Monday, February 21, 2011

குப்பை தொட்டிகளை சி.பி.ஐ., ஆராய்ந்திருக்க வேண்டும்: ஜெ., யோசனை


சென்னை :"சி.பி.ஐ., சிரமம் பார்க்காமல் சென்னை மாநகராட்சியின், பல்வேறு இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளை தோண்டி ஆராய்ந்து பார்த்திருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும், கலைஞர் "டிவி'க்கும் உரிய பூதாகரமான தொடர்புகளை கண்டுபிடித்து வெளிப்படுத்தி இருக்க முடியும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


அவரது அறிக்கை:தேடப்பட்டு வரும் பயங்கரவாதி தாவூத் இப்ராகிமுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள டைனமிக்ஸ் பால்வா குழுமம், முதல்வர் குடும்பத்தினர் 80 சதவீதம் பங்குகளை வைத்துள்ள கலைஞர் "டிவி' க்கு 206 கோடி ரூபாய் பணம் கொடுத்திருக்கிறது என்ற தகவலை கோர்ட்டில் வெளிப்படுத்தியதன் மூலம், மிகப் பெரிய தவறை சி.பி.ஐ., செய்து இருக்கிறது.இது போன்ற சந்தேகத்தை வெளிப்படுத்துவதற்கு முன், கலைஞர் "டிவி' அலுவலகத்தை சோதனை செய்து அங்குள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி இருக்க வேண்டும். கலைஞர் "டிவி'யின் கலைக் கூடங்கள் மற்றும் அலுவலகத்தை உள்ளடக்கிய தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இரவோடு இரவாக உயர் மட்டக்குழுக் கூட்டம் நடந்ததாகக் கூறப்படுகிறது.


இக்கூட்டத்தில் கருணாநிதி மட்டுமல்லாமல் ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு, கலைஞர் "டிவி'யின் தலைமை செயல் அலுவலர் சரத்குமார் ரெட்டி, கருணாநிதியின் உடன் பிறந்தவரது மகன் அமிர்தம், ஆடிட்டர் சிவசுப்ரமணியன், அரசு தலைமை வக்கீல் ராமன், மூத்த வக்கீல்கள், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு ஆகியோர் கலந்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.இரவு 11 மணிக்கு துவங்கிய கூட்டம் மறு நாள் காலை நான்கு மணியளவில் முடிந்ததாம். இந்தக் கூட்டத்தின் போது அண்ணா அறிவாலயக் கூட்டத்திற்கு வெளியே எரிந்து கொண்டிருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டுவிட்டன.


கடந்த 13ம்தேதி, முக்கிய ஆவணங்கள் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டு, பெருங்குடியில் உள்ள திறந்தவெளி குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.கடந்த 15ம் தேதியன்று, ரசீதுகள், பணம் தொடர்பான ஆவணங்கள், ரொக்க செலவுச் சீட்டுகள், பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதுகள், சிறுசிறு துண்டுகளாக கிழிக்கப்பட்டு, சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.நம்பகமான ஆதாரங்கள் அனைத்தையும் அழித்த பின் குற்ற ஆவணங்கள் இருந்த இடத்தை முழுவதுமாக சுத்தப்படுத்தி விட்டு, 206 கோடி ரூபாய் பண பரிமாற்றத்திற்கும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், பெறப்பட்ட பணம் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது என, கனகச்சிதமான ஓர் அறிக்கையை வெளியிட்டார் சரத்குமார்.


இது மட்டுமல்லாமல் மேலும் ஒருபடி மேலே சென்று, சி.பி.ஐ., அல்லது வருமான வரித்துறைக்கோ இதில் ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் கலைஞர் "டிவி' தொடர்பான கணக்குகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்வதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார்.இந்த அழைப்பை ஏற்று தான் சி.பி.ஐ.,யினர் கலைஞர் "டிவி' அலுவலகங்களில் சோதனை நடத்தியது போல் தெரிகிறது. சி.பி.ஐ., சிரமம் பார்க்காமல் சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளை தோண்டி ஆராய்ந்து பார்த்திருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும், கலைஞர் "டிவி"க்கும் உரிய பூதாகரமான தொடர்புகளை கண்டுபிடித்து வெளிப்படுத்தி இருக்க முடியும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.