழக சட்டசபை தேர்தலில் நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை. தேர்தலில், ஓட்டுக்கு பணம் வாங்கும் கலாசாரம் மாற வேண்டும். ஓட்டுப் போட பணம் வாங்குவோர், எதிர் காலத்தில் தங்கள் பகுதியின் குறைகளை களையும்படி, மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்கும் ஜனநாயக உரிமையை இழக்க நேரிடும். இவ்வாறு பிரவீன்குமார் பேசினார்.


முன்னாள் மத்திய ஊழல் கண்காணிப்பு துறை கமிஷனர் விட்டல் பேசும்போது, "இன்று அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. இந்த ஊழலை ஒழிக்க, நீதித் துறை, தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய கணக்கு தணிக்கை குழுவுக்கு உதவும் வகையில் ஊடகங்கள் செயல்பட வேண்டும்' என்றார். விழாவில், அகில இந்திய வானொலியின் தலைமை இயக்குனர் (செய்தி பிரிவு) மொகந்தி, மாநில செய்தி பிரிவு தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.